சென்னை புத்தகக் கண்காட்சி – 2011
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி), 34ஆவது ஆண்டாக நடத்தும் சென்னை புத்தகக் கண்காட்சி, இந்த ஆண்டில் 2011 ஜனவரி 4ஆம் தேதி தொடங்குகிறது.
பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
ஜனவரி 4ஆம் தேதி தொடங்கும் இந்தப் புத்தகக் கண்காட்சி, 17ஆம் தேதி வரையில் 13 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
பல நூறு பதிப்பகங்கள் கலந்துகொள்ளும் இந்தக் காட்சியில், பல இலட்சம் தலைப்புகளில் புத்தகங்களை வாங்கலாம். இந்த ஆண்டில் வெளியான புதிய நூல்களும் இங்கே கிடைக்கும். வழக்கம் போல் இந்த நாட்களில் இங்கு வாங்கும் புத்தகங்களுக்கு 10 விழுக்காடு கழிவு உண்டு. நாள்தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
இதில் சிறு பதிப்பாளர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைவருக்கும் உரிய வாய்ப்புகளை உறுதி செய்திடுமாறு அமைப்பாளர்களை வேண்டுகிறோம்.
இலட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வு, அமைதியுடன் சிறப்புற நிகழ வாழ்த்துகிறோம்.