சுதந்திரக் கவிதை
சக்தி சக்திதாசன்
அன்னை பாரதத்தின்
அடிமை விலங்கொடிந்த
உன்னதமான நாளதில்
உளமார வாழ்த்துகிறேன்
சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்கும் இன்பத்தை
சிந்திக்கும் போதெந்தன்
தித்திக்கும் மனமென்பேன்
கருணை மனம் கொண்டு
கடமை தனை எண்ணி
காந்தி எனும் தந்தை
கட்டிய பெருங் கோட்டை
நேற்றைய வியர்வையில்
இன்றைய செடியொன்றில்
நாளை மலரும் ரோஜாவாக
நிமிர்ந்திடும் பாரத தேசம்
கனவுகளில் மட்டும் அந்த
கவியுலக வேந்த பாரதி
கண்டு வந்த சுதந்திரத்தை
கணக்கின்றிச் சுவைக்கின்றோம்
உயர்ந்திடட்டும் இச்சுதந்திரம்
உருவாகட்டும் புதுப் பாரதம்
இல்லையென்போர் இல்லையென
இருப்போர்கள் இயங்கட்டும்
பொருளாதார ஏணியின்
உச்சத்தை நோக்கி வேகமாய்
நடைபோடும் பாரத தேசம்
நிறைகிறது நெஞ்சம் இன்று
உயிர்கொடுத்து மண் காத்த
உத்தமர்கள் நினைவு வாழ
உழைப்போர்கள் உயர்ந்திடும்
உன்னத பூமியாக மாற்றிடுக!
இளையோர்கள் விழித்திடுங்கள்
இதயத்தைத் திறந்திடுங்கள்
நாளை உங்கள் கைகளிலே
நெஞ்சுயர்த்தி நடவுங்கள்!
என்னினிய சொந்தங்களே !
தமிழன்னை பாதம் பணிந்து
தமிழாலே கவி தந்து
வாழ்த்துகின்றேன் அனைவரையும்!
எளிய நடையில் இனிய கருத்தேற்றி எங்களுக்கு வாழ்த்துக் கூறிய மேன்மைக்கு அடியேனின் உளமார்ந்த சிரம் தாழ்ந்த நன்றி, ஐயா.
தங்களுக்கும் அடியேனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
பணிவன்புடன்,
புவனேஷ்வர்
இதந்தரும் எண்ணங்களை உருவாக்கும்,
உகந்தநாள் சொற்கொண்டு உருவான,
சுதந்திரக் கவிதை அருமை!
இதந்தரும் எண்ணங்களை உருவாக்கும்,
உகந்தநல் சொற்கொண்டு உருவான,
சுதந்திரக் கவிதை அருமை!