இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…78
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
அடுத்தொரு மடலில் உங்களோடு இணைவதில் மகிழ்கிறேன்.
இந்த வாழ்க்கை எமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் எம்மைச் சூந்துள்ள அகப்புறச் சூழல்கள் வேறுபட்டவை..
சில சமயங்களில் இந்த வாழ்க்கை எமக்கு இனிப்பாகவும் சில சமயங்களில் கசப்பாகவும் இருக்கிறது.
பல சமயங்களில், பல சந்தர்ப்பங்களில் எமக்கு ஒன்று புரிவதில்லை. அதாவது இது ஒன்ரும் நாம் வேண்டிப் பெறப்பட்ட வாழ்க்கை அல்ல எம்மீது திணிக்கப்பட்ட வாழ்க்கை.
இந்தப் பெற்றோர்களுக்கு, இத்தனையாவது சேயாக வேண்டும் என்று நாம் கேட்டுக் கொண்டல்ல எமது வாழ்க்கை எமக்குக் கிடைக்கிறது.
ஆனால் கிடைத்த இவ்வாழ்க்கையில் எம்மில் எத்தனைபேர் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது கிலவும் சிக்கலான கேள்வி.
மகிழ்ச்சி என்பதன் அர்த்தத்தையே நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமாக விளங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுவே உண்மை.
ஆனால் இவ்வித்தியாசங்களினால் தான் இவ்வாழ்க்கையே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுவே உண்மை.
எமக்குக் கிடைக்காதவற்றைத் தேடி ஓடிப்போவது தான் இவ்வாழ்க்கையில் பலரது வாழ்வில் சகஜமாக நிகழ்கிறது.
அது தவரென்றும் கூறமுடியாது. ஏனெனில் இத்தேடலின் விளைவுகளாய்த்தான் இலட்சியங்கள் பரிமணிக்கின்றன..
ஆனால் இத்தெடல்கள் நியாயம் எனும் வரம்பினைக் கடக்கும் போதுதான் பலரது வாழ்வில் நிம்மதி பறி போகிறது.
என்னடா இது ! சக்தி என்ன ஒரே ததுவ மார்க்கத்தில் இம்மடலை வரைந்து கொண்டு போகிறானே என்றுறு எண்ணி அங்கலாய்க்காதீர்கள்.
விடயத்திற்கு வருகிறேன்.
உலகில் பலர் விபத்துக்களின் நிமித்தம் தமது அங்க அவயங்களைப் பறிகொடுப்பது உண்டு. ஆனால் சிலரோ பிறக்கும் போதே அங்கவீனர்களாக பிறக்கும் துர்பாக்கியத்தை அடைகிறார்கள்.
இதுகூட அவர்கள் கேட்டுப் பெறுவது அவர்களின் மீது திணிக்கப்படுவது ஒன்றே. விபத்தின் மூலம் அங்கத்தைப் பரி கொடுப்பவர்களின் துரதிர்ஷ்டத்தில் வேண்டுமானால் சில சமயங்களி அவர்களின் பங்கு ஒரு பகுதியாக இருக்கலாம்.
ஆனால் பிறப்பின் போதே அங்கத்தைப் பறிகொடுத்துப் பிறப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது.
அப்படியாக முழங்காலுக்கு கீழாக இரு கால்களையும் இழந்த நிலையில் பிறந்தவர் தான் ரிச்சார்ட் வைட்கெட் (Richard Whitehead) .
இவருக்கிருந்த அங்கக் குறைபாடுகளைப் பற்றி இவரது பெற்றோர் மனமுடைந்து மூலையில் இருந்து விடவில்லை.
சிறுவயதிலேயே முழங்காலுக்குக் கீழ் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட இவர் தனது வாழ்வைஇல் வெற்றியடைய ஒரேவழி விளையாட்டுத்துறை என்று இவரது பெற்றோர் இவருக்கு விளையாட்டுக்கள் மீது இருந்த ஆர்வத்தினால் தீர்மானித்தனர்,
தாய்தந்தையர் இவரை விளையாட்டுக் கழகங்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஓட்டப் போட்டியில் மிகவும் தேர்ச்சி பெற்றார்.
பாடசாலைப் போட்டிகளில் பல பரிசில்கள் பெற்றார்.
இவ்வரது முதலாவது பணி 27 வயதில் அவர் வாழ்ந்த நகரத்தின் நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்றுவிக்கும் பயிற்சியாளரானார்.
இலண்டனில் நடந்த 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மாற்றுத் திறளாளிக்களுக்கான பந்தயங்களில் அதீத வெற்றியீட்டினார்.
அவருக்கு இப்போ இங்கிலாந்து மகாராணியார் வழங்கும் விருதுகளில் ஒன்றான “மெம்மர் ஒவ் பிரிட்டிஷ் எம்பயர்”; எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.
38 வயதான இவர் ஒரு பெண்குழந்தைக்குத் தந்தையாவார். தன்னுடைய குழந்தையின் நல்வாழ்க்கையே தனக்கு அதீத முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுகிறார்.
அனைவரையும் போல என்னாலும் அனைத்தையும் புரிய முடியும் ஆனால் என்ன கொஞ்ச நேரம் அதிகமாகும் என்கிறார் மிகவும் சாதாரணமாக.
ஒரு சாதாரண தலைவலியோ அன்றிக் காய்ச்சலோ வந்து விட்டால் ஓடிப்போய் படுக்கையில் விழுந்து விடுகிறோம். பிறவியிலே தனக்கு இயற்கை கொடுத்த குறைபாட்டை ஒரு குறைபாடாகவே கருதாமல் வாழ்க்கையில் போராடி வெற்றியடைந்த இவரின் வாழ்வு . . . . . .
எமக்கெல்லாம் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கவில்லையா?
கிளம்புங்கள் சாதிக்க இன்னும் பலவுண்டு
அடுத்த மடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan