காதல் வ(வே)லை!
பாகம்பிரியாள்
கண்களால் எனைச் சிறை பிடித்த நீ,
காதல் வலையில் உருட்டி விட்டாய்.
வலையின் வாய் திறந்தே கிடந்தது,
“வெளியில் வந்து விடுவேன்” இது நான்.
சிறிதும், பெரிதுமாய் வலையின் கண்கள்.
சிறிய கண் வழியே நினைவுகள் போகின்றன
என்கிற மகிழ்ச்சியில்
பருத்து அவை பின் தங்கி விடுகின்றன.
பெரிய கண்ணைப் பற்றி நின்ற நினவுகள்
வருந்தி உழலும் வேகத்தில், கூடவே
வலையின் கண்ணும்
சுருங்கி விடுவதால், நினைவுகள் முட்டித் தவிக்கின்றன. .
ஒன்று என்னை வரித்து விடு.
இல்லையெனில்,
என் நினைவுகளை விடுதலை செய்து விடு.
இளைத்தலும், பருத்தலும் உடலுக்குத்தான் பொருத்தம்.
நினைவுகளுக்கென்று வருகையில்,
அவை மோதும் வேகத்தை
நெஞ்சம் தாங்குவதில்லை என்பதை நீ அறிவாயோ?
படத்திற்கு நன்றி:http://romanticlovepictures.com/love-pic-Girl_in_love_hurt.php