500 கோடி நிவாரணம் போதுமானதல்ல – சீமான் அறிக்கை – செய்திகள்

0

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் போதுமானதல்ல என்று கூறி நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

”தானே புயலால் கடும் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் மிகவும் குறைவானதாகும். தானே புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் கடலூர், விழுப்புரம், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களி்ல் வாழ்ந்துவரும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பும், ஏழை, எளிய மக்களின் வாழ்விடங்கள் புயல், மழையால் சிதைவுக்குள்ளாகியுள்ளதும் அங்கு இயற்கை ஏற்படுத்திய பேரிடர் ஆக அறிவிக்க வேண்டும் என்று கூறி, ஒட்டுமொத்த இழப்பு 5,175 கோடி ரூபாய் என்றும், அதனை முழுமையாக வழங்கிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரி்ல் வந்து பார்த்து மதிப்பீடு செய்த லோகேஷ் ஜா தலைமையிலான மத்திய அரசுக் குழு, இழப்பு ரூ.4,000 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறிய செய்தி நாளிதழ்களில் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக வெறும் ரூ.500 கோடியை அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. மத்தியக் குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் 50 விழுக்காடாவது இடைக்கால நிவாரணமாக உடனடியாக வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டும்.

இலங்கையில் சிங்களர்கள் வாழும் பகுதிகளில் நிறைவேற்றப்படும் இரயில் திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளிக்கும் மத்திய அரசு, இந்த நாட்டில் இயற்கை பேரிடரால் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களின் துயரத்தைப் போக்க உடனடி நிவாரணமாக ரூ.2,000 கோடியை அளித்து, அதனை பொங்கல் திருநாளிற்கு முன்னர் மக்களை சென்றடையும் வகையில் அளித்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *