‘குண்டு் குமாரின் டயரி
உதகை சத்யன்
10-07-2010
இன்று பள்ளித் தொடக்க விழா. விழா முடிந்ததும் என் நண்பர்கள் என்னைச் சுற்றிக்கொண்டனர். ‘குண்டு… குண்டு… குண்டு குமார்் எனக் கை தட்டி என்னைச் சுற்றிக் கூத்தடித்தார்கள். ‘கத்திரிக்காய்,,, கத்திரிக்காய்,,, குண்டு கத்திரிக்கா,,,, எந்த கடையில நீ அரிசி வாங்கறே?் எனப் பாடி, என்னைக் கேலி செய்தார்கள், நான் அழுதுவிட்டேன்.
21-08-2010
என்னை எல்லோரும் குண்டு குமார் என்றுதான் கூப்பிடுகிறார்கள். என் நெருங்கிய நண்பர்கள் கூட என்னை அப்படித்தான் கூப்பிடுகிறார்கள். நான் சொல்லிப் பார்த்தேன். அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் கூப்பிடுவதிலும் அர்த்தம் இருந்தது. எனது வயதிற்கும் உயரத்திற்கும் நான் சுமார் 45 கிலோ எடை இருக்கலாம். நான் சற்று குட்டை வேறு. என் எடை எவ்வளவு தெரியுமா? 71 கிலோ.
05-09-2010
அம்மாவைக் கட்டாயப்படுத்தி, இன்று டாக்டரிடம் சென்றேன். டாக்டர் என்னைப் பற்றி முழுதாக விசாரித்தார். என் பழக்க வழக்கங்கள், சாப்பிடும் உணவு… என்று பல்வேறு விவரங்களைக் கேட்டார். கடைசியாக அவர் எனக்கு எந்த மருந்தும் தேவையில்லை, தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி ஏதாவது செய் என்று சொன்னார். கட்டாயம் நான் தினமும் ஸ்நாக்சுக்குச் சாப்பிடும் பிசாவைத் தவிர்க்கச் சொன்னார். அதற்குக் காரணம், வெறும் 2 ஸ்லைஸ் பிசாவில் 500 கலோரிகள் இருக்கிறதாம். அப்படியென்றால் நான் முழு பிசா சாப்பிடுவதால், மிக மிக அதிக கலோரிகளை என் உடம்பு பெறுகிறது. ஒரு ஆப்பிளில் 56 கலோரிகள் தான் உள்ளதாம். வாழைப்பழத்தில் 100 கலோரிகள் தான் உள்ளதாம். எனவே பிசாவைத் தவிர்த்து விட்டு, சுண்டல் அல்லது பழங்கள் சாப்பிடச் சொன்னார். எனக்கு அவர் சொன்னது கஷ்டமாக இருந்தது. ஆனால் அவர் சொன்னது எனக்குப் புரிந்தது. நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகளுக்கு அளவாக உடல் உழைப்பு வேண்டும். இல்லையென்றால் அதிக கலோரிகளால், உடம்பில் சதை போட்டு, நாம் குண்டாகி விடுவோம்.
12-10-2010
டாக்டரை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து தினமும் காலையில் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். எனக்குத் தெரிந்த சிட் அப்ஸ், புஷ்அப்ஸ், புல் அப்ஸ், ஸ்கிப்பிங், ஐம்ப்பிங், ஜாகிங் செய்கிறேன். மனத்திற்குப் புது தெம்பு. படிப்பிலும் முன்பை விட அதிக மார்க் வாங்குகிறேன். போன வாரம் எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. மாலை வேலைகளில் ஒரு அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்தால் என்னவென்று?
சடக்கென ஒரு எண்ணம். சீடீ பிளேயரில் பாட்டு போட்டேன். ஆட ஆரம்பித்தேன். 15 நிமிடம் வெஸ்டர்ன் டான்ஸ், பிறகு 15 நிமிடம் தமிழ் சினிமாவில் உள்ள பழைய பரத நாட்டிய பாடல்களுக்கு நடனம் ஆடினேன். அட, என்னால் நம்ப முடியவில்லை, எனக்கு நடனம் வருகிறது. உடலுக்கு நல்ல உழைப்பு, காலையில் உடற்பயிற்சி செய்யும்போதும் மாலையில் நடனம் ஆடும் போதும் எனக்கு வேர்த்துக் கொட்டுகிறது. நான் பிசாவை நிறுத்தி, சுண்டலும் பழங்களும் சாப்பிட ஆரம்பித்து, வெகு நாட்கள் ஆகிவிட்டன (ஞாயிற்றுக்கிழமை மட்டும் விதிவிலக்கு).
13-01-2011
இன்று என் பிறந்த நாள். அப்பா அம்மாவுடன் மதிய சாப்பாட்டிற்கு ஓட்டல் சரவணபவன் சென்றோம். நன்றாகச் சாப்பிட்டோம். நான் அரையாண்டுத் தேர்வில் 5ஆவது ரேங்க். இதற்கு முன்பு 10இலிருந்து 15 வரை வருவேன். அதனால் அப்பாவும் அம்மாவும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். ஓட்டலை விட்டு வெளியே வரும் போது, வாசலில் எடை பார்க்கும் எந்திரம் இருந்தது, டாக்டரைப் பார்த்து, கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஓடிவிட்டன. அவர் 6 மாதங்கள் கழித்து வரச் சொல்லியிருந்தார்.
ஓட்டல் வாசலில் இருந்த எந்திரத்தில் ஏறி, ஒரு ரூபாய் போட்டதும், எடைச் சீட்டு வந்தது. மனத்தில் ஒரு பயம், அப்பா சிரித்துக்கொண்டே சீட்டினைக் கொடுத்தார். நான், பயத்துடன் பார்த்தேன். என் எடை 48 கிலோ…… நான் குண்டு குமார் இல்லை…. அய்யா. ஜாலியோ ஜாலிஸா….
=====================================
படத்திற்கு நன்றி: http://www.primoclipart.com
வேடிக்கையாய் நீதி
Mikka Nanri
‘டாக்டரைப் பார்த்து, கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஓடிவிட்டன. அவர் 6 மாதங்கள் கழித்து வரச் சொல்லியிருந்தார்.’
தம்பி! 13 03 2011/ 25 04 2011: எடை என்ன?
குமாரின் எடை வெகு வேகமாக குறைந்து வருகிறது.
உதகை சத்தியன் அவர்களின் சிறுகதை சிந்தனைக்கதை என்றும் சொல்லலாம்.
திரு. விஜய குமாருக்கு மிக்க நன்றி.
தங்கள் பாராட்டுக்கு மீண்டும் நன்றி.
தாங்கள் கட்டுரை ‘தேவை மக்கள் கண்காணிப்பு குழு’ வாசிக்கவும்.
அதற்கும் உங்கள் கருத்துகளை எழுதவும்
உதகை சத்யன்