பாரதத்தைத் தொடர்ந்து ராமாயணம் !

1

 

மஹாபாரதத்தை அப்படியே மூலத்தில் உள்ளது உள்ளபடி இலட்சக்கணக்கான பாடல்கள், 18 பர்வங்கள் அப்படியே தமிழ் உரைநடையில் முதன்முறையாகத் தமிழில் கொண்டுவந்தவர் ஒரு பெரும் சாதனையாளர். 1906 ஆம் வருஷம் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 25 வருஷ உழைப்பில் திரு ம வீ  ராமாநுஜாசாரியார் செய்த சாதனை அந்தத் தமிழாக்கத் தொகுதிகள்.

இத்தனைக்கும் 1906ல் ஆரம்பிக்கும் போது ஜயம் என்னும் மஹாபாரதம் ஜயமாக நிறைவேறுமா என்று ப்ரசனம் பார்த்தார். ஜோஸியர் எழுதியே தந்துவிட்டார். ‘முடிவு வரை போகாது’ என்று. அந்தக் காகிதத்தை மடித்து ஓர் உறையில் இட்டார் ம வீ  ரா. அதை அவர் மீண்டும் பிரித்துப் படித்துக் காண்பித்தது நண்பர்களுக்கு 25 வருஷம் கடந்து முழு தொகுதிகளும் வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்த பின்னர்தான்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் – என்னும் திருவள்ளுவர் வாக்கு பலித்தது.

அதற்குப் பிறகு 1952ல் திரு சிவராமகிருஷ்ணய்யர் ம வீ ரா இடமிருந்து உரிமையை வாங்கி ஒரு அச்சு போட்டார். அதற்குப் பின் மறைந்துவிட்ட அந்தத் தமிழாக்கத் தொகுதிகளைத் திரு சிவராமிருஷ்ணய்யரின் பேரனான திரு S வெங்கடரமணன் என்பவர் 9 பகுதிகளாக முழு நூலையும் அப்படியே நம் காலத்தில் கொண்டு வந்து விட்டார். இதைப் பற்றி முன்னரே மின் தமிழில் எழுதியுள்ளேன் ’பாரதம் கொணர்ந்த பகீரதர்’ என்னும் தலைப்பில் — http://groups.google.com/group/mintamil/msg/c77d889a41f68c87

சாதனை செய்தவர்களின் கை சும்மா இருக்காது என்பார்கள். மஹாபாரதம் 9 வால்யூம்கள் போட்டு அவையே இன்னும் முழுக்க விற்கவில்லை. அதற்கே உதவி தேவைப் படுகிறது. இதில் அடுத்து அடுத்துச் சாதனை புரிகிறார் திரு வெங்கடரமணன்.

பாரதம் போட்டுவிட்டுச் சும்மா இருக்கலாமா? அதில் வரும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு அனைத்து மத ஆசாரியர்களும் உரை எழுதியுள்ளார்களே! அந்த ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை ஸ்ரீ சங்கர பாஷ்யம், ஸ்ரீ பராசர பட்டர் பாஷ்யம் என்னும் இரு சித்தாந்த உரைகளுடனும் எளிய தமிழில் மொழிபெயர்த்துப் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்து, அந்தக் காலத்தில் ம வீ ரா செய்து வைத்த தமிழாக்கம் சங்கர பாஷ்யம், பட்டர் பாஷ்யம் இரண்டு உரைகளுக்கும் தமிழாக்கம் – இவற்றையெல்லாம் அப்படியே ஒரு நூலாக இப்பொழுது கொண்டு வந்துவிட்டார் திரு வெங்கடரமணன். வடமொழி தெரியாது, நாங்க எப்படி அதையெல்லாம் படிப்பது என்ற கவலை இனி இல்லை.

அதோடு விட்டாரா? ஸ்ரீவால்மீகி ராமாயணம் போடாமல் பாரத நாட்டு இதிகாசங்கள் நிறைவடையுமா? ராமாயணத்தையும் தமிழ் மொழிபெயர்ப்பு கொண்டு வர வேண்டும் என்று தேடி, 1900ல் பண்டிதர் ச. மகா. நடேச சாஸ்திரிகள் மிக எளிய தமிழில் மொழிபெயர்த்ததைக் கண்டு பிடித்து அதையும் ஆறு புத்தகங்களாகக் கொண்டு வந்துவிட்டார். திரு நடேச சாஸ்திரிகளின் நூலைக் கண்டு பிடிக்க அவர் அலைந்ததும், பின்னர் ஏனாத்தூர் பல்கலைக் கழகத்தில் தேடிய போது எதேச்சையாகக் கிடைத்ததும் பெரும் கதையாகும்.

1900ல் முதலில் தமிழ் மொழிபெயர்ப்பு ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திற்கு எழுதும் போது திரு நடேச சாஸ்திரியார் எழுதுகிறார் —

“ஸம்ஸ்க்ருத அப்யாசம் இல்லாதவர்கள் பிறர் உதவியைக் கொண்டே அறிய வேண்டியிருக்கிறது. எல்லாரும் பண்டிதர்களுக்குப் பொருள் கொடுத்துக் கேட்கச் சக்தி உள்ளவர்கள் அல்லர். போதுமான அவகாசமும் கிட்டுவது அரிது. ஆகையால் இதனை மொழிபெயர்த்தால் பலருக்கும் உபயோகமாயிருக்குமென்று கருதிப் பரோபகாரச் சிந்தையுடன் மொழி பெயர்க்கத் தொடங்கினோம். கூட்டியும் குறைத்தும் மொழிபெயர்க்காமல் கறந்த பால் கறந்தவண்ணம் வால்மீகி சொன்னவாறே தமிழில் எழுதியிருக்கின்றோம். “

இப்பொழுது இந்த நூல் திரு வெங்கடரமணன் தயவினால் நம் கைக்கு வந்துவிட்டது.

இந்த நூலையும் என் கையில் தந்துவிட்டு, ‘சார்! உங்க உதவி வேண்டும். இதைப் பற்றிப் பிறருக்கும் சொல்லவேண்டும்’ என்கிறார் திரு வெங்கடரமணன். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. நான் அல்லவா ஐயா உமக்கு நன்றி சொல்ல வேண்டும்! மிகப்பெரும் உதவி செய்துவிட்டு நீரா கெஞ்சிக் கேட்பது? என்று.

அவருடைய செல் நம்பர் — திரு S  வெங்கடரமணன், 9894661259.

10 % தள்ளுபடி தருகிறேன் என்கிறார் முயற்சி எடுத்துத் தொடர்பு கொள்வோருக்கு.

காந்தி ஜயந்தி அன்று இதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பண்டித நடேச சாஸ்திரியாரின் எளிய தமிழ் நடை அருமை. மூலத்திற்கு ஒட்டிய மொழிபெயர்ப்பு என்பது மிகப்பெரும் உதவி. எளிமையான நடையில் அதை அவரால் சாதிக்க முடிந்தது வியப்பு.

அதுவுமில்லாமல் பண்டித நடேச சாஸ்திரியாரே குமார சம்பவம், ரகுவம்சம் ஆகியவற்றையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்திருப்பதாகத் தெரிகிறது. அந்த நூல்களை வைத்திருப்போர், அல்லது ஆன்லைனில் இருந்தால் அதன் சுட்டிகள் அறிந்தோர் திரு வெங்கடரமணனுக்கு உதவலாம், நூலாக வெளிவரும்.

பலரும் கேட்டதற்கிணங்க அவருடைய தற்சமயம் முகவரியைத் தருகிறேன். செல்லில் தொடர்பு கொண்டு நிச்சயித்துப் பின் போவது சிறந்தது —

Sri S Venkataraman
New No 9, Old No 135,
Nammalavar Street
East Tambaram 600059
cell 9894661259

 

மிக அரிய நூல்கள், தமிழில் செம்பதிப்புகளாக…

ஸ்ரீ மஹாபாரதம் :

மஹாபாரதத்தை அப்படியே மூலத்தில் உள்ளது உள்ளபடி லட்சக்கணக்கான பாடல்கள், 18 பர்வங்கள் அப்படியே தமிழ் உரைநடையில் முதன்முறையாகத் தமிழில் கொண்டு வந்தவர் ஒரு பெரும் சாதனையாளர். 1906 ஆம் வருஷம் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட  25 வருஷ உழைப்பில் திரு ம வீ  ராமாநுஜாசாரியார் செய்த சாதனை அந்தத் தமிழாக்கத் தொகுதிகள்.

18 பர்வங்கள் 9 பகுதிகளாக , மொத்தம் 9,000 பக்கங்கள்.

ஸ்ரீமத்வால்மீகி ராமாயணம் :

தமிழாக்கம் : பண்டித ஸ்ரீ நடேச சாஸ்த்ரிகள்
2,250 பக்கம் ரூ 900/-
ஸுந்தர காண்டம் மட்டும் ரூ90/-

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் :
ஆதி சங்கரர், ஸ்ரீ பட்டர் உரைகள்

தமிழாக்கம் : ம. வீ . ராமாநுஜாசார்யர்
விலை : ரூ 180/-

கிடைக்குமிடம் :

Sri S Venkataramanan
New No 9, Old No 135,
Nammalavar Street
East Tambaram : 600059

cell +91 9894661259

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாரதத்தைத் தொடர்ந்து ராமாயணம் !

  1. ஐயா, தயவுசெய்து இது போன்ற தகைமைசால் நூல்களை மின்வடிவிலும் வெளியிடச் சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *