அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை – பகுதி (1)

0

சாகர் 

1.பயண ஏற்பாடு

எகிப்து என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது காலங்களைக் கடந்து கம்பீரமாக நிற்கும் பிரமிட்கள் தான். பண்டை எகிப்தியர்களின் கல்வி கலை மற்றும் கட்டிடத்திறனை உலகத்திற்கு பறைசாற்றும் பாறை படைப்புக்கள், பண்டை உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றானவை இந்த பிரமிடுகள். அப்படிப் பட்ட தொன்மையான தேசத்திற்கு போவது என்பது வெகு நாள் கனவு.

எகிப்து என்னை ஈர்த்ததற்கு இதை அல்லாமல் இன்னும் பல காரணங்களும் உண்டு. தமிழகத்தில் சோழ தேசத்தின் தலை நகரான தஞ்சையில் பிறந்த எனக்கு, சோழரும் தமிழ் மக்களும் திரை கடலோடி திரவியம் தேடிய தேசங்களில் ஒன்றான பண்டை எகிப்து தேசத்தை பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் எப்பொழுதும் உண்டு. அந்த ஆவலைத் தூண்டியது தமிழ் சரித்திரமும் கல்கி மற்றும் சாண்டில்யனின் வரலாற்று புதினங்களும் தான்.

கொற்கை, தொண்டி, நாகை மற்றும்  மாமல்லபுரம் துறைமுகங்களில் எப்படி எகிப்தியர்களும் யவனர்களும் குவிந்தனர் என்பது வரலாறு சொல்லியது, அதை பார்க்க மனம் ஏங்கியது. மருத்துவம் பயின்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆனபோது நமது சுஸ்ருதருக்கு இணையாக அறுவை சிகிச்சை செய்முறைகள் கொண்ட நாடு என்பதால் தொழில் ரீதியாக அந்த தேசத்தை பார்க்க ஒரு ஈர்ப்பு..

அராபிய வசந்தம்(Arab Spring) என்ற புயல் ஆட்சியை மாற்றி இஸ்லாமிய சகோதரர் (Muslim brotherhood) ஆட்சிக்கு வந்தபோது ஏற்பட்ட அமளியில் போகமுடியாது என்று தோன்றியது. என்றாலும் மக்களாட்சி ஏற்பட்டு அமைதி ஆட்சி அமைந்ததால் இந்த வருடம் செல்லலாம் என்று யோசித்தபோது மீண்டும் அங்கே கொந்தளிப்பு. எங்கே நாம் அந்த அற்புத தேசத்தை பார்க்க இயலாமல் போய்விடுமோ என்ற பதட்டம். பாபிலோன் உள்ள இராக்கிற்கு போவது பற்றி யோசிக்க கூட முடியுமா ?

நிறைய எகிப்திய நண்பர்களை கலந்தாலோசித்து கடைசியில் போவது என்று முடிவெடுத்தோம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை தான் சீதோஷணம் நாம் சகிக்கும்படி இருக்குமாம் அதன் பிறகு வெயில் ஆதிக்கம் அதிகம்தான்.

எங்கு சென்றாலும் அந்த ஊரை பற்றி ஆராய்ந்து எல்லா ஏற்பாட்டையும் நானே செய்வதுதான் என் பழக்கம். என்றாலும் பாஷை தெரியாத ஊரில் அதுவும் இப்பொழுதுதான் கலவரம் அடங்கி இருக்கும் இடத்திற்கு குடும்பத்தோடு செல்வது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். விமான பயணச்சீட்டு வாங்கிய உடன் எகிப்தில் உள்ள ஒரு பயணஉதவி நிறுவனத்தை(Tour operator) அணுகினேன், முன்னம் அதே நிறுவனத்துடன் என் நண்பர் குடும்பம் சென்றுவந்து மகிழ்ச்சியுடன் சிபாரிசு செய்தது நினைவுக்கு வந்தது.

மெம்பிஸ் டூர்ஸ்(Memphis tours) என்ற அந்த நிறுவனத்தினை அணுகினேன். அந்த நிறுவனத்தின் முஸ்தபா என்ற பயண உதவியாளர் மிகவும் துரிதமாக தொடர்பு கொண்டு எனக்கு சில பயணத் திட்டங்களை கொடுத்தார். இந்த நிறுவனம் எகிப்துக்கு வந்து சேர்ந்தது முதல் திரும்ப செல்லும் வரை சில உணவு செலவைத் தவிர எல்லாவற்றையும் மொத்தமாக பார்த்துக்கொண்டு நம்மிடம் மொத்தமாக பணம் பெற்றுகொள்ளும் ஒரு நிறுவனம். ஏழு இரவும் எட்டு நாட்களுக்கு ஒரு பயண த்திட்டமும் நன்றாக இருந்தது, விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் நாம் மெனக்கட்டு எகிப்தில் உள்ளுக்குள் பயணச்சீட்டுகளும்,கப்பல், விமான பயணச்சீட்டுக்களும் வாங்கும் பிரச்னை இல்லாமல் ஒரே இடத்தில் எல்லாம் முடியும் என்கிற மனசாந்தி இருக்கும் என்பதால் ஒப்புக்கொண்டேன். மேலும் எகிப்தில் உள்நாட்டு ரயில் மற்றும்  விமானச் சீட்டுக்கள் வாங்குவதும் சுலபமாக இல்லை எல்லாம் அரபிக் மொழியில் இருந்தது, அப்படி ஆங்கிலத்தில் இருந்தாலும் சீட்டு வாங்குவது மிகவும் கடினமாக இருந்தது. மேலும் நாங்கள் கிருஸ்துமஸ் புதுவருடப் பிறப்பு  நேரத்தில் செல்வதால் சொகுசு படகு விலையும்(Cruise) அதிகமாக இருந்தது. மொத்தத்தில் மெம்பிஸ் டூர் குழுமத்தின் விலை நல்ல விலை என்று பட்டது.

அது சரி என்று வாங்கலாம் என்று முடிவு செய்தபோது மேலும் ஒரு சிறிய பிரச்சனை. நான் வாங்கிய பயணச்சீட்டு பத்து நாள் எகிப்தில் தங்குவதாக ஏற்பாடு, ஆனால் மெம்பிஸ் டூர் ஏழு நாட்கள் தான்.

யோசித்ததில் நான் முன்னமே வாங்கியிருந்த விடுமுறை பங்கில்(holiday package(www.qnet.net)) உள்ள ஹோட்டலில் ஒன்றான மொவேன்பிக்(movenpick) எகிப்தில் கீசாவில் உள்ளது நினைவுக்கு வந்தது, ஏற்கனேவே பணம் கட்டிய அந்த பங்கு நாங்கள் உபயோகிக்காமலேயே கிடந்தது. சரி இரண்டையும் சேர்த்து ஒரு பயணமாக பண்ணுவது என்று முடிவு செய்தோம். மெம்பிஸ் டூர்ஸ் அந்த மூன்று நாட்களுக்கும் வேறு இடங்கள் காட்டமுடியும் (கூடுதல் தொகை) என்றனர். சரியென்று ஒரு வழியாக முன்பணம் செலுத்தினேன்.

எல்லாம் செய்து முடித்த பிறகு திடீர் என்று ஒரு திருப்பம். எகிப்திய ஜனாதிபதி முசிரி(Musri) தனக்கு சாதகமான சில விதி மாற்றங்களையும் சட்டங்களையும் அமுல் செய்தார். மீண்டும் தஹிரிர் சதுக்கத்தில் (Tahrir Square) போராட்டம்! தினமும் தொலைகாட்சியும் செய்தித்தாளையும் பார்த்து பார்த்து சலித்து தான் மிச்சம் ஒரு வழியாக வந்தால் விடுமுறை போனால் காசு என்ற மனோபக்குவம் வந்தது.

மெம்பிஸ் டூர்ஸ் எங்கள் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் வேறு அளித்தது. கைரோ (Cairo) விமானநிலையத்தில் எங்களை சந்தித்து நேரே ஹோட்டலுக்கு  அழைத்துக்கொண்டு சென்று சேர்க்க ஆள் வரும் என்றனர். மேலும் எந்த நேரமும் கூடவே ஒரு பயண வழிகாட்டி (Guide) கூடவே இருப்பார்  என்றனர். கைரோவில் இரண்டு நாள், இரவு ரயிலில் லக்சருக்கு(Luxor) பயணம் பின்னர் நைல் நதி சொகுசு படுகு பயணம்(Nile Cruise), வழியில் லக்சர், எட்பு (Edfu), கொம் அபோ (Kom Abo) எல்லாம் பார்த்துவிட்டு கடைசியில் அஸ்வான்(Aswan) போய் சேர்ந்து அங்கிருந்து கைரோவிற்கு திரும்புவதற்கு இரவு ரயிலில் ஏற்பாடு செய்தார்கள். மேலும் அபுசிம்பல் (Abu Simbel) செல்வதற்கு ஒரு வாய்ப்பு வேறு இருந்தது (தனி கட்டணம்). அபு சிம்பல் சூடான் (Sudan) எல்லையிலிர்ந்து சுமார் ஐம்பது மைல்தான். கைரோ திரும்பியதும், மெம்பிஸ்(Memphis), சகாரா(Sakkaara) மற்றும் அலேக்சண்ட்ரியா (Alexandria) செல்வதாக முடிவுசெய்தோம்.

கிட்டத்தட்ட எகிப்தின் வடகோடியில் தொடங்கி தென் எல்லை வரை நைல் நதி தீரத்தில் எல்லாவற்றையும் பார்ப்பது என்று நினைக்கும் போது ஒரே ஆவல் மற்றும் எதிர்பார்ப்பு. இடையில் எந்த குழப்பமும் ஏற்படக் கூடாது என்கிற பயமும் கூடவே இருந்தது.

முஸ்தபாவிற்கு நிறைய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி உரையாடல் என்று எல்லா சிறு விஷயங்களும் அலசினேன். மிக முக்கியமாக சைவ உணவு கிடைக்குமா என்று. ஏன் என்றால் என் மனைவி சைவம். ஹோட்டலிலும் ரயில் மற்றும் படகில் இரண்டு அறை தேவை என்றனர்.  எட்டு மற்றும் பதினொன்று வயது குழந்தைகளோடு செல்லும் பொழுது இரண்டு அறை என்பது கொஞ்சம் விசித்திரமாகப் பட்டது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஒரு குடும்பத்திற்கு ஒரு அறைதான் தேவை. நிறைய பேசிய பிறகு ஹோட்டலில் தங்கும்போது ஒரு அறை ஆனால், கப்பல் மற்றும் ரயிலில் இரண்டு அறைதான் எடுக்க வேண்டும் என்றனர். குளிசாதன இரவு ரயிலில் இரண்டு அறைகளும் ஒன்று சேரும் வசதி உண்டு என்றும் சாந்தி செய்தனர்.

நான் எனது விடுமுறை பங்கு நிறுவனத்திற்கு எனது தேதிகளை அனுப்பியதும் அவர்கள் நான் கேட்ட விடு முறை   சொகுசு விடுதியில் இடம் இருப்பதாக உத்திரவாதம் தந்தனர்.

கிளம்புவதற்கு ஒரு வாரம் முன் எனது சிநேகிதி என்னை அழைத்து பிள்ளைகளுக்கும் தடுப்பு ஊசி போட்டுவிட்டாயா என்று கேட்டார். சுத்தமாக மறந்துவிட்டது, ஹெப்படைடிஸ்(Hepatitis) மற்றும் டைபாய்டு(Typhoid) காய்ச்சல் ஊசிகள் போட்டிருக்க வேண்டும் என்றார். யோசித்தோம் .ஊசி போடுவதற்கு அவகாசம் இல்லை மேலும், இந்த தடுப்பு ஊசியில்லாமல் தான் இந்தியா மற்றும் துருக்கி சென்று வந்தோம் என்று ஒரு அசட்டு தைரியம். எகிப்து போய்வருவோர் எல்லாம் வாந்தி பேதியோடு வருவதாக இன்னுமோர் அன்பர் பயமுறுத்தினார். சரி நாம் சுத்தமாக் இருந்து சுகாதாரமாக சாப்பிடுவோம், செய்வதெல்லாம் முன் எச்சரிக்கையோடும் செய்வோம் அதற்கு மேல் இறைவன் விட்ட வழி என்று முடிவு செய்தோம்.

புறப்படுவதற்கு முன் வீட்டிலிருந்து இணையதளத்தில் முன்பதிவு(online check-in) செய்வோம் என்று ஆரம்பித்தேன். பயண உதவி நிறுவனம் எனக்கு, மனைவி மற்றும் பெரிய பையனை ஒரு குழுமமாகவும் , சிறிய பிள்ளையை தனி நபர் என்றும் பதிவுசெய்ததது இப்போது பிரச்சினை தந்தது. கணிணி சிறுவன் தனியாக செல்லும் போது இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியாது என்றது. புதிய சோதனை. விமான நிலையத்தில் முன்பாக சென்று அங்கு பயணபதிவு செய்யவேண்டும். கொஞ்சம் முன்பாக புறப்படவேண்டும் வேறு என்ன செய்வது. எகிப்திய பவுண்டு போய் வாங்கி  வந்தோம், கொஞ்சம் மனசை நெருடியது ஒரு பிரிட்டிஷ் பவுண்டிற்கு ஒன்பது எகிப்திய பவுண்டு என்ற பணமாற்று(Foreign Exchange) கணக்கு. என்ற(ஒரு பிரிட்டிஷ் பவுண்டிற்கு எண்பது இந்திய ருபாய்) எப்போது இந்திய ரூபாய் இந்த அளவு உயருமோ  என்ற ஏக்கம்.

நாங்கள் வசிக்கும் ரக்பியிலிருந்து(Rugby) லண்டன் ஹீத்ரோ(London Heathrow) விமானநிலையம் சுமார் ஒன்றரை மணி நேர பயணம், பர்மிங்காம்(Birmingham) அரை மணி நேர தூரத்திலிருந்தாலும் நேரடி விமானங்கள் ஹீத்ரோவிலுருந்துதான் சென்றன. எங்கள் விமானம் மாலை ஐந்து மணிக்கு, எனவே பன்னிரண்டு மணிக்கு கிளம்புவதாக முடிவு. கிளம்பும் முன் மின்னஞ்சல் பார்த்தபோது இன்னும் ஒரு புது பிரச்னை. எங்கள் விடுமுறை பங்கு நிறுவனம் நாங்கள் விண்ணப்பித்த மொவன்பிக் ஹோட்டலில் ஒரு அறைக்கு மூன்று பேர் தான் தங்கமுடியும் எனவே நாங்கள் எங்கள் பங்கை உபயோகிக்க முடியாது என்றது.

காரில் பயணித்தவாறு எகிப்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்கள் குழந்தைகள்  பன்னிரண்டு வயதுக்குள் இருந்தால் தாராளமாக தங்கலாம் என்றனர். சிங்கப்பூரில் உள்ள விடுமுறை பங்கு நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டால் அங்கு யாரும் அலுவலகத்தில் இல்லை. அவர்களுக்கு இதனை ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு மெம்பிஸ் டூர்ஸ் முஸ்தபாவை அழைத்து எனக்கு மேலும் மூன்று நாட்களுக்கு அறை வசதி தேவைப் படலாம் என்று எச்சரித்தேன். அவர் அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை என்றார். இருந்தாலும் முன்னே பணம் செலுத்திய பங்கு உபயோகிகாமலே வீண் போய்விடும் என்ற ஆதங்கம்.

விமானநிலையத்திற்கு சுமார் முப்பது மைல் தொலைவில் திடீரென்று போக்குவரத்து வேகம் குறைந்தது, மணி அப்போது ஒன்றரை, இங்கிலாந்தின் பெரும் நெடுஞ்சாலைகளில்(motorway) மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ளவை M1 மற்றும் M25யும்தான் . நாங்கள் அந்த இரண்டும் இணையும் இடத்தில் தவழும் வேகத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். நேரம் வேகவேகமாக சென்றது ஆனால் எங்கள் முன் இருந்த கார்கள் மட்டும் நத்தை வேகத்தில் ஊர்ந்தன. நேரம் ஆகஆக எகிப்து போய் சேருவோம் என்ற நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இரண்டடி பனியில்(snow) ஊர்ந்து விமானநிலையம் அடைந்து துருக்கி சென்றதும் விமானநிலயம் வரை சென்றும் கனடா போக முடியாததும் மனதில் நிழலாடியது…மணி மூன்றரை…..

வேறு ஏதாவது வழியில் செல்லலாம் என்றால் எல்லா இடத்திலும் அதே பிரச்னை. குழந்தைகள் முகத்தில் ஈயாடவில்லை. நான்கு தடமும் கார் நிறுத்துமிடம்(car park) போல காட்சியளித்தது.

ஒரு வழியாக நாலு மணிக்கு விமான நிலையத்தில் நுழைந்தோம். சர்வதேச பயணம் என்பதால் குறைந்த பட்சம் 90 நிமிடம் முன்னராவது வரவேண்டும். வேகமாக பயண மேஜைக்கு(check in desk) சென்று பையனை பயண பதிவு செய்வவேண்டும் என்றோம். நேரமாகிவிட்டது முடியாது என்று சொல்லுவார் அந்த பெண்மணி என்றது மூளை, இல்லை பிரயாணிக்க முடியும் என்றது மனது. “புன்னகையுடன் இன்று சாலைகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் நாங்கள் இன்னமும் பயண பதிவு செய்கிறோம், சுகமான பிரயாணம் மேற்கொள்ளுங்கள்” என்றார். அந்த நிமிடம் அந்த மகராசி ஒரு தேவதையாக கண்ணில் தென்பட்டாள். மிகுந்த சந்தோஷமாக எங்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் வந்து அமர்ந்தோம்..

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *