நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-19

2

பெருவை பார்த்தசாரதி

 

கடந்த 01-10-12 அன்று “முதியோர்களின் நிலை” என்ற தலைப்பில் வெளியான தனிக்கட்டுரையோடு (https://www.vallamai.com/literature/articles/26855/), இந்தத் தொடரையும் சேர்த்து வாசிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தோடு இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். 

ஏழை, பணக்காரன், விலங்குகள், பறவைகள் என்ற பேதமில்ல்லாமல், மண்ணுலகில் பிறவி எடுத்த அனைவருக்கும் ‘முதுமை’ என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி முதுமையில்  துன்பங்களையும் சேர்த்து விடுகிறது. பல குழந்தைகள் அல்லது ஒரே ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஒழுக்கத்துடனும், கட்டுப்பாடு, நற்பண்புகள் கொண்டவனாக வளர்த்து விட்டால், அது முதுமையில் அனுபவிக்கும் பல இன்னல்களுக்குத் தீர்வாக அமைந்துவிடும். 

எங்காவது நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பத்தில் நாமும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் விஷயங்களில் எத்தகைய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?… ‘தான் பெற்ற குழந்தைகள், தாங்கள் சொல்லுவதைக் கேட்க மறுக்கிறார்கள்’ ‘இப்போது இருக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் விரும்புவதைச் செய்வதில்லை’, ‘இன்றய இளையதலைமுறையினர் தவறான பாதையில் செல்லுகின்றனர்’  போன்ற செய்திகளே அதிக அளவில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் செய்திகளில் இடம்பெறுகின்றன. பெற்றோர்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொள்ளுகின்ற பிள்ளைகள், பெரியோர்களின் அறிவுரையை ஏற்க மறுக்கும் சந்ததிகள் இவர்கள் அனைவரையும் அவரவர் குடும்பத்திலேயே அடையாளம் கண்டுகொள்ளமுடியும். ஒரு குடும்பத்தில் ஒருவர் தவறாக நடந்துகொள்ளும்போது அதை அந்தக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் திருத்த முயற்சித்து, குடும்பம் பிரிந்து விடுவதும் சகஜம். ஒரு பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை, சகோதரர்கள் ஒன்று கூடிச் செய்வதில்தான் பெரும்பாலும் சிக்கல்கள் தோன்றுகின்றன. குடும்பத்தை நல்வழியில் நடத்திச் சென்ற வயதான முதியவர்களை யார் வைத்துக் காப்பாற்றுவது?….என்ற தருணத்தில்தான், அவர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையையும் தேவைப்படுகிறது.  மதிப்பு மிகுந்த இத்தகய வழிகாட்டலுக்குச் செவிசாய்க்க மறுப்பவர்களுக்கு இதிகாச புராணங்களில் வரும் கதாபாத்திரங்கள் வழிகாட்டுகின்றன.          

வளர்த்த பிள்ளைகளால் கைவிடப்பட்டு, அந்திமக் காலத்தில் உயிர் ஊசலாடும் போது, ஆறுதல் சொல்ல பெற்ற பிள்ளகளே வரவில்லை என்கிறபோது வேறு யார்?….வருவார்கள்.  முக்காலமும் உணரும் முனிவர் போல, இதையெல்லாம் முன்பே உணர்ந்ததுபோல் நமது கவியரசர், 1968ல் வெளிவந்த ‘எங்க ஊர் ராஜா’ என்ற படத்திற்காக எழுதிய

‘பெட்டியிலே பணமில்லே, பெத்தபுள்ளே சொந்தமில்லே,

தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு,

பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளையின் மனமே கல்லம்மா…….’ 

என்ற பாடல் வரிகளின் முடிவில் 

சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே”

என்று எழுதியிருப்பார். இம்மாதிரி பாடல்கள் வேண்டுமானால் முதியோரின் சங்கடங்களுக்குச் சற்று நேரத்திற்கு ஆறுதல் தரும்.         

உயிரோடு இருக்கும் போது, பெற்றோர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்தாலும், இறந்த பின்னும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் தொடருகிறது. தன்னைப் பெற்றெடுத்த தாய், தந்தையர் உயிரோடு இருக்கும்போது அவர்களைக் காப்பதும், காலமானபின் அவர்களுக்கு ‘திதிகளைச்’ செய்வதன் மூலம் தொடர்ந்து அவர்களுக்கு மரியாதை அளிப்பதாகக் கூறுகிறார் ‘ஆதிசங்கரர்’. கடமைகளிலேயே மிகச் சிறப்பான கடமை என்பது தனது பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைதான் என்பதை, புராண, இதிகாசங்கள் அவ்வப்போது நமக்கு வலியுறுத்தி உள்ளன. வேத நூல்கள், மனிதன் கடைபிடிக்கவேண்டிய  அறநெறிகள் பற்றிக் குறிப்பிடும்போது, உறவினர்கள் மேல் வைக்கும் பாசத்தையும், பரிவையும், பற்றிக் குறிப்பிடத் தவறுவதில்லை. 

பன்னிரண்டு ஆண்டுகள் வனவாழ்வு, ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை என்ற துன்பங்களை அனுபவித்த போதும், உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்பினார் தருமர். குடும்ப ஒற்றுமைக்காக, தருமரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர் தம்பியர் அனைவரும். ஒவ்வொரு முறையும் அதர்மத்துக்குத் துணைபோன உறவினர்களை அழிக்கக் கொதித்தெழுந்தனர் தம்பிமார்கள்.  “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” அரசுரிமைக்காக ஒரே குடும்பத்தில் பிறந்த உறவினர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை உலகமறிந்தால், நாம் எப்படி உலகத்தாரின் நலனுக்கு வழிகாட்டமுடியும்?….என்று சமாதானம் சொன்ன தருமரின் சொல்லுக்கு தம்பிமார்கள் அனைவரும் கட்டுப்பட்டது எதற்காக?….என்பதைச் சற்று சிந்தித்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். இன்று கூட கிராமப்புறங்களில் ஒரு குடும்பத்தில் முதலாவதாகப் பிறக்கும் ஆண்குழந்தை, அக்குடும்பத்துக்குக் குலவிலக்காய் இருந்து, குடும்ப நலத்திற்கும், தனது சகோதர, சகோதரிகளிக்கு உற்ற துணையாக இருந்து குடும்பத்தை நல்வழியில் நடத்திச் செல்வான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் “தருமன்” என்ற பெயரைச் சூட்டுவதை வழக்கத்தில் கொண்டிருக்கிறார்கள். 

பிள்ளைகளின் குணநலன்கள் சிறப்பாக அமைந்துவிட்டால், அதைவிட தாய் தந்தையருக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி வேறு ஒன்றுமில்லை. இதற்கு சிறுவயது முதலே அவர்களுக்கு நீதிநெறிகளை எடுத்துச்சொல்லி, இளவயதிலேயே அவர்கள் மனதில் நற்சிந்தனைகளை விதைக்க வேண்டும் என்பதை நமது முன்னோர்கள் நமக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். மராட்டிய மன்னன் சிவாஜியும், கவி தாகூரும், மஹாத்மாவும் இளமைக் காலத்திலேயே இத்தகைய பாக்கியத்தைப் பெற்றதால்தான், பின்னாளில் உலகம் போற்றும்படி வாழ்ந்தார்கள்.         

வேதங்கள் காட்டுகின்ற வழிகள் தவிர, பதினெண் புராணங்களும், காப்பியங்களும், மனிதன் பின்பற்றவேண்டிய பல நன்னெறிக் கோட்பாடுகளையும், போதனைகளையும் அளவில்லாமல் அள்ளி வழங்கியிருக்கின்றன. மகாபாரதத்தில் தாய்தந்தையரின் மகிழ்ச்சியே தன்னுடைய மகிழ்சியாகக் கருதிய ஒரு உத்தமரின் வாழ்க்கை எவ்வாறு அமைந்தது?….தந்தைக்காக தன் வாழ்க்கை முழுவதும் துணையின்றியே வாழ்ந்தான். அரசனாக இருந்த அவனுடைய தந்தை, ஒரு பெண்ணை விரும்பியபொது, அப்பெண் ஒரு வாக்குறுதியை தனக்கு அளித்த பிறகே அவனை மணக்க முடியும் என்பதை வலியுறுத்தினாள்.  தனக்குப் பிறக்கும் வாரிசுக்கே அரசுரிமை அளிக்க வேண்டுமென்பதே அவளுடைய நோக்கம்.  இதனைக் கேள்வியுற்று செய்வதறியாது திகைத்தான் மன்னன். அவனுடைய மூத்த மகன், தந்தையின் விருப்பத்திற்காக, வாரிசுரிமையை விட்டுக்கொடுப்பதற்காக, தனது வாணாள் முழுவதும் மணமுடிக்காமலேயே வாழ்ந்து காட்டினான். குடும்ப நலம்தான் பெரிது என்று கருதியதால், குடும்ப ஒற்றுமைக்காக தம்முடைய தன்னுடைய வாக்குக்குக் கட்டுப்பட்டு, ஒருபோதும், ‘தனது உரிமை’ என்று எதையும் வாழ்நாள் முழுவதும் கோரவில்லை என்பதை இங்கே குறிப்பில் கொள்ளவேண்டும். பின்னாளில், உலகுக்கே நீதி நெறிகளை எடுத்துச் சொல்லும் “பிதாமகர்” என்று உலகத்தாரால் போற்றப்பட்டார் “வீடுமர்”. 

பொருளாதார வசதியுடன், பணமும், உடலில் சக்தியும் இருக்கின்ற வரையில்தான் இவ்வுலகில் மதிப்பு இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஒரு காலகட்டத்தில் “உன்னால் ஏதாவது பிரயோஜனம் உண்டா”?….என்ற கேள்விக்கான பதிலைப் பொருத்துத்தான் அவரவர்களின் வாழ்க்கை முறையும் அமையும். பெற்ற பிள்ளைகள் கூட தாய் தந்தையருக்குச் செய்கின்ற பணிவிடைகளை ஒரு சுமை!… என்று நினைக்கும் இன்றய சூழ்நிலையில்  பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை தவறாத கண்ணியனுக்கு, ஒரு உதாரணம் ஒன்றையும், இதிகாசங்களிருந்து எடுத்துக் கூற விரும்புகிறேன். 

வயோதிக பருவத்தில், உடல் நலமின்றி, சக்தியற்று படுக்கையில் இருந்த தாய் தந்தையர்களை மிகவும் அன்போடும், மகிழ்ச்சியோடும் தெளிவான சிந்தனையோடும் ஒருவன் கனிவோடு, முகம் சுளிக்காமல் பொருப்பாகக் கவனித்து வருவதை அந்நாட்டு மன்னன் கேள்விப் பட்டு அவனைச் சந்திக்க அவன் இருப்பிடம் வருகிறான். 

‘நான் இந்நாட்டு மன்னன் உன்னைச் சந்திக்க வந்திருக்கிறேன்’……என்று வீட்டு வாசலில் நின்று கூக்குரலிடுகிறான். 

அவனோ சிறிதும் சட்டை செய்யாமல் தனது பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வதில் கவனமாக இருக்கிறான். 

மறுபடி திரும்பத் திரும்ப அவனை அழைக்கிறான் மன்னன். 

நம் வீட்டிற்கு யாராவது விருந்தாளியாக வரும்போது, நாம் ஏதாவதொரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருப்போம், அப்போது……. 

சற்று பொருங்கள்!..இதோ வந்து விடுகிறேன்!…என்று சொல்வதைப் போல், அவனும் 

சற்று பொறுமய்யா!…நீர் யாராக இருந்தாலும் சரி, நான் எனது பெற்றோர்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறேன், அதை முடித்துவிட்டு உம்மை சந்திக்கிறேன், அதுவரை இதோ இந்தக் கல்லில் உட்காரும், என்று சொல்லி ஒரு செங்கல்லைத் தூக்கி எறிகிறான் அந்தச் சிறுவன். 

கடமையில் கண்ணாக, இப்படியும் ஒரு சிறுவனா!…இவனைப் பெற்றவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்!……வந்தவன்!……..வழிந்து ஓடுகிற அழுக்குத் தண்ணீரில் விழுந்த அந்தச் செங்கல்லின்மீது நின்ற படியே அவனுக்கு ஆசி வழங்குகிறான். 

மன்னனாக வந்தவன் ‘பகவான் விட்டல் ஸ்ரீகிருஷ்ணன்’, அவரைச் சந்திக்காமலேயே அருள் பெற்ற நல்லவன் ‘புண்டரீகன்’ என்ற சிறுவன். 

நற்குடும்பத்தில் பிறந்த சிறுவன் புண்டரீகனுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்குக் கடமை தவறாது பணிவிடை செய்கின்ற நல்லவர்கள் அனைவருக்குமே இன்றும் அதே செங்கல்லின் மீது நின்று கொண்டே “விட்டல் கிருஷ்ணனாக” பண்டரிபுரத்திலிருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறான். மராத்தியில் ‘விட்’ என்ற சொல்லுக்கு செங்கல் என்ற பொருள் படும். 

நற்குடும்பத்தில் பிறப்பதே அரிது என்பதை புராணங்கள் கூறுகின்றன. இதுகூட முற்பிறப்பில் செய்த புண்ணிய பலன்களின் வாயிலாகவே இத்தகைய நற்பிறப்பு சாத்தியமாகக் கூடும். ஆக நற்குடும்பம், நற்பிறப்பு என்பதெல்லாம் ஒருவனது நல்ஒழுக்கம், நற்பண்பு, கடமை தவறாமை போன்றவையே தீர்மானிக்கின்றன.  வாழ்க்கையில் மிக உன்னத நிலைக்குச் சென்ற பலரது வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், அவர்களது முன்னோர்களும் இவர்களைப் போலவே உயர்ந்த நிலையில் வாழ்ந்து இருந்ததை அறியமுடியும். இவர்கள் கூறும் அறிவுரைகளை ஒருகாலும் புறக்கணிக்கக் கூடாது என்பதற்கு, எளிய தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி அமைந்த சித்தர் தத்துவப்பாடல் வரிகளில் ஒன்றிரண்டைக் காண்போம். 

“நல்லவர் தம்மைத் தள்ளாதே – அறம்

நாலெட்டிலொன்றை நாடித் தள்ளாதே

பொல்லாங்கி லொன்றும் கொள்ளாதே – கெட்ட

பொய் மொழிக் கோள்கள் பொருத்த விள்ளாதே”         

நல்லவர்களின் வார்த்தைகள், சான்றோர்கள் சொன்ன அறங்கள் இவற்றைப் புறக்கணிக்கக்கூடாது. புறம் பேசாமல், பொல்லாத காரியங்களைச் செய்ய வேண்டாம் என்பதை இப்பாடல் விளக்குகிறது. நன்னெறிகளையும், அறநெறிகளையும், இலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள் மூலமாக அறிந்துகொண்டாலும், வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்வு காணும் நல் ஆலோசனைகளை, வேறு எங்கும் தேடாமல் நம்மை வளர்த்து ஆளாக்கிய, நமது முன்னோர்களின் அனுபவங்களிலிருந்தே, எளிதாகப் பெற்று விட முடியும்!….அதை இன்றளவும் நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை?……         

தொடரும்…..

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *