குறவன் பாட்டு – 11
சச்சிதானந்தம்
குறத்தியின் பயணம்
அறிமுகம்
கண்ணகிக்குக் கற்கோயில் எடுக்கவைத்த குலத்தில்,
தென்னகத்துக் கொற்றவையை வணங்கும் இனத்தில்,
புன்னகையும் நற்குணமும் கொண்ட குறத்தி,
தன்னலமே அற்றளாய்த் தோன்றி னாளே! 84
குறத்தியின் வருகை
அந்தி வானச் சிவப்புடன், ஒளி
மஞ்சள் கலந்த நிறத்துடன், எழில்
அங்கம் கொண்டு சிறப்புடன், குற
மங்கை மலர்ந்த முகத்துடன் வருகிறாள்! 85
நாவல் பழமெடுத்து மண்ணூதித் தின்றுவிட்டு,
சேவல் சிறகெடுத்து காதின் மெழுகெடுத்து,
பூவின் தேனெடுத்து இதழிரண்டில் இளித்துவிட்டு,
இனிக்கும் சாயமிட்டு, இடையாட்டிக் குறத்தி வந்தாள்! 86
கழுத்தில் கண்கவரும் வண்ணவண்ண மாலையிட்டு,
வழுக்கும் தோளிரண்டை வாடாமல் மூடிவைத்து,
இழுக்கும் கண்ணிரண்டை இங்குமங்கும் அலையவிட்டு,
செழிக்கும் கானகத்தைச் சீராகச் சுற்றி வந்தாள்! 87
தேன் நிறத்தில் தேகங்கொண்டு, நீல
வான் நிறத்தில் விழிகள் கொண்டு, நீண்ட
கான் கொடுத்த கவினைக் கொண்டு, நல்ல
மேன்மக்கள் குணங்கொண்டு குறத்தி வந்தாள்! 88
பச்சைக் காய்கனிகள் தினமும் உண்டு,
இச்சை என்பதை அளவாகக் கொண்டு,
கச்சையில் பற்பல வண்ணங் கொண்டு,
உச்ச அழகுடன் குறத்தி நடந்தாள்! 89
குடம் நிறையக் கொம்புத்தேன் கொண்டு வந்து
மனம் நிறைய வார்த்து நிற்கும் கவிதை!
அருமை!
பச்சையும், கச்சையும் பாலன்ன மேனியும்
இச்சைக் கொள்ளச் செய்குது கவிதை
சொச்சமும் வாசிக் கையிலே கவியது
சச்சிதானந்தமோ! அல்லது சாண்டில்யனோ!
பகிர்விற்கு நன்றிகள் நண்பரே!
காத்திருந்தது வீண் போகவில்லை, இறுதியில் மேன்மக்கள் குணங்கொண்டு வந்த உச்ச அழகு குறத்தியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டி விட்டது, மகிழ்ச்சி.
அன்புடன்
….. தேமொழி
குறத்தியை வர்னித்திருக்கும் வகையைப்பார்த்தால் அடுத்த முறை கன்னிக்குறத்தியைக் கண்டால் காதலிக்க தோன்றும் போலிருக்கிறது.அட்டகாசம்.
Alasiam G wrote////
//பச்சையும், கச்சையும் பாலன்ன மேனியும்
இச்சைக் கொள்ளச் செய்குது கவிதை
சொச்சமும் வாசிக் கையிலே கவியது
சச்சிதானந்தமோ! அல்லது சாண்டில்யனோ!///
சரியாக சொன்னீர்கள் நண்பரே.
சாண்டில்யன் என்றதும் முன்பு படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது.
தன் கதைகளில் வரும் கதாநாயகியை வர்ணிப்பதில் அசாத்திய மனிதர் சாண்டில்யன் அவர்கள். கற்பனை பாத்திரமே என்றாலும் அவளின் அழகை வர்ணனையில் படிக்கையில் படிப்போருக்கும் அந்த பாத்திரத்தின் மீது காதல் வந்து விடும். அப்படிப்பட்ட எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களை பார்க்க அவர் மீது காதல் கொண்டு ஒரு இளம் பெண் தன்னை திருமணம் செய்ய கேட்டுக்கொண்டாளாம், சரி வா நம் பொருத்தம் நன்றாக இருந்தால் செய்துக்கொள்ளலாம் என்று அழைத்தாராம், அந்தப்பெண்ணும் வந்து அவரைப்பார்த்து அதிர்ந்து விட்டாளாம். காரணம் அவரின் முதுமையான வயது, மெலிந்த தேகம்.
சாண்டில்யன் அவர்களை இன்னேரத்தில் நினைவூட்டிய தாங்களுக்கு நன்றிகள்.
அருமை. தொடர்க.
உச்ச அழகுடன் குறத்தியின் வருகை,
நல்ல கவித்துவ வரவு…!
மனம் திறந்த பாராட்டுக்களை வழங்கி மேலும் எழுதத் தூண்டும் நண்பர்கள் திரு.ஆலாசியம், திரு.தனுசு, திருமதி.தேமொழி மற்றும் திரு.கோதண்டராமன் ஐயா அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.
@@ திரு.செண்பக ஜெகதீசன்,
கவிதைகளைத் தொடர்ந்து படித்து வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்துவரும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!