நான் அறிந்த சிலம்பு – 73 (27.05.13)
புகார்க் காண்டம் – 07. கானல் வரி
“வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறுதல்”
(51)
தீயைக் கொட்டிப் பரப்பி
அதன் வெப்பத்தினால்
எமை வருந்தச் செய்கிறதே
இம்மாலைப்பொழுததுவே!
இது இங்ஙனம் நமை வருத்தும்
என்று சற்றும் நினைந்து பார்த்திடாது
தலைவன் உரைத்திட்ட
பொய்ச் சூளுரைகளை
உண்மையென நம்பி ஏமாந்துவிட்டோமே!
பூமணம் நிறை கானற்சோலையில் வாழுகின்ற
சிறப்புப் பொருந்திய கடல் தெய்வமே!
எம் தலைவர்தம் பொய்ச்சூளுரையைத்
தண்டிக்காது பொறுத்தருள்வாயாக!
நின் மலரடி போற்றி வணங்குகிறோம்.
கட்டுரை
“கோவலன் ஊழ்வினையால் மனம் மாறுபட்டு மாதவியைப் பிரிந்து போதல்”
(52)
இவ்வாறெல்லாம் மாதவி பாடக்கேட்ட கோவலன்
நான் கானல்வரி பாடினேன்;
அங்ஙனம் பாடாமல்
வஞ்சனைப் பொய்கள் கூட்டி
மாயம் செய்திடும் இம்மாயக்காரியோ
வேறு யாரையோ நினைத்துப் பாடினள்
என்று எண்ணுகையில்,
யாழிசை மேல் வந்து நின்றது
அவனுடைய ஊழ்வினை.
முழுநிலவு நாளில் தோன்றுகின்ற
நிலா போலும் முகமுடைய மாதவியுடன்
இணைத்த தன் கையை
அப்போதே ஞெகிழவிட்டனன்;
பொழுது சாய்ந்துவிட்டது என்று கூறியே
ஏவலர் மட்டும் சூழ
மாதவியை விடுத்துப் புறப்பட்டனன்;
மாதவி, கோவலனுடன் இன்றி, தனியளாய் ஆயத்துடன்
தன் மனை புகுதல்”
தாது விரிந்த பூக்கள் நிறைந்த சோலையில்
தனித்துக் கோவலன் விட்டுச் சென்றிட
செயலற்றுத் தவித்த மாதவி
ஆங்கே நிலவிய ஆரவார ஒலிகள் அடங்கியதும்
வண்டியில் சென்றமர்ந்து
தனியே தன்மனை புகுந்தனள்
கோவலன் உடன் இன்றியே.
புகுந்தபின்,
இவ்வுலகின் அரசர்கள் எல்லாம் தலைவணங்கும்
சோழ மன்னனையும்,
அவனது
முகபடாம் அணிந்த யானையையும்
ஒளி பொருந்திய வாளையும்
“மிகப்பெரிய சக்கரவாளம்
எனும் மலையை உள்ளடக்கி
ஆட்சி புரிவதாகுக” என்று
வெண்கொற்றக் குடையையும்
வாழ்த்தி நின்றனள் மாதவி.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html
படத்துக்கு நன்றி:
http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/html/a02141l6.htm
கானல்வரி முற்றியது; தொடர்வது வேனில் காதை