ராஜா ராணி பாடல்கள் ஓர் பார்வை
சூரியா
இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர், அட்லியின் முதல் படம் தான் இந்த ராஜா ராணி, ஆர்யா – நயன்தாராவிற்கும் கல்யாணம் என்று படத்திற்கு பரப்பரப்பாக விளம்பரம் செய்தவர். படத்தின் முன்னோட்டக் காட்சிகள் ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருக்கிறார் பாடல்கள் எப்படி இருக்கிறதென்று பார்ப்போம்.
ஹே பேபி
“அவளை , தன் வாழ்வில் இருந்து போகச் சொல்லும் அவன்”. முதல் பாதி மேற்கத்திய சாயலில் ஜி.வி பாடியிருக்கிறார், பின் பாதியை கானா பாடலாக அசத்தியிருக்கிறார், கானா பாலா. திருமணத்தை நையாண்டி செய்யும் வரிகளும் இடம் பெற்றிருக்கின்றன.
“ டும் டும் டும் , பீப்பீப்பீ ஊதிட்டா புது சங்கு தான்” போன்ற வரிகள் இது.
அழகாக இரு வேரு வகை இசையை ஒன்று சேர்த்திருக்கிறார் ஜி.வி.
அங்யாடே
“அவளுள் நிகழும் பல மாற்றங்கள் நிகழ்கிறாது தவிக்கிறாள், நகம் கடிக்கிறாள், வெட்க்கப்படுகிறாள் எல்லாம் அவனால் தானாம் “. பா.விஜய் இந்த பாடலை எழுத சக்தி ஸ்ரீ கோபாலன் குழைந்து பாடியிருக்கிறார். முதல் முறையே நம்மை கட்டிப்போடுகிறது இந்த பாடல்.
“என் நினைப்பில் குதிக்கறானே, என் மனசில் குழிக்குறானே
என படுத்திஎடுத்து, குழப்பி கெடுத்து படுத்துறானே”
சில்லென மழைத்துளி
” பார்த்ததும் காதல் அவனுக்கு, அவளுக்கும் அவ்வாறே ஆனால் இருவரும் தனித்தனியாக பாடுகிறார்கள்”. டெக்னோ இசையில் துவங்கி, நம்ம ஊரு மேளத்திற்கு வந்து பின் கேரளத்து இசைக்கும் பாடல் பயணிக்கிறது. இதை கிளிண்டன், அல்போன்ஸ் மற்றும் ஆல்கா இணைந்து பாடியிருக்கிறார்கள்.
கேட்போரையும் பாடல் லேசாக நனைக்கிறது.
“காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி
மீ்ண்டும் நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா?
கோபம் கொள்கையிலும் கிறங்கவைக்குதடி
மீண்டும் ஒரு முறை நீ கோபத்தில் பார்ப்பாயா? “
ஓடே ஓடே
“இருவரும் காதல் கொள்கிறார்கள் அதை காமிக் சாயலில் சொல்லியிருக்கிறார் ” பா.விஜய். விஜய் பிரகாஷ், சாஷா மற்றும் ஷல்மலை கொல்கடே இணைந்து பாடியிருக்கிறார்கள். இடையில் ராக் அண்ட் ரோல் சாயலில் சில வரிகள் வருகிறது. மெலிதான பீட்டுகள் எளிமையான வரிகள் மயக்கும் குரல் என வசீகரிக்கிறது பாடல்.
இமையே இமையே
“அவனுக்கும் அவளுக்கும் ஒரு புரிதல் ஏற்பட்ட நேரத்தில் பிரிவு ஏற்படுகிறது “. அதை அழகாக ஜி.வி மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் உயிர்ப்புடன் பாடியிருக்கிறார்கள். முந்தய பாடலில் காதல் சொன்ன பா.வி்ஜய் இதில் பிரிவின் வலி சொல்கிறார்.
“ சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து வானில் ஆண் மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன செய்ததோ பிழை
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனு அனுவாய் கலந்துவிட்டாய்”
உன்னாலே
“எல்லாமே அவனால் தான் என்கிறாள் அவள் “. நா.முத்துக்குமார் எழுத
வந்தனா ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார். நீளம் குறைவு தான் ஆனாலும் ஆழமாக ஒலிக்கிறது. இனி அலைபேசிகளில் அடிக்கடி கேட்கலாம் குரலில் அவ்வளவு உயிர்ப்பு.
ஜி.வி.க்கு வெற்றி தேவைப்படும் இந்த நேரத்தில் சரியாகப் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ராஜா ராணி சந்தோஷமாக நகர்வலம் வருவார்கள்..
மதிப்பெண்கள்: 3.75/5