“அக்கூ…. அக்கூ….”
(Plaintive cuckoo – அக்கூ பட்சி – Picture by Allen)
நடராஜன் கல்பட்டு
நேற்று அவருக்கு, அதான் என் கணவருக்கு, அறுபது வயது முடிந்தது. சஷ்டி அப்த பூர்த்தியை திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அம்ருதகடேஸ்வரர் சன்னதியில் செய்தால் விசேஷம் என்று பலரும் சொன்னதால் அங்கு சென்று வைதீக சடங்குகளை எல்லாம் செய்து முடித்தோம்.
அந்த ஊர்க் கோயிலின் விசேஷம் அங்குதான் சிவ பக்தனான மார்கண்டேயனுக்காக சிவ பெருமான் யமனையே செயல் இழக்கச் செய்தார். பக்தன் அபிராமி பட்டருக்காக அமாவாசையையே பௌர்ணமி ஆக்கினாள் அம்பாள் அபிராமி.
பூஜைகள் முடிந்ததும் உணவு உண்டபின் கிளம்பி பம்பாய் திரும்பு முன் எனது பிறந்த ஊரான திருச்சிக்கும் சென்று பார்த்து விட வேண்டும் என்பது எங்கள் திட்டம்.
அவர் சொன்னார், “லக்ஷ்மி போற வழிலெ கும்பகோணம் தஞ்சாவூர் எல்லாம் வரது. அங்கெல்லாமும் ஒரொரு நாள் தங்கீட்டுச் செல்லலாம்.. அங்கெ இருக்குற கோயில்களையும் பாத்தா மாதிரி இருக்கும். கும்பகோணத்தில் காவேரிலெ குளிச்சூட்டு கும்பேஸ்வரர், சாரங்கபாணி இவாளெயும் தரிசிக்கலாம்” என்று.
“சரி” என்று தலை ஆட்டினேன்.
மறு நாள் காலை காவேரிக்குச் சென்றோம் குளிக்க. அங்கு கேட்ட “அக்கூ… அக்கூ…” என்ற அக்கூ பட்சியில் குரல் என்னை முப்பத்தேழு வருஷம் பின்னிழுத்துச் சென்றது.
அப்போது எனக்கு வயது பத்தொன்பது. பியெஸ்ஸி பரீட்சை எழுதிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையோடு நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தேன். அக்கா மீனா தன் கணவருடன் கும்பகோணத்தில் இருதாள். அவளுக்குத் தலைப் பிரசவம் ஆக இன்னும் சுமார் மூன்று மாதங்கள் இருந்தன. அவள் மிகவும் பலவீனமாக இருப்பதாகக் கடிதம் எழுதி இருந்தாள். நல்லபடியாகப் பிரசவம் ஆக வேண்டுமே என்று அம்மா வேண்டாத தெய்வம் இல்லை. தாயுமானவர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவாள். ஆஞ்சனேயர் கோவிலுக்குச் சென்று வடமாலை சாத்துவாள்.
ஒரு நாள் அம்மா சொன்னாள், “ஏண்டீ லக்ஷ்மி ஒன் டிகிரி கைக்கு வரத்துக்கே இன்னும் ரெண்டு மூணு மாசம் ஆயிடும். மீனாக்கு அடுத்த மாசம் சீமந்தம் வறது. அதெ அவாத்துலெ செய்வா. அது முடிஞ்சதும் ஒரு நல்ல நாள் பாத்து அவளெ நம்மாத்துக்கு அழெச்சிண்டு வந்துடலாம். இந்த ரெண்டு மாசம் நீ அங்கெ போயி அவளுக்கு ஒத்தாசையா இருந்தூட்டு வாயேண்டி.”
“சரிம்மா” என்றேன் புது ஊர் பார்க்கும் ஆசையிலும் அக்காவைப் பார்க்கும் ஆசையிலும்.
எனக்கும் மீனாவுக்கும் ஆறு வயது வித்தியாசம். எத்தனை நாட்கள் என்னை அவள் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றி வந்திருக்கிறாள்? வெளியே எங்கு போனாலும் அக்காவின் இடுப்புதான் எனக்கு வண்டி.
இரண்டு நாட்களுக்குப் பின் கும்பகோணம் வழியாக விழுப்புரம் செல்லும் ஒரு வண்டியில் என்னை பத்திரமாக பெண்கள் பெட்டியில் ஏற்றி விட்டார் அப்பா.
கும்பகோணத்தில் அத்திம்பேர் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார் (அப்படித்தான் நாங்கள் அழைப்போம் அக்காவின் கணவரை. மற்றவர்கள் போல மாமா என்றழைத்தால் தாய் மாமன் உரிமையைக் கொண்டாடி விடுவாரோ அவர் என்ற பயமாக இருக்குமோ?) இருவரும் குதிரை வண்டியில் ஏறி கிழக்கு டபீர் தெருவை அடைந்தோம். என்னைப் பார்த்த அக்காவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள்.
“எப்பிடி வளந்தூட்டேடி நீ?”
“பின்னெ வளராமெ அப்பிடிய அங்குஷ்டாப்யாம் நமஹன்னு இருக்க முடியுமாக்கா?”
“இல்லெடி. ஒன்னெ இடுப்புலெ தூக்கி வெச்சிண்டு வீட்டெச் சுத்தி ஓடிவருவேன் நீ குதெரெ சவாரி போகணும்னு அடம் புடிக்கச்சேல்லாம். இப்பொ தூக்கினா என் இடுப்புதான் ஒடிஞ்சு போயிடும.”
“வாணாங்க்கா. ஒன் கொழிந்தெயெத் தூக்கி வெச்சுக்க ஒனக்கு இடுப்பு வேணும்.” கொல்லென்று சிரித்தோம் மூவரும்.
“மூஞ்சி, கை, கால் எல்லாம் அலம்பிண்டு வாடி. சூடா சாப்பிடலாம்.” அக்கா சொன்னபடி செய்தேன்.
எனக்கு மிகவும் பிடித்த உருளைக் கிழங்கு ரோஸ்ட் கறி, கத்தரிக்காய் ரசவாங்கி, கெட்டித் தயிர். அக்காவுக்கு தான் எத்தனை ஞாபக சக்தி. புது வாழ்க்கையில் பழையது எதையும் மறக்க வில்லை அவள். அன்று மாலை வரை வீட்டில் பழங் கதைகள் பேசிக் கொண்டு கழிந்தது பொழுது.
அத்திம்பேர் சொன்னார், “மீனா, லக்ஷ்மி ரெண்டு பேரும் கெளம்புங்கோ. குபேஸ்வரர், சாரங்கபாணி இவாளெ எல்லாமும் பாத்தூட்டு வரலாம்.”
அவசர அவசரமாக ஆடை மாற்றிக் கொண்டு கிளம்பினோம்.
கோவில்களைச் சுற்றிப் பார்த்தபின் அத்திம்பேர் கேட்டார், “லக்ஷ்மி நீ டிகிரி காபி சாப்பிட்டு இருக்கையோ?”
“டிகிரி காப்பீன்னா?”
“சுண்டக் காச்சின பாலுலெ அப்பொ எறக்கினெ டிகாக்ஷனெ உட்டுக் கலந்து சக்கெரெ போட்டுக் குடுப்பா. அதுதான் டிகிரி காப்பி. அதோடெ டேஸ்டே அலாதி.”
வெங்கடேஸ்வரா கஃபே உள்ளே நுழைந்தோம். காலியாய் இருந்த ஒரு டேபிளில் உட்கார்ந்தோம். அடுத்த கணம் அருகில் வந்து விநயமாக, “சாருக்கு என்ன வேணும்?” என்று கேட்ட பையனிடம், “மூணு நெய் ரோஸ்ட் மசாலா தோசை, மூணு டிகிரி காப்பி” என்றார் அத்திம்பேர்.
“மூணு மசாலா நெய் ரோஸ்ட்……………” என்று அந்தப் பையன் எங்கள் அருகில் இருந்தபடியே கத்தியது என் காதுகளை ‘ரொய்ங்’ என்று துளைத்தது. மூன்று நிமிஷம் கூட ஆகியிருக்காது. மசாலா நெய் ரோஸ்ட் குட்டி முழு வாழை இலைகளில் வந்து சேர்ந்தது. அதை நாங்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடிப்பதற்கும் காப்பி வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது. எனக்கு இரு விஷயங்கள் புரியவில்லை. கிச்சனில் தோசை வார்ப்பவர் காதுகள் என்ன கட்செவியா, எந்த பையன் என்ன பொருளை எவ்வளவு கேட்டான் என்பதை அறிய? பையன் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்டு தயார் செய்து எடுத்துத் தர அவரது நினைவாற்றல் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்?
வீடு வந்து சேர்ந்த போது இருட்டி விட்டது. மூன்று பேருக்குமே வயிறு நிரம்பி இருந்ததால் இரவு ஒரு டம்ளர் பாலை குடித்து விட்டுப் படுத்துக் கொண்டோம்.
அத்திம்பேர், “மீனா நாளெய்க்கி நீ லக்ஷ்மியெக் காவேரிக்குக் கூட்டிண்டு போ. அங்கெ குளிச்சூட்டு அப்படியே ஆஞ்சநேயர், பக்த விநாயகர், வேத விநாயகர் இவாளெயும் தரிசனம் பண்ணீட்டு வாங்கோ. காவேரிலெ குளிக்கறச்சே ஜாக்கிரதெ. ஒத்தர் கையெ ஒத்தர் புடிச்சுக் கோங்கோ. ரெண்டு நாள் லீவு போட்டதுனாலெ நாளெய்க்கி நான் சீக்கிரமே ஆபீஸ் கெளம்பணும். இல்லேன்னா நானே அழெச்சிண்டு போயிருப்பேன் ஒங்களெ” என்றார்.
“நீங்க கவெலெப் படாமெ ஆபீசுக்கு போயிட்டு வாங்கோன்னா. நான் என் லக்ஷ்மியெ கை நழுவ உடமாட்டேன்.”
மறு நாள் அக்காவும் நானும் காவேரிக்குச் சென்றோம். திருச்சியில் பார்க்கும் காவேரிக்கும் இங்கு பார்க்கும் காவேரிக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்! அங்கு அகலமான காவேரி. அதில் இரண்டு மாதங்கள் போக மற்ற மாதங்களில் முக்காலே மூணு வீசம் மணல். ஓர் ஒரமாகத் தண்ணீர். இங்கோ குறுகலான ஆறு. ஆனால் ஆறு பூராவும் தண்ணீர். கரையோரம் எல்லாம் அடர்ந்த மரங்கள். அவற்றைத் தாண்டி பச்சைப் பசேலென்று வயல் வெளிகள். தண்ணீர் சற்றே ஜில்லென்று இருதாலும் குளிக்க சுகமாக இருந்தது.
எங்கிருந்தோ “அக்கூ… அக்கூ…” என்று ஒரு குரல் கேட்டது.
“அக்கா அது என்ன சத்தம்?”
“அது அக்கூ பட்சியோடெ அழு குரல். அதோட அக்காவெ ஆத்து வெள்ளம் அடிச்சிண்டு போயிடுத்தாம். தன் அக்காவைத் தேடி அழறதாம் அது. ஆத்துலெ நெறெய தண்ணி போறப்பொதான் அதோடெ கொரல் கேக்கும்.”
“பாவம்கா. அது அக்கா மேலெ எவ்வளோ ஆசெ வெச்சிருக்கும்?”
ஆஞ்சனேயர், பிள்ளையார் சன்னதிகளி லெல்லாமும் என் காதுகளில் அக்கூ பட்சியின் குரல்தான் ஒலித்துக் கொண்டிருநது. வீடு வந்த பின்னும் அதே நினைவுதான்.
நாட்கள் மள மளவென்று ஓடின. அத்திம்பேருக்கு தான் அக்கா மேல் எவ்வளவு ஆசை? ஆபீசில் இருந்து திரும்பும் போது மல்லிகையோ, கதம்பமோ வாங்கி வரத் தவறியது இல்லை ஒரு நாளும் அவர். அவ்வப்போது காரா சேவை, முறுக்கு, ராயர் கடை போளி இப்படி ஏதாவது ஒன்றும் வரும்.
பதினைந்து நாட்கள் கட கடவென்று ஓடி விட்டன.
ஒரு ஞாயிறன்று நான் அம்மாவுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன். சத்தமின்றி பூனை போல் நடந்து வந்து என் பின்னிருந்து என்னை இறுக்கக் கட்டி என் கன்னத்தில் முத்தமிட முனைந்தார் என் அத்திம்பேர். நான், “அம்மா” என்று அலறினேன். என் அலறல் கேட்டு, “என்னடீ ஆச்சு லக்ஷ்மீ?” என்று கத்தியபடி பக்கத்து அறையில் படுத்திருந்த அக்கா அங்கு ஓடி வந்தாள். அவள் வந்ததைப் பார்த்த அத்திம்பேர் அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனாலும் அவர் கைப் பிடியின் இறுக்கம் தளரவே இல்லை..
“என்ன செய்யறேள்? விடுங்கோ அவளெ.”
“என்னடி செய்யறேன் நான்? என் பொண்ணு மாதிரிடி அவொ. ஒரு அப்பா பொண்ணுக்கு முத்தம் கொடுக்கறது தப்பாடீ?”
தாவி வந்து அக்கா அவர் கைகளைப் பிரிக்கப் பார்த்தாள். கைகள் பிரிந்தன. ஆனால் அவை அடுத்த கணம் நிறை கர்ப்பிணியை வேகமாகத் தள்ளியது சுவ்ற்றுப் பக்கம். அக்காவின் பின் மண்டை சுவற்றில் மோதியது.
“அம்மா….” என்றலறியபடி தரையில் சாய்ந்தாள் அக்கா. அத்திம்பேர் ஓடிப் போய் அடுத்த் தெருவில் இருந்த ஒரு டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தார்.
டாக்டர் கையால் அக்காவின் நாடியையும், பின் ஸ்டெத்தா ஸ்கோப்பால் இதயத்ட் துடிப்பையும் பார்த்தார். கண் இமைகளைத் திறந்து ஒரு டார்ச் லைட்டை இப்படி அப்படி ஆட்டினார்.
“அம்மா போயி பத்து நிமிஷம் ஆச்சு” என்று சொன்ன டாக்டர் அக்காவின் தலையை சற்று தூக்கிப் பார்த்தார். தரையிலும் தலையிலும் ரத்தம். அவர் கண்கள் தன்னிச்சையாக அக்கா கீழே கிடந்த இடத்துக்கருகே இருந்த சுவற்றுப் பக்கம் திரும்பியது. அங்கு சுவற்றிலும் ரத்தக் கறை.
“என்ன ஆச்சு?”
நான் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன்.
“வேகமா வந்தா. சுவத்துலெ இடிச்சுண்டுட்டா.”
“அப்படியா? யாரு சார் பின் பக்கமா இவ்வொளோ வேகமா நடக்கறாங்க? இது போலீசு கேசு. நான் இன்ஃபார்ம் பண்ணலேன்னா நாளெய்க்கு நானும் கம்பி எண்ண வேண்டி வரும்.”
அவசர அவசரமாக வெளியேறினார் டாக்டர். பத்து நிமிஷத்தில் போலீசும் வந்தது. பின் நடக்க வேண்டியவை நடந்தன. ஏழாண்டுகள் சிறையில் களி தின்ன பின் இன்று எங்கு இருக்கிறாரோ அவர்.
“அக்கூ… அக்கூ…” என்ற குரல் என்னை உலுக்கியது. அந்தப் பறவை போல நானும் “அக்கா… அக்கா…” என்று கத்தவேண்டும் போல இருந்தது.
“எந்தக் கோட்டெயெப் பிடிக்கப் போறெ நீ? படிக் கட்டுலெ அப்பிடியே பிரமெ புடிச்சா மாதிரி உக்காந்து இருக்கே?”
கணவர் குரல் கேட்டு படிக்கட்டை விட்டு எழுந்தேன். அவர் பின் நடைப் பிணமாய் நடந்து சென்றேன்.
“ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா(க) உறையற்க ஐம்புலனும்
தாங்கற்கு அரிதஆக லான்.” என்பது ஆசாரக் கோவை.
எதார்த்தமான உண்மைகளை உரக்கச் சொல்கிறது… இந்தச் சிறுகதை.
அருமை! பகிர்விற்கு நன்றி.