கட்டுக்கடங்காத வெள்ளம்!
இசைக்கவி இரமணன்
காலு வச்ச எடமெங்கும் தாமரை
கையி தொட்ட எடமெங்கும் பூமழை
கண்ணு பட்ட எடமெல்லாம் பெளர்ணமி
கன்னு முட்ட முட்டவரும் பால்மடி
இவ எட்ட முடியாத பைரவி
எவனும் கிட்ட நெருங்காத பேரொளி
அவ சுட்ட எடமெங்கும் பொட்டலே
அது தொட்ட கணத்துல பூக்குமே
இது கட்டுக் கடங்காத வெள்ளமே
அதைக் கட்டத் துடிக்குது உள்ளமே
தென்றல் தொட்டு விழுந்தது பட்டு மலரொன்று
போகுது ஊர்கோலமே!
இனி திக்குத் தெசெயொண்ணுமில்லயே
இதில் திரும்ப வழியொண்ணுமில்லயே
இதில் இன்பமும் துன்பமும் வண்ணமே
அதில் வண்ணங்கள் ஒவ்வொன்றும் ராகமே
எந்தன் நட்டநடு நெஞ்சில் பைரவி
அது பட்டப் பகலினில் ராத்திரி
தங்கம் கொட்டிக் கெடக்குது கொல்லையில்
உயிர் பஞ்சுப் பறக்குது கொள்ளையில்
இன்னும் எத்தனை எத்தனை சென்மமோ?
இந்த அன்புக்குப் பேரென்ன வன்மமோ?
அந்த முத்துச் சிரிப்பியின் பித்தத்திலே
இந்தச் சத்தமும் சங்கீதமோ?
நான் உங்களுக்கு வழி சொல்லவா?
அட உங்களையும் சுழல் கொள்ளவா?
தேன் சின்னத் துளியில்ல ஊருணி
வான் அந்தத் துளிக்குள்ள முக்குளி
அவ வச்சுக்கிட்ட பேரு பைரவி
அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் காவிரி
அட கண்ணில் பெருகுது கங்கையே
அடி காலை அளந்தவன் தங்கையே
அம்மோய்! அண்ட பகிரண்டம் பம்பரம்
அங்கு ஜனன மரணங்கள் சாமரம்
என்னைக் கொண்டவளே உன்னைக் கண்டொருநாள் ரெண்டு
வார்த்தை சொன்னாலிது தீருமோ
அவ ஊரறியாத பயங்கரி
வந்து ஊட்டி வளர்க்கிற சங்கரி
அவ வச்சதுதானிங்கு சட்டமே
அந்தச் சட்டமெல்லாம் அவ இட்டமே
உயிர் உன்மத்த உச்சமே பைரவி
அதில் ஊறிக் கெடக்குது என்விதி
இனி மிச்சமொண்ணுமில்ல சங்கதி
அட மீனுக்கு முக்கெல்லாம் சந்நிதி
அந்தக் காத்துல வாசனை என்கதி
அவ காலில் கெடப்பதே நிம்மதி
அந்த உச்சாணிக் கொம்புல உக்காந்த பைங்கிளி
பேச்சில் அறுந்தது சங்கிலி!
காலு வச்ச எடமெங்கும் (இசை வெள்ளத்தில் மூழ்கித் திளைக்க)
படத்திற்கு நன்றி :
http://srisubramaniamthroupathai.webs.com/srithroupathaimahashakti.htm#542691942
கட்டுக்கடங்காத கவிதை வெள்ளத்தில் மூழ்கித் திளைத்து விட்டேன். ஓசை நயம் மிகுந்த கவிதைக்கு நன்றி ஐயா!