திவாகர்

மகாபாரதத்தில் யட்சனின் கேள்விகளுக்கு தருமராசன் பதில் சொல்லியே தீரவேண்டும். எல்லா உயிர்களையும் கவர்ந்து செல்லும் யமதர்மராசனின் மகன் என்று புகழ்பெற்ற யுதிர்ஷ்டிரனுக்கு அந்தச் சமயத்தில் தன் உயிர் தன் கையில் இல்லை என்று புரிகிறது. கீழே நான்கு தம்பியரும் மரணப்படுக்கையில், தானோ தனியாள்.. கேள்வி கேட்பவனோ, தங்கள் வீரத்தை விட சிறந்தவன், இல்லையென்றால் வீராதிவீரர்களை, தம் தம்பியரையே, மூர்ச்சை அடையச் செய்வானா.. தங்கள் ஞானத்தை விட சிறந்த ஞானத்தினைப் பெற்றவனாகத்தான் இருக்கவேண்டும்.. இல்லையென்றால் தன் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு நீரை அருந்து எனக் கட்டளை இடுவானா.. இருந்தும் நிலைமையை தைரியமாக எதிர்கொள்கிறான் தருமன்.

யட்சனின் கேள்விகளில் மிக முக்கியமானது ‘ஆச்சரியமானது என்பது எது’ என்பதுதான். அதற்கு தருமன் பதில்சொல்வான் ‘தானும் ஒருநாளில்லாவிட்டால் ஒருநாள் இறந்துதான் தீரவேண்டும் எனத் தெரிந்தும் அந்தச் சமயத்தில் இறந்து போனவனுக்காக பரிதாப்படுவதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்’ என்பான் அவன்.

மனிதனின் மரணம் என்பது நிச்சயம் என்றாலும் அது வரும் காலத்தில் அதை எதிர்கொள்வது என்பது மிகவும் சிரமமான விஷயம்தான். மரணகாலத்தில் மனிதனால் இறைவன் நாமம் சொல்லமுடியாது போகலாம் என்பதால் தான் நன்றாக இருக்கும்போதே ’மாதவனை தன் மார்பில் இருத்தி அனுக்கணமும் பூசை செய்தால்’ இந்தக் கடைசிகால எமபயத்தைப் போக்கிவிடலாம் என்று உபாயம் சொல்வர் பெரியாழ்வார். ஆனால் மரணம் வருபவருக்குதானே இந்தப் பிரச்னை.. முதிர்ந்த வயதில் அந்த மரணம் வரும் வேளையில் அவரைச் சார்ந்தவர்கள் எப்படியெல்லாம் எதிர்கொள்கிறார்கள்.. ஒரு குரூரமான நகைச்சுவைத் துணுக்கு கூட உண்டு. கணவன் இறந்துவிட்டான், தேகம் திடீரென பெரிதாக உப்பிவிடுகிறது. வெளியில் எடுத்துச் செல்ல வாசல் நிலைப்படியை இடித்து அகலப்படுத்தி எடுத்துச் செல்லவேண்டும். ஆனால் மனைவி ஒப்புக்கொள்ளவில்லை. இறந்துபோனபின் அவன், அவள் எல்லாம் வெறும் கட்டைதானே.. இந்தக் கட்டையை வேண்டுமென்றால் அறுத்துச் செல்லவும், வீட்டு நிலைப்படிக் கட்டையை இடிக்கவேண்டாம்’ என்கிறாள்.

ஆனால் சென்ற வார பொங்கல் வல்லமை சிறப்பிதழில் உயிர் போகும்போது கூடி உள்ள உறவினர் நிலையைத் தெளிவாக எளிமையாகச் சொல்லி இருக்கிறார் திரு ரிஷி ரவீந்திரன் அவர்கள். அந்தப் பாட்டியைப் பற்றி அகப் பார்வையாகச் சொல்லாமல் புறப்பார்வையாக சொல்லி இருப்பது சுவையாகவும் இருக்கிறது. இதோ அவரின் கைவண்ணத்தில்

தாடி  ராமசாமி மாமா பாட்டியின் மரணமடையக்கூடிய நேரத்தை  எதிர்நோக்கி கவலையுற்றார். அடைப்பு நட்சத்திரத்தில் மரணித்தால் பிணத்தை வாசல் வழியாக எடுக்க இயலாதே !. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணித்தால், கூரையைப் பிரித்து அதன் வழியாகவோ அல்லது சுவற்றினை இடித்து அதன் வழியாகவோதான் பிணத்தினை எடுக்கவேண்டும் என்பது நியதி.

தனிஷ்டா பஞ்சமி என்றழைக்கப்படும் நட்சத்திரங்களில் ஏற்படும் மரணம் அடைப்பு ஆகிவிடுகின்றது. ஆவிமூலமாகவோ, கனவு மூலமாகவோ அல்லது ப்ரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி வீட்டிலுள்ளோர்களைப் பயமுறுத்தி ஆறு மாதத்திற்குள் மரணப்படுகையில் தள்ளிவிடும் என்றொரு ஐதீகம். முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்தி எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன என்றொரு நம்பிக்கை.

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணித்தவர்கள் எமலோகம்  சென்றடைய இந்த அடைப்பு என்றழைக்கப்படுகின்ற கால அவகாசம் தேவைப்படுகின்றது என கருடபுராணம் உறுதிப்படுத்துகின்றதே ? மருத்துவன் நாடி பிடித்த கணக்கினை வைத்துக் கணித்தால், கிழவி பஞ்சமி நட்சத்திரத்தில்தான் மரணிப்பாரோ…? என்ன பரிகாரம் செய்வது…? என்ற எண்ணவோட்டம் தாடி ராமசாமி மாமாவின் மனதினில் பெளர்ணமி அலைகளாக ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தன.

ஊரின் எல்லையில் ப்ளஷர் காரின் ஹார்ன் சப்தம் கேட்டு சின்னஞ்சிறார்கள் வழியும் மூக்கினை இடக்கையால் வழித்துக்கொண்டு வலக்கையால் கீழிறங்கும் டவுசரை இழுத்துக்கொண்டே  ஓடினர். பெரும்பாலான டவுசரின் பின்பக்கங்கள் இந்திய வரைபட  வடிவினில் கிழிந்திருந்தன.

லட்சுமி தன் குடும்பத்துடன் வந்துவிட்டதாய் கூட்டம் அனுமானித்தது. பஜனை தாத்தா எதோ தயார் செய்ய  கூடத்தினுள்ளே சென்றார். பாட்டி தன் காதுகளைக் கூர்மையாக்கினார்.

பேரக்குழந்தைகள் ஐவரும் ஆஜர்,  அந்த இடமே இப்பொழுது  சாவுக்கலையிலிருந்து மங்களகரமாய் மாறியிருந்தது. உற்சாகமான அதிர்வலைகள் ஜனித்திருந்தன. பாட்டியின் முகத்தினில் ஒருவித பரவசநிலை.

ஒரு வயது நிரம்பாத கடைக்குட்டி வரதன் பாட்டியைக் கூர்மையாகப் பார்த்தான். பாட்டி இவன் பிறப்பதற்கு முன்பே பார்வை இழந்தவர், வரதன் முகத்தில் புன்னகை, ”யார்ரா…இது….?” எனத் தன் பிஞ்சுக் கரங்களினால் பாட்டியைத் தொட்டுச் சிரிக்கும்பொழுது பாட்டி மெய்சிலிர்த்துப் போனாள்.
https://www.vallamai.com/special/pongal/1878/

ரிஷி இப்படி யதார்த்தத்தை எளிமையாகச் சொல்லும் முறை நன்றாக இருக்கிறது. பிறப்பென்று ஒன்று இருக்கும்போது மரணம் நிச்சயம்தான். வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் பூமியிலே நமக்கிடமேது’ என்பார் கண்ணதாசன். நம்மாழ்வாரோ ஒரு படி மேலே போய், ’இந்த பூமியின் தாங்கமுடியாத ப்ளுவைக் குறைக்க ஒரு உபாயத்தைக் கண்டுபிடித்தாய், அதுதான் பாரதயுத்தம் கண்ணா!’ என்பார். எது எப்படியாகினும் மரணத்தைக் கண்டு பயப்படாது எல்லையில் போராடும் யுத்த வீரன் போல எல்லா மனித உயிர்களும் இருக்கவேண்டும் என்பேன் நான். நல்லதொரு சிந்தனையை அளித்த திரு ரிஷி ரவீந்திரனை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வல்லமையாளர் ரிஷி வாழ்க என வாழ்த்தி மேலும் பல கட்டுரைகளை அள்ளி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கடைசி பாரா: மனோகரனின் கவிதை

முதியோர் இல்லங்களுக்கு உதவிசெய்
பணம் கொடு, பொருள் கொடு, வசதிகொடு
பெற்றவர்களையே கொடுக்காதே!!!!!!!!!!!!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. திரு ரிஷி ரவீந்திரன் அவர்களின் அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மகிழ்ச்சி.  நன்றி ஐயா.

  2. வாழ்த்துக்கள் . கதை மிக மிக அருமை .இதுபோன்ற நல்ல கதைகள் நிறைய எழுதுங்கள் ஐயா .

    வித்யா பாலாஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *