வேரா(றா)ன காதல்!
பாகம்பிரியாள்
நம் காதல் உலகின் விதையாய்
இரு என்று கேட்ட போது,
இரு முளையாய் வரும் வரை
காத்திருக்க முடியாது என்றாய்.
இலையாய் இருக்க சம்மதமா
என்ற போது, என்னை உதிரச்
சொல்கிறாயா என்று அழுதாய்!
மலராய் இருப்பாயா என்ற போது,
மாலைக்குப் பின் மங்கிப் போவதில்
மகிழ்ச்சியா உனக்கு என்று அங்கலாய்த்தாய்.
கனியாய் இரு என்ற போது,
காலம் தாண்டி விட்டால்,
கன்றியே விடுவேன் என்று ஏங்கினாய்.
ஏதோ ஒரு வேண்டாத வார்த்தை,
சுருட்டிப்போட்டது நம் காதலை.
நீயின்றி தவிக்கும் போதுதான் தெரிந்தது,
வேராய் இருந்து காதலை வளர்த்த நீயே,
வேறாகி, என் உயிரையும் உறிஞ்சிக் கொண்டிருக்கிறாய் !
படத்திற்கு நன்றி :
http://lovetreephotography.blogspot.in/
வேராகி, பின் காதலுக்கு
வேறாகியதால் வரும் வேதனை..
கவிஞரின் கவித்துவ சாதனை…!
நன்று. தொடரட்டும்…!
-செண்பக ஜெகதீசன்…
காதலுக்கு – காதலர் தாமே எதிரி எனும் பேருண்மையை
பக்குவமாயப் பகிரங்கமாய்ப் பகிர்ந்திருக்கிற நேர்மை பாராட்டுதற்குரியது!
காதலைப் பகிர்ந்து கொண்டவர்கள் இருவராய் – பாரம் சுமப்பது மட்டும் ஒருவராய் –
உண்மையில் காதலுக்கு, பிரிவினை வெளியிலிருந்து வருகிறதா?
இல்லை எனும் சத்தியத்தை அரங்கேற்றியிருக்கிற அற்புதம் பாராட்டுதற்குரியது
இது தியாகமா? இல்லை – தவம்!
பற்பல ஆண்டுகள் கடந்த பின்னரும் பசுமைக் காட்சிகளில் நினைவைப் பொதித்து வைத்திருக்கிற ஆட்கள் ஏராளம் பேர்!
ஆயினும் காதலை வேறேவரோ பிரிப்பதாக ஒரு மாயை – அந்த மாயையை விலக்கியிருக்கின்ற வேதம் – வேகம் – உங்கள் சொற்களில்
உமது எழுத்துக்காய் இதோ ஒரு இசைப் பாட்டு!
பிரிவினை நீயன்றி வேறெவர் செய்தார்?
பார்த்தது -படர்ந்த்தது
தொட்டது – தொடர்ந்தது
நடந்தன யாவும் இன்னமும் சத்யம்!
நாம் பேசிய முதல் நாளே சொன்னேன்
“உன் நினைவே என் மூச்சு” என்று
அன்று சொன்னது சொன்னது தான்
அது இன்னமும் சத்யம்!!
கூடித் திரிந்த அந்தப்
பசுமை நினைவுகள்
ஒன்றா இரண்டா?
அவற்றைச் சேர்த்துச்
சாறு பிழிந்து
அந்தத் தைலத்தால்
என் உள்ளத்து ரணங்களை
ஓயாமல் கழுவிக்கொண்டிருக்கிறேன்
புற்றாய் மாறாமலிருக்க!
விரும்புகிறேன் என்று சொன்னபோது
ஏற்றுக்கொண்ட நான்
விலகுகிறேன் என்றபோதும்
ஏற்றுக் கொண்டேன்!!
அது தான் காதலின் தர்மம்!!
அழுதாய் உண்மையோ பொய்யோ!!
உன்னால் முடிந்தது – நான்?
அழவில்லை – அழுது
காதலை அமங்கலமாக்க
விரும்பவில்லை
அழுது அரற்றிவிட்டு
ஒரு நொடியில் அனைத்தையும்
உதறவும் மறக்கவும்
உன்னால் முடிந்ததே!!
காதல் பறிபோனதைவிட
காதலை, கால்தூசிபோல் உதறிய
உன் ராட்சசம் தான்
அதிக நடுக்கம் தந்தது!!
அன்பு காட்டி
ஆக்கிரமிப்பு செய்து
ஆட்டிப் படைத்துவிட்டு
அம்சமாய்க் கழன்றுகொள்ள
இது என்ன வேடிக்கை விளையாட்டா?
உன் காதல் பயிற்சிக்கு
நானா கிடைத்தேன்?
காதல் பீடத்தில்
நான் பலிக்கிடாவானேனோ?
நம்மைப் பிரிப்பார் எவரும் இல்லை
என இறுமாப்புடன் இருந்தேன்!!
பிரிவினை நீயன்றி வேறெவர் செய்தார்?
நீ முடிந்த பின்னல் வலை
நீ வெளியே நான் உள்ளே!!
நீ செய்த சாகசங்களும்
சாமர்த்தியங்களும்
அப்பப்பா!! விடுவித்துக் கொள்ள
இத்தனைத் தயாரிப்பா?
எங்கு கற்றாய் இந்த வித்தையை?
உன்னால் முடிந்ததைச் செய்ய
என்னால் முடியவில்லை நம்
காதல் சத்யம் எனும்
வேதம் மட்டுமே என்னுள்!
“புழுவாய்த் துடித்தேன்”
என உன்போல்
பொய் சொல்ல மாட்டேன்
ஆயிரம் சிலுவைகளின் வேதனையை
என் ஒற்றை இதயத்தில்
தாங்கினேன்!!
நம் காதல் சத்யம்!!
காலம் உடுத்திய காதல் மூப்பு! நெஞ்சக்
கலத்துள் மூண்ட அணையா நெருப்பு
வயதும் ஆண்டும் ஆற்றாத் துயரம்
“பார்க்குமிடமெல்லாம்
நீக்கமற நிறையும்”
மறையா நினைவுகள்
நான் இன்னமும் உயிரியாய்
உனக்காய் உண்மையாய்!!
காரணம் -உன் நினைவே என் மூச்சு!!