பிரபு

பங்குச் சந்தை முதலீடு பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன்ன. எல்லாப் புத்தகமும் தன்னளவில் ஒரு அடிப்படைக் கோணத்தை நமக்கு ஊட்டுகின்றது. சில புத்தகங்கள் அவற்றில் சொல்லியிருக்கிற விஷயத்தின் ஸ்திரத்தன்மை காரணமாக காலத்தை வென்று நீடித்து நிலைத்து விடுகின்றன. சில புத்தகங்கள் செய்தித்தாளைப் போல நாளைக்கு பழசாகிப் போவதும் உண்டு. காலத்தைக் கடந்து நிற்கிற புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையான ஒரு அம்சம் இருக்கும். அது வாசிக்கிற வாசகர் மனதில் சிந்தனை மாற்றத்தை உண்டுபண்ணுவது. அல்லது ஒரு குறிப்பிட்ட சங்கதியை நோக்கி அணுகும் பார்வையை மாற்றுவது. சரியான பார்வையில் நோக்குமாறு பார்க்கத் தூண்டுவது.

அப்படியாகப்பட்ட புத்தகங்கள் நிறையவே உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க வாசகர்களுக்காக எழுதப்பட்டு, வேறு வழியில்லாமல் இந்திய வாசகர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்டவை. பங்கு முதலீட்டின் அடிப்படை சாராம்சங்களை இந்திய பங்குச் சந்தை தொடர்பான உதாரணங்களோடு வெளிக்கொணர்ந்த புத்தகங்கள் வெகு சிலவாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு புத்தகம்தான் The Science of Stock Market Investment – Practical Guide to Intelligent Investors by Chellamuthu Kuppusamy (www.amazon.com/dp/B009XUI1X6)

பொதுவாக ஒரு துறை சார்ந்த நூல்கள் அது தொடர்பான டெக்னிகல் சொற்களைக் கூடுதலாகக் கொண்டிருக்கும். படிக்கிற எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கும் என்ற நினைப்பில் அப்படியான புத்தகங்களை எழுதிகிறார்களா அல்லது நாங்கள்தான் வல்லுனர் கூட்டம், படிக்கிற நீங்களெல்லாம் பாமரர்கள், என்ன வேண்டுமானாலும் எங்களைச் சார்ந்துதான் நீங்கள் இருந்தாக வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்களா தெரியவில்லை. செல்லமுத்து குப்புசாமியின் The Science of Stock Market Investment மிகவும் அடிப்படையான விஷயங்களை, ஆழமாகவும், எளிமையாகவும் விளக்குகிறது.

பங்குச் சந்தை என்பது பெரிய கம்ப சூத்திரமல்ல. அதே நேரத்தில் அது சூதாட்டமுமல்ல. தொடர்ச்சியாக தன்னை மேம்படுத்திக்கொள்ள முனையும் ஒருவனால் முழுமையான முதலீட்டாளர் ஆக முடியும். நாம் முதலில் முதலிட வேண்டியது நமது அறிவை. பிறகு கொஞ்ச நேரத்தை. அதற்குப் பிறகுதான் பணத்தை என்று இந்தப் புத்தகம் வலியிறுத்துகிறது. (ஆனால் அநேகம் பேர் இந்த வரிசையில் கடைசியில் தொடங்குகிறார்கள். முதல் படியைத் தொடுவதேயில்லை) அறிவை முதலீடு செய்வதென்று முடிவெடுத்தால் அதற்கான முக்கியமான படியாகவும் இந்தப் புத்தகம் அமையும்.

முதலில் கதை சொல்வதைப் போலத்தான் புத்தகம் ஆரம்பிக்கிறது, கடற்கரையில் காலை நனைப்பதைப் போல. பிறகு போகப் போக நமக்கே தெரியாமல் உள்ளே இழுத்துச் சென்று மூழ்கி முத்தெடுப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. முத்துக் குளிப்பதும், மூச்சையடக்குவதும் இவ்வளவுதானா என ஆகி விடுகிறது. கம்பெனி என்றால் என்ன, பங்குதாரர்கள் யார், மேனேஜ்மெண்ட் என்ன, டைரக்டர்களின் பாத்திரம் என்ன, பங்குச் சந்தைகள் எனப்படும் ஸ்டாக் எக்சேஞ்ச்களில் என்ன செய்கின்றன, ஷேர் புரோக்கர்கள் யார், அவர்கள் நம்மைப் பயன்படுத்திக்கொள்ளாமல் நாம் அவர்களை எப்படிப் பயன்படுத்துவது,  சென்செக்ஸ்-நிஃப்டி என்றெல்லாம் பேசுகிறார்களே அது என்ன, அதில் என்னென்ன கம்பெனிகள் இருக்கின்றன, அதை ஒரு அளவுகோலாகக் கொண்டு பொதுவான பொருளாதாரத்தையும், ஒரு தனி நபரின் முதலீட்டு வெற்றியையும் ஒப்பிடலாமா, அப்படி ஒப்பிட்டால் எப்படி நம்மை நாமே அளந்து கொள்வது, IPO எனப்படும் பிரைமரி மார்க்கெட் – அதில் கவனிக்க வேண்டிய பல தரப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது புத்தகம்.

பிறகு முதலீட்டாளர்களுக்கும், சூதாடிகளுக்குமான வேறுபாட்டைப் புலப்படுத்துகிறது. தன்னை முதலீட்டாளர் என நினைத்துக்கொண்டு உண்மையில் சூதாட்டம் செய்துகொண்டிருக்கும் ஆட்களை இது எச்சரிக்கிறது. சூதாடியாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அப்படி இருப்பதே தெரியாமல் இருப்பதில் உள்ள சிக்கலை உணர்த்துக்கிறது. யாரோ சொன்னார்கள், பத்திரிக்கையில் எழுதினார்கள், பிசினஸ் நியூஸ் சேனலில் ஆலோசனை கூறினார்கள் என்றெல்லாம் முதலீடு செய்யாமல் சுயமாக ஆராய்ந்து குறை நிறைகளை சீர் தூக்கிப் பார்த்த பின் முதலீடு செய்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஒரு மனிதன் தான் எடுக்கும் முடிவுகளுக்கும், தனது செயல்களுக்கு தானே பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவது எல்லா இடத்திலும் நல்லது. பங்குச் சந்தையில் கூடுதலாக நல்லது. அதே போல அளவுக்கு அதிகமான ஆசையை வளர்த்து, பங்குச் சந்தையில் ராவோடு ராவாக கோடீஸ்வரர் ஆகி விடலாம் என நம்பும் மடத்தனத்தையும் எச்சரிக்கிறார் செல்லமுத்து குப்புசாமி. அளவான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு இயங்குவோர் நிபுணர்கள் என தம்மை அழைத்துக்கொள்வோரை விட கூடுதலான வெற்றியை ஈட்ட முடியும் என்பதைப் புரிய வைக்கிறார்.

உலகமே போற்றிய விஞ்ஞானி ஐசக் நியூட்டனே பங்கு விலை அதிகமாக இருக்கிறடு என்று முதலீடு செய்வதத் தவிர்த்திருக்கிறார். மார்க்கெட் ஏறிக்கொண்டே போயிருக்கிறது. அவர் வேண்டாம் என நினைத்த விலையை விட அதிக விலைக்கு பிற்பாடு வாங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் ஒரேயடியாகச் சரிந்து கிட்டத்தட்ட போண்டியாகி விட்டாராம். நியூட்டனுக்கே அந்த நிலையென்றால் யோசிக்க வேண்டும் என்கிறார் செல்லமுத்து. பங்கு முதலீடு முழுக்க முழுக்க கலையுமில்லை, முழுக்க முழுக்க வாய்ப்படுகளால் அடக்கி விட முடிகிற விஞ்ஞானமும் இல்லை. இவை இரண்டும் மானுடமும், உளவியலும் கலந்த கலவை.

அடுத்தபடியாக, பணவீக்கம், வட்டி வீதம், இவை இரண்டும் பங்குச் சந்தை முதலீட்டையும் ஏனைய பிற முதலீடுகளையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு அத்தியாயம் வருகிறது. பணத்தின் ஆற்றல், காலத்தின் ஆற்றல் மற்றும் இவை இரண்டும் சேர்ந்தால் உண்டாகும் சூப்பர் பவர் பற்றிப் பேசுகிறது. உதாரணங்களோடு தெளிவாக விளக்குகிறது. ஐன்ஸ்டீன் power of compounding ஐ எட்டாவது அதிசயம் என்று சொன்னதை நினைவூட்டுகிறது. அதன் பின்னர், இலாபம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ நஷ்டம் அடையக் கூடாது என்பதை ஒரு அத்தியாயம் வலியுறுத்துகிறது.

இப்படி விளையாட்டு விதி முறைகளைப் பற்றிச் சொல்லி விட்டு, விளையாடுவதற்குக் கற்றுக்கொடுக்கும் அத்தியாயங்கள் வருகின்றன. பங்குகளை எப்படி ஆராய்வது, ஒரு பிசினசை எப்படி மதிப்பீடு செய்வது, பேலன்ஸ் ஷீட், லாப நட்டக் கணக்கு, பங்கு வல்லுனர்கள் உபயோகப்படுத்தும் பல நம்பர்கள், குறியீடுகள், அளவிகள், அவற்றில் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள் எல்லாவற்றையும் அலசுகிறது. பிறகு பல்வேறு முதலீட்டு அணுகுமுறைகளை அலசுகிறது. Value investor Vs growth investor, அடிப்படை ஆயுவு Vs டெக்னிகல் ஆய்வு, டிவிடெண்ட்கள், போனஸ், ஸ்பிலிட், உரிமைப் பங்குகள் முதலிய கார்ப்பரேட் நடவடிக்கைகளை நமக்குப் புரிய வைக்கிறது.

அதன் பிறகு எனக்குப் பிடித்த ஒரு அத்தியாயம் வருகிறது. ராகுல் திராவிட் பேட்டிங் ஸ்டைலை ஆராய்ந்து அதை எப்படி பங்கு முதலீட்டுக்கு முன் மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வெகு இலாவகமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உலகின் மிக வெற்றிகரமான முதலீட்டாளர் வாரன் பஃபட் உபயோகித்த ஆர்பிட்ரேஜ் அணுகுமுறை விளக்கப்படுகிறது. வாரன் பஃபட் மற்றும் அவரது குருநாதர் பெஞ்சமின் கிரஹாம் பயன்படுத்திய, பயன்படுத்தச் சொல்லி மற்றவர்களை ஊக்கப்படுத்திய உத்திகளை எல்லாம் விளக்குகிறார் செல்லமுத்து குப்புசாமி. நல்ல கம்பெனியாக இருந்தாலும் மோசமான மேனேஞ்மெண்ட் இருந்தால் ஆபத்து என்பதற்காக ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியிருக்கிறார். பெரும்பாலான முதலீட்டாளர்கள் செய்யக்கூடிய அடிப்படைத் தவறுகளைப் பட்டியலிடுகிறார். வாரன் பஃபட் கூட ஒரு தருணத்தில் தனது முதலீட்டு வாழ்வில் செய்த அபத்தமான தவறுகளைப் பட்டியலிட்டிருந்தார். தான் செய்த தவறுகளில் இருந்து மட்டுமல்லாமல், பிறரது தவறுகளில் இருந்து பாடம் கற்பதற்கு இந்த அத்தியாயம் உதவும். இன்னும் சில அத்த்தியாயங்களின் பெயர்கள் நான் இங்கே குறிப்பிடவில்லை. அதற்காக அவை முக்கியமில்லை என்றல்ல என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.

குறிப்பாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு அத்தியாயம் Behavioral Finance தொடர்பானது. பலரும் அலட்சியப்படுத்தும் ஒரு துறை. இதைப் பற்றியே பல ஆயுவுகளை வெளியிட முடியும் என்று சொல்லும் நூலாசிரியர், பங்கு முதலீட்டில் இது செலுத்தும் ஆதிக்கம், அது எவ்வாறு முடிவுகளைத் தீர்மானிக்கிறது என்பதை விளக்குகிறார். பிறகு தன்னைத் தானே தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். கூடவே பொருளாரத் துறையின் பிற சங்கதிகளைப் பற்றி ஒரு அத்தியாயத்தில் பேசுகிறார். அது எவ்வாறு பங்கு முதலீட்டைப் பாதிக்கிறது என்பதை விளக்குகிறார். முடிவாக மேலதிகத் தகவல்களை எப்படிப் பெறுவது, ஏதேவது பிரச்சினை என்றால் எங்கே முறையிடுவது, விதிமுறைகள், நெறிமுறைகள் பற்றியெல்லாம் விளக்குகி ஆல் த பெஸ்ட் சொல்கிறார்.

The Science of Stock Market Investment – Practical Guide to Intelligent Investors என்ற இந்தப் புத்தகம் அச்சு வடிவில் வெளிவரவில்லை. அமேசான்.காமில் (www.amazon.com/dp/B009XUI1X6) மின் புத்தகமாக வாங்கிக் கொள்ள்ளலாம். வாங்கிய பின் Kindle ரீடர் இருந்தால் அதன் மூலம் வாசிக்கலாம். இல்லையென்றால் Kindle for PC  என்ற இலவச சாஃப்ட்வேரை http://www.amazon.com/gp/feature.html/ref=sv_kstore_1?ie=UTF8&docId=1000493771 இல் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணிக்கொண்டு நமது கம்ப்யூட்டரிலேயே வாசிக்கலாம்.

மிகவும் நல்ல முயற்சி. ஊக்குவிக்கப்பட வேண்டியது. ஏனென்றால், இது தியரியாக வறட்சியான விஷயங்களைப் பற்றி மட்டும் பேசாமல் நடைமுறை உதாரணங்களைக் கொண்டிருக்கிறது. படிக்கிற விஷயத்தை இலகுவாக செயல்படுத்துவதில் சிக்கலில்லாத அருமையான நூல்.
****

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “he Science of Stock Market Investment – Practical Guide to Intelligent Investors

  1. அருமையான விமர்சனம்…

    என்னைப் பொறுத்தவரை இந்தப் புத்தகம் பங்குசந்தை பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கு ஒரு வேதம் போன்றது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *