இராணி மங்கம்மாள்
தி.சுபாஷிணி
தமிழ் நாட்டை ஆண்ட நாயக்கர் வழி வந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள் ஆவார். இவரது ஆட்சி போர்க்களமும் குழப்பங்களும் நிறைந்திருந்ததால், 1682இல் மன்னர் இறந்தார். உடனே தன் மகன் முத்து வீரப்பநாயக்கரை மன்னராக்கினார் மங்கம்மாள். ஆனால் நாட்டை ஆண்டது மங்கம்மாள்தான்.
கி.பி. 1686இல் தஞ்சை மராட்டிய மன்னர் எக்கோஜியும், இராமநாதபுரம் சேதுபதியும் படையெடுக்க முயன்றபோது,மங்கம்மாள் அவர்களைத் தம் இராஜ தந்திரத்தால் முறியடித்தார். எதிர்பாராதவிதமாக 1687இல் தம் மகன் இறந்த உடனே அவனது மனைவியும் உடன்கட்டை ஏறினார்.
1687இல் தம் பேரரசின் பிரதிநிதியாக இராணி மங்கம்மாள் ஆட்சியில் மகாராணியாய் அமர்ந்தார். இதை அந்நாடே விழாவாகக் கொண்டாடியது. இராணி மங்கம்மாள் நிதானமாகவும் சிறப்பாகவும் அரசியல் நடத்தினார். நாட்டின் பாதுகாப்பிற்காக ஔரங்கசீப்பிற்குத் தாம் கப்பம் கட்ட ஒப்புக் கொண்டார். இதனால் இவருடைய எதிரிகளும் துரோகிகளும் அஞ்சி விலகி நின்றனர்.
மதுரைப் பேரரசுக்குப் பல நாடுகள் கப்பம் கட்டின. திடீரென்று திருவிதாங்கூர் நாட்டு மன்னன் ரவிவர்மன் கப்பம்கட்ட மறுக்க, இவரும் அவர்மீது படையெடுத்தார். முதலில் தோல்வியுற்றாலும் மற்ற மன்னர்களின் உதவி பெற்றுப் பின்னர் வெற்றி பெற்றார். போரில் கவனம் செலுத்திடினும் இவரது ஆட்சி சிறப்பாக அமைந்தது என்றே கூறலாம். இவர் அனேக கோவில்களுக்குத் திருப்பணி செய்தார். கோயில்களும் கட்டினார். குளங்களை வெட்டி, நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கினார். தொலைநோக்கோடு மிகப் பெரிய சாலைகளை அமைத்து, சாலையின் இரு பக்கங்களிலும் நிழல் தரும் மரங்களை நட்டார். இன்றும், மதுரை மாவட்டத்தின் தென்பகுதிகளில் ‘மங்கம்மா சாலை’ என்று அழைக்கப்படுகிறது.
இதுதவிர மங்கம்மாள் நீதி தவறாத சிறந்த ஆட்சி புரிந்தார் என்பது உயர்வானது. இன்றும் தென் மாவட்டங்களில், வீரமான மங்கையரை மங்கம்மாவிற்கு
ஒப்பிட்டு அழைப்பார்கள்.
படத்திற்கு நன்றி :
http://www.mabeats.com/2008/02/rani-mangammalthe-queen.html