முகில் தினகரன்

ஆன்மிகத்தில்  மேன்மைகண்ட  அருங்குணத்தார் – தம்
அகத்திலென்றும்  அன்புநிறை  நல்மனத்தார்
நானென்ற  நச்சகந்தை  நாளுமின்றி  –  என்றும்
நாடுயர  நலம்தேடும்  நல்இனத்தார்

வள்ளுவனார்  வகுத்தளித்த  வாழ்நெறியில்   –  இவ்
வையகமே  வாழ்த்திநிற்கும்  வான்குணத்தார்!
அள்ளத்தான்  குறையாதஅருங்;  கவியால் – பல
கள்ளத்தனம்  கரைத்திட்ட  கண்ணியத்தார்!

வந்தோரை  வாழவைக்கும்  செந்தமிழர் – இவர்
விருந்தோம்பல்  பண்பினுக்கோர்  உதாரணத்தார்!
நொந்தோரும்  நிமிர்ந்திடவே  நேயங்காட்டி – தினம்;
இல்லார்க்கு  ஈந்துதவும்  இரக்கத்தார்!

நாகரீகத்  தொட்டில்களின்  நாற்றமுணர்ந்து  – அதை
நாடாதுநல்  லறங்காக்கும்  நற்பண்பாளர்!
மோகத்  தேடல்களில்  மூழ்கிக்கிடக்கும்  – மேலைக்
கலாச்சாரந்  தனைவெறுக்கும்  கனிமனத்தார்!

பக்தியிலக்கியப்  பரவசங்களில்  பண்பாடுகண்டு  – அதைப்
பாரெங்கனும்  பறைசாற்றும்  பாரம்பரியத்தார்!
முக்திகண்ட  மூத்தோர் வழிநடந்து   –   பல
வித்தைகளை  வெளிக்கொணர்ந்த  சித்தரினத்தார்!

ஓங்குதமிழர் பண்பாட்டுக்கோர்  ஒப்பீடேது  – இதை
உணர்வுள்ளோர் மறுத்திடவே  இயலுமாகூறு!
ஈங்கிதனை  உணர்ந்திடணும்  இத்தலைமுறையும்  –  அவர்
இயன்றவரை  காத்திடனும்  இன்னுயிரீந்து!

படத்திற்கு நன்றி               

http://www.pariharam.com/     

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தமிழர் பண்பாடு

  1. முன்னைப் பெருமை பாடி
          மூத்தோர் மகிமை பாடி,
    கன்னல் தமிழது கொண்டே
          கடலென கவிதை மூலம்
    இன்னல் வராது காக்க
          இளையோர் அறியச் சொல்லும்
    மின்னல் கவியாம் முகிலோன்,
          முயற்சி வெல்க வெல்கவே…!
                         -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *