குறவன் பாட்டு – 9
சச்சிதானந்தம்
கரடியின் தாண்டவம்
குட்டிக ளிரண்டைக் கூட்டிக் கொண்டு,
வெட்டிரும் பொத்த முகத்தைக் கொண்டு,
முட்டிக் கரையான் புற்றைச் சாய்த்தது,
கட்டுறுதிக் குணக் கரடி யொன்று! 68
குரங்கைப் போலக் கரடிக் குட்டிகள்
குதித்துத் தாவித் தாயின் முதுகில்,
களிறின் மீதமர் கோவைப் போல,
கம்பீரத் தொனி கொண்டமர்ந் தனவே! 69
உலர்ந்தசெம் புற்றைத் தாக்கிக் குலைத்து,
வலம்வரும் கரடியைக் கண்டது கொண்ட,
பலமும் குணமும் அறிந்து குறவன்,
புலனைந் தொடுக்கிப் பதுங்கி மறைந்தான்! 70
நூறடி தூரத்தில் புலியொன் றுறுமி,
நாலடி உயர மானைத் துரத்த – அம்மானோ
ஓரடிப் பாய்ச்சலில் எட்டடி தாண்டி
மூவிரு நொடிகளில் கரடியைக் கடந்தது! 71
நடப்பது இதுவென் றறியும் முன்னே,
நெருங்கிய புலிகண்டு நடுங்கிய குட்டிகள்,
நழுவித் தாயின் முதுகில் இருந்து,
நிலத்தில் சரிந்து நெஞ்சம் பதறின! 72
வேகம் எடுத்த புலிதன் னருகே,
தேகம் கறுத்த கரடியைக் கண்டு,
நாகம் போலுடல் சீறி எழுந்திட,
சாகுங் கலைமான் செத்துப் பிழைத்தது! 73
தூணைப் பிளந்த சிம்மம் போல,
முன்னங் கால்களை மேலே தூக்கி,
தோள்கள் விரித்து அசுரத் தாண்டவம்,
ஆத்திரம் பொங்க ஆடிடும் கரடி! 74
புஜபலங் காட்டும் முன்னர் எதிரியின்,
நிஜபலம் நோக்கும் மன்னர்கள் போல,
கஜநிறக் கரடியும் கறுவரிப் புலியும்,
ஜெயம்தனைக் கருதிப் போரின்றிப் பிரிந்தன! 75
அஞ்சுவ தஞ்சும் ஆற்றல் கொண்டு,
ஆரண் யத்தின் பாரம் பரியம்,
அறிந்த குறவன் அமைதியைக் காத்து,
ஆபத் துகளைத் தவிர்த்து வாழ்ந்தான்! 76
///புஜபலங் காட்டும் முன்னர் எதிரியின்,
நிஜபலம் நோக்கும் மன்னர்கள் போல,
கஜநிறக் கரடியும் கறுவரிப் புலியும்,
ஜெயம்தனைக் கருதிப் போரின்றிப் பிரிந்தன! ///
அத்தனையும் அற்புத மாயினும் இதுதனை -எந்தன்
கருத்தினை மிகக் கவர்ந்ததென்பேன்.
அருமை நடையில் அற்புதக் கற்பனை புனைவில்
சொற்பதம் நிறைந்த சுடர்மிகு கவியே!
வன நிகழ்சியை வரிகளில் தந்த கவிஞருக்கு பாராட்டுக்கள்,
இன்று முதல் பாராவே அட அட போட வைத்தது. குறவன் பாட்டை எதிர்பார்த்து நிற்கும் வாசகனில் நானும் ஒருவன்.
குட்டிகளுக்கு பாதிப்பு வந்திடுமோ என்று அசுரத் தாண்டவம் ஆடிய கரடியைக் கண் முன் நிறுத்தி விட்டீர்கள்!. தாய்மை என்ற உயரிய பண்பு எல்லா உயிர்கட்கும் பொது தானே!. கொஞ்சம் யோசித்தால் நிறையத் தத்துவங்கள் தோன்றுகின்றன. வாழ்வை ஒரு காடாக உருவகப்படுத்தினால், குறவனின் நிலையில் இருந்து, செய்ய வேண்டுவன செய்து, செய்யத் தகாதன தவிர்த்தால் ஆபத்துகளைத் தவிர்த்து வாழலாம்!. அற்புதம் கவிஞரே!. தொடர்ந்து வர ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஓரடி, நாலடி
நூறடிப் பாய்ச்சலில்
பாவடிகளில் முன்னேற்றம்..
நன்று…!
கரடிகளைப் பற்றிச் சொன்ன போது நான் கனடாவுக்கே சென்று விட்டேன். ஆமாம். அங்கே ஆல்பெர்டா, அலாஸ்கா மாகாணங்களில் பழுப்பு கரடிகள் உண்டு. அவை சாதாரணமாகவே மனிதர்களோடு சண்டை போடாமல் போய் விடும் ஆனாலும் தாய்க் கரடி ரொம்பவும் அபாயமானது. அது குட்டிகளைப் பதுக்கி வைத்திருக்கும் இடத்துக்கு அருகே நாம் யதேச்சையாக சென்று விட்டால் கூட, வருனே ஆபத்து.
இன்னொன்று. அந்தக் கரடிகளுக்கு, அதுகளை வம்பு பண்ணினால் கூட சும்மா விலகிப் போய் விடும். ஆனால் அதுகளின் சாப்பாட்டை நாம் களவாடி விடுவோமோ என்ற நினைப்பு வந்தால் நாமே அதற்கு சாப்பாடாகி விடும் வாய்ப்பு உண்டு.
ஒரு அறையில் சிரச்சேதம் செய்யும் அளவுக்கு fierce/ Grizzly bears.
கவிதைகளைப் படித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ள திரு.ஆலாசியம், திரு.தனுசு, திருமதி.பார்வதி இராமச்சந்திரன், திரு.செண்பக ஜெகதீசன் மற்றும் திரு.புவனேஷ்வர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Discovery Channel காட்சிகளை கவிதையாகவும் வடிக்க முடியுமோ!!! அருமை, அருமை கவிஞரே. கவிதை முழுவதுமே சுவை என்றாலும் என்னை மீண்டும் படிக்க வைத்த வரிகள்…
///குரங்கைப் போலக் கரடிக் குட்டிகள்
குதித்துத் தாவித் தாயின் முதுகில்,
களிறின் மீதமர் கோவைப் போல,
கம்பீரத் தொனி கொண்டமர்ந் தனவே!//
///அஞ்சுவ தஞ்சும் ஆற்றல் கொண்டு,
ஆரண் யத்தின் பாரம் பரியம்,
அறிந்த குறவன் அமைதியைக் காத்து,
ஆபத் துகளைத் தவிர்த்து வாழ்ந்தான்!///
பொதுவாக காணும் கவிதைகளின் கருவிலிருந்து நிகழ்ச்சிகளை சித்தரிப்பது என்ற வகையில் உங்களது கவிதைக்கரு மாறுபட்டிருப்பதே உங்களது கவிதைகளை தனித்து நிற்க வைக்கிறது… தொடருங்கள்.
அன்புடன்
….. தேமொழி
@@தேமொழி.
தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோதரி.