இராஜ ராஜேஸ்வரி

சர்வதேச அளவில் பெண்மையைப் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட்ட இந்த மகளிர் தினம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் சாதனை புரிய முயலும் பெண்களின் மீது மரியாதை, மதிப்பு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாகக் கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் போன்ற பல நாடுகள் விடுமுறை தினமாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்துப் பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளைக் கொண்டாடும் வகையிலும் கடைப்பிடிக்க வேண்டும். மகளிர் தினக் கொண்டாட்டங்களில் குறிப்பாக உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான பெண்ணிலை வாதச் செயற்பாட்டாளர்கள் தனியாகவும் குழுக்களாகவும் அமைப்புக்கள் சார்ந்தும், அக்கபூர்வமான செயல் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைவரும் ஒரு சேர இணைந்து முன்னேற்றப் பாதையில் அணி வகுத்துச் செல்வோம்!.. நம்மை நாமே வலுப்படுத்திக்கொண்டு, அதிகாரத்தில் பங்கு பெற நமக்கு நாமே பாடுபட்டு அதன் மூலம் வலுவான இந்தியாவை உருவாக்குவோம். காற்றில் ஏறி விண்ணையும் சாடி விட்டார்கள் இன்று பெண்கள்-கல்பனா சாவ்லாக்களாக. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று அஞ்சியிருந்த காலம் கப்பலேறிப் போய் விட்டது.

கல் உடைப்பதிலிருந்து, கற்றுக் கொடுப்பதிலிருந்து, சிலை வடிப்பதிலிருந்து, சில்லறை வியாபாரம் செய்வதிலிருந்து, சுய உதவிக் குழுக்கள் மூலம் தொழில் வல்லுனர்களாகவும், சாதனை படைத்துச் சிகரத்தை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளனர் இன்றைய மகளிர். எழுதுங்கள் இனி உலக ஏடுகளில் – புதியதோர் உலகம் படைக்கப் புறப்பட்டு விட்டனர் எங்கள் மகளிர் என்று. பாடுங்கள் இனி புத்தம் புதியதோர் உலகம் படைக்கப் புறப்பட்டு விட்டனர் பாவையர் என்று..

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிந்த காலம் மலையேறிப் போகட்டும்..

எத்துறையிலும் மகளிரின் சாதனைத் தடத்தைப் பார்க்கப் புறப்படு பெண்ணே புவியசைக்க

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”

உலகில் நடைபெறக் கூடிய அனைத்துச் செயல்களையும் ஆக்குபவளும் பெண்ணே, தீயவற்றை, அநீதியை அடியோடு அழிப்பவளும் பெண்ணே. அதனால்தான் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற கூற்று இன்று வரை நிலவி வருகிறது.

பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெண்களே நாட்டின் கண்கள் என்று போற்றிப்பாடுவோம். காலம் காலமாகக் கண்ணீருடன் வாழ்ந்து வரும் பெண் இனம், காத்து வரும் கண்ணிய உணர்வால்தான் இந்த மண்ணில் மனிதநேயம் உயிர்த்து இருக்கிறது. மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் முன்னேற்றமே, ஒட்டு மொத்த உயர்வுக்கு வழி வகுக்கும்.

பெண்ணுரிமைக்காகப் போராடிய போராளிகளைப் பற்றியும் பெண்கள் போர்க்குணத்துடன் கட்டியமைத்த இயக்கங்கள் பற்றியும் இந்நாளில் நன்றியுடன் நினைத்துச் சிறப்புச் செய்ய வேண்டும். கடந்த கால வரலாற்றை, அதில் நடந்த தவறுகளைத் திறந்த மனதோடு இரு பாலாரும் கற்று ஆய்ந்து தீர்வைக் காண வேண்டும், கண்ட பின்பு கடந்த காலத்திலேயே உழல்வது அவசியமில்லை.

யாரையும் நம்பியதில்லை தன்னையே நம்புகிறாள்! ‘தன்னம்பிக்கை’ இருப்பதால். மதியோடு பெண் இருக்கிறாள், அதனால் தான் மதிப்பெண்ணிலும் முதலிடம் பெற்று மதிப்புப் பெறுகிறாள்! மக்கள் தொகையில் சரி பாதியான பெண்களின் முக்கியத்துவத்தைப் புறக்கணிக்கும் எந்தச் சமூகமும் வளர்ச்சி என்னும் நிலையை அடையாது.

அன்பிற்கு அடையாளமாகயும், தெய்வங்களாகவும், தெய்வத் தன்மை சூட்டப்பட்டாலும், பெண் சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே இந்தியச் சமூகம் வைத்திருந்தது என்பது வரலாற்று உண்மை.

பெண்களின் பேச்சு சுதந்திரம் என்பது கூட சமூக அமைப்பைப் பாதிக்காத வரையிலும் அனுமதிக்கப்பட்டது. பெண்ணின் சிந்தனைகளைத் தீர்மானிக்கும் உரிமையை நீண்ட நாட்களுக்கு இந்தச் சமூகமே வைத்திருந்தது.

அடிமைப்படுத்தப்பட்ட நிலையைப் பெருமை மிகுந்ததாகப் பெண்களை நம்ப வைத்ததும் இதன் அடிப்படையிலே. கடந்த நூற்றாண்டு பல மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தியது. கல்வி வாய்ப்புகளும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திய பொருளாதாரச் சுதந்திரமும் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *