கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – சமச்சீர் கல்வி

0

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – சமச்சீர் கல்வி

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் தமிழக அரசு நிறுவிய சமச்சீர் கல்விக் குழுவின் தலைவராக இருந்தவருமான பேராசிரியர் ச. முத்துக்குமரன், சென்னை ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பக மொட்டைமாடிக் கூட்டத்தில் 11 ஜூன் 2011, சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு, ‘சமச்சீர் கல்வி’ என்ற தலைப்பில் பேச உள்ளார்.

சமச்சீர் கல்வி தொடர்பாக பேரா. முத்துக்குமரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு முறையான சில பரிந்துரைகளை அளித்தது. திமுக அரசு, அதன் அடிப்படையில், மெட்ரிக் பாடத்திட்டம், ஸ்டேட் போர்ட் பாடத்திட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தக் கல்வியாண்டில் இதன் அடிப்படையில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் அளிக்கப்பட இருந்த நிலையில் தேர்தலில் அஇஅதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய அரசு, சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. இது தொடர்பான ஒரு வழக்கு இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. பல லட்சம் மாணவர்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.

பேரா. முத்துக்குமரன், தான் தலைமை தாங்கிய குழு ஏன் அமைக்கப்பட்டது, அந்தக் குழு எவற்றையெல்லாம் பரிசீலித்து என்னென்ன பரிந்துரைகளை வழங்கினர் என்று நம்மிடையே உரையாடுவார். தமிழகத்தின் கல்வி அமைப்பில் என்னென்ன குறைகளை அவர்கள் கண்டனர், அவற்றை எப்படி சமச்சீர் கல்விக்குழுவின் பரிந்துரைகள் களைய முற்படும் என்பதையும் விளக்குவார்.

சமச்சீர் கல்விக்குழுவின் பரிந்துரைகளைப் புரிந்துகொள்வதன்மூலம் பெற்றோர்களும் கல்வியாளர்களும், இம்முறை ஏன் பரிந்துரைக்கப்பட்டது, செயல்முறைக்கு வந்தது எந்த வகையில் பரிந்துரையிலிருந்து வேறுபட்டுள்ளது ஆகியவற்றைப் புரிந்துகொள்ளலாம். மேலும் இது தொடர்பாக எம்மாதிரியான, புரிந்துணர்வுடனான நிலையை எடுக்கவேண்டும் என்று பெற்றோர்களும் கல்வியாளர்களும் முடிவு செய்யலாம்.

நாள்: 11 – ஜூன் – 2011, சனிக்கிழமை
இடம்: 33/15, எல்டாம்ஸ் ரோடு, கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 18.
நேரம்: மாலை 6 மணி.

அனைவரும் வருக!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *