சு. ​கோதண்டராமன்

      “உனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கா, கிம்பத்து? நாம ஃபோர்த் ஃபார்ம் படிக்கும்போது ஒரு நாளைக்கு எங்க ஸான்ஸ்கிரிட் வாத்யார் வழக்கம் போல மேஜை மேலே சாய்ஞ்சு தூங்கிண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து, கல்வி அதிகாரி வரார். நாங்க ஜன்னல் வழியாப் பாத்துட்டு, சார், சார், டிஈஓ வரார் சார் என்று எழுப்பினோம். மனுஷன் பதட்டமே படாமல், தஸ்மாத் னு சொல்லிண்டே நிமிர்ந்தார். இவர் நிமிர்றதுக்கும் டிஈஓ உள்ளே நுழையறதுக்கும் சரியா இருந்தது.

      “என்னங்காணும் என்னைப் பாத்த உடனே தஸ்மாத்துங்கிறீர். வெய்யறீரா, என்ன அர்த்தம் தஸ்மாத்துன்னான்னு கேட்டார் அதிகாரி.

      “தஸ்மாத் னா அதனாலேன்னு அர்த்தம்னார் இவர்.

      “அதனாலேன்னா இதுக்கு முன்னாடி ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தீர்னு ஆகுதே. நீங்க மேஜையிலே குப்புறப் படுத்துத் தூங்கினதைப் பார்த்தேனேன்னார் அவர்.

      “கும்பகர்ண ஏவம் நித்ராயாம் மக்னஹன்னு முதல்லே சொன்னேன். நீங்க அதை விட்டுட்டு தஸ்மாத்தை மட்டும் புடிச்சிண்டிருக்கேளேன்னார் இவர்.

      “அதுக்கு என்ன ஓய் அர்த்தம்னார் அவர்.

      “இப்படியாகக் கும்பகர்ணன் தூக்கத்திலே ஆழ்ந்திருந்தான்னு அர்த்தம்.

      “தத்ரூபமா நடிச்சுக் காட்டறீரோ, சரி, சரி போம்ன்னுட்டார் வந்தவர்.”

      “இதைக் கேளு சம்பத்து, அதே வருஷம் எங்க தமிழ் வகுப்பிலே நடந்ததைக் கேளு. தமிழ் ஐயா இலக்கண வகுப்பு நடத்திண்டிருந்தார். எனக்குத் தூக்கம் சொக்கித்து. ஐயா என்னை எழுப்பி, கிம்பத்து எழுந்திரு. நான் சொன்னது காதிலே விழுந்ததான்னார்.

      “நன்னா விழுந்தது ஐயான்னேன்.

      “தேமாங்கா, புளிமாங்கான்னா என்னன்னு விளக்கம் சொல்லு பார்ப்போம்னார்.

      “புளி மாங்காய்ங்கிறது ஆவக்காய் ஊறுகாய். தே மாங்காங்கிறது தேனிலே ஊறப்போட்டு முரப்பா பண்றதுன்னேன். பெஞ்சி மேலே ஏறுடான்னார். நான் ஏறினேன். நாலு பக்கத்து ஜன்னல் வழியாவும் பார்த்துட்டேன் ஐயா. எந்த மரத்திலேயும் மாங்கா இல்லேன்னேன். எல்லாரும் கொல்லுன்னு சிரிச்சப்பறம் எனக்கு முழிப்பு வந்தது.”

      கிழவர்கள் இருவரும் சிரித்து மகிழ்ந்தார்கள்.

      “என்னவோ கிம்பத்து, பார்க்கிலே வந்து உன்னோட பேசிண்டிருக்கிற ஒரு மணி நேரம் தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. வீட்டிலே அந்தக் கிழவி படுத்தற பாடு தாங்கல்லே. சித்த நாழி ஒக்கார விடமாட்டா. ரேஷன் கடைக்குப் போ, எலக்ட்ரிக் பில் கட்டு, பால் கார்டு வாங்கிண்டு வான்னு வெரட்டிண்டே இருக்கா.”

      “சேலை இல்லேன்னு சின்னாயி கிட்டப் போனாளாம். அவ ஈச்சம்பாயைக் கட்டிண்டு எதிர்க்க வந்தாளாம்கிற கதையா இருக்கு. எங்காத்துக் கதையும் ஒண்ணும் கொறச்சல் இல்லே. என் பேத்தி இருக்கே மகா ராட்சசி. அப்படியே அச்சு அவதாரம் பாட்டி. சித்த நாழி உக்கார விடாது. தூக்கிண்டு அங்கே போ, இங்கே போன்னு வெரட்டிண்டே இருக்கு. குழந்தையைப் பெத்தவா ஜாலியா ஆபீசுக்குப் போயிடறா. என் ஆம்படையாளான்னா எனக்கு அடுப்பங்கரையிலே வேலை இருக்கு, சித்த குழந்தையைப் பாத்துக்கப்படாதான்னு வெரட்டறா. மத்தியானம் ஆச்சுன்னா, நான் டீவிலே சீரியல் பாக்கணும், குழந்தையைத் தூங்கப் பண்ணுங்கோன்னு உத்திரவு. அதுவானா தூளிலே படுத்துண்டு கை விடாம ஆட்டிண்டே இருங்கறது. சித்த கண்ணை அசந்தா அலறி ஊரைக் கூட்டறது குட்டிப் பிசாசு. எங்கேயாவது போய் ஒரு வாரம் நிம்மதியா இருந்துட்டு வரலாம் போல இருக்கு. நம்ம அருமை அவாளுக்கும் அப்பத் தான் புரியும்.”

      “எனக்கும் அப்படித்தாண்டா இருக்கு. திருப்பதிலே வாலண்டியர் வேணும்னு பேப்பர்லே போட்டிருக்கான். ஒரு வாரம் தான் வேலையாம். போய்ட்டு வரலாமா?”

      “சரி, போகலாம். விசாரிச்சுப் பாரு.”

      *     *     *     *     *

      “ஹலோ, திருப்பதிக்கு வாலண்டியர் வேணும்னு கேட்டிருக்கேளே, நானும் என் சினேகிதரும் வரலாம்னு இருக்கோம்.”

      “என்ன வயசாறது?”

      “ரெண்டு பேருமே அறுபத்தஞ்சு தான்.”

      “உடம்பிலே எந்த வியாதியும் இல்லியே?”

      “சுகர் பிரஷர் எதுவும் இல்லே. அம்மா பிசைஞ்சு போட்ட பழையது மகிமை. கல்லுக்குண்டு மாதிரி இருக்கோம்.”

      “சரி. பேரைச் சொல்லுங்க.”

      “என் பேரு சம்பத்து. என் சினேகிதர் பேரு கிம்பத்து.”

      “அது என்ன பேரு, வடக்கத்திக்காரரா?”

      “இல்லே. நம்மூர் தான். கிருஷ்ணசாமின்னு பேரு. சின்ன வயசிலேருந்து ஒண்ணாப் படிச்சோம். எப்போதும் ரெண்டு பேரும் சேர்ந்தே இருப்போம். அதனாலே மத்த பசங்கள்ளாம் சம்பத்து- கிம்பத்துன்னு பேரு வெச்சுட்டா. அதுவே நிலைச்சுப் போச்சு.”

      “சரி, இன்னிக்கு ராத்திரி 9 மணிக்கு வேன் புறப்படறது. சத்திய நாராயணர் கோவிலுக்கு வந்துடுங்க.”

      *     *     *     *     *     *

      “ஏண்டா வயசைக் கொறைச்சுச் சொன்னே?”

      “எழுபதுன்னு உண்மையான வயசைச் சொன்னா சேத்துக்க மாட்டா. கவலைப் படாதே. பர்த் சர்ட்டிபிகேட் எல்லாம் கேக்க மாட்டா.”

      *     *     *     *     *     *     *

      “உனக்கு எங்கேடா ட்யூட்டி கிம்பத்? உன்னோடே சேத்துப் போடுன்னேன். கேக்க மாட்டேன்னுட்டார் அந்த சூபர்வைசர். எங்கே வேகன்சி இருக்கோ அங்கே தான் போடுவாராம். வைகுண்டம் க்யூவிலே வரவாளை ரெகுலேட் பண்ணுன்னுட்டார். நாள் பூரா நின்னு நின்னு காலை வலிக்கறதுடா.”

      “எனக்கு செருப்பு பாத்துக்கற வேலை. ஒரு புள்ளையாண்டான் கம்ப்யூட்டரை வெச்சிண்டு ஒக்காந்திருந்தான். நான் வரவா பாதுகை எல்லாம் வாங்கி ராக்கிலே வெச்சுட்டு அந்தப் பொந்து நம்பரைச் சொன்னா அவன் ரசீது அடிச்சுக் குடுப்பான். நாள் பூரா குனிஞ்சு நிமிந்து பெண்டு கயண்டு போச்சுடா. நாளைக்கி நாம இதிலேருந்து கயண்டுட வேண்டியது தான். என்ன சொல்றே?”

      “பண்டரிபுரம் போறோம், ஒரு வாரம் ஆகும்னு சொல்லிட்டு வந்திருக்கோம், நினைவு இருக்கா. இப்ப போய் நின்னா, என்ன ஏதுன்னு ஆயிரம் கேள்வி வரும். பேசாம கீழ்த் திருப்பதிக்குப் போயி ஒரு லாட்ஜிலே தங்கிட்டு சொன்ன தேதிக்கு வீட்டுக்குப் போயிடலாம்.”

      “சரிடா.”

                *              *              *              *              *              *              *

      “என்னடா இது, இந்த லாட்ஜிலே மேனேஜர்லேருந்து ரூம் பாய் வரைக்கும் நம்மையே சுத்தி சுத்தி வரான். ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை கதவைத் தட்டறான். நிம்மதியா இருக்க விடமாட்டானுக போல இருக்கே.”

      “நம்மைத் தீவிரவாதின்னு சந்தேகப்படறாண்டா. நான் வெத்திலை வாங்கக் கீழே போனப்ப, அவா தெலுங்கிலே பேசிண்டிருந்தது காதிலே விழுந்தது. இளம் தம்பதிகளா வருவா, வயசான தம்பதிகளா வருவா, இள வயசுக்காரா ரெண்டு பேர் சினேகிதாளா வருவா. ரெண்டு கிழவாளா இதுவரைக்கும் வந்ததில்லே. தீவிர வாதிகள் தான் சந்தேகம் வராம இருக்கணும்னு கிழவாளைப் புடிச்சு அனுப்பி இருக்கான்னு பேசிண்டிருந்தா.”

      “சரி. இந்த எடம் சரிப்படாது. எனக்குத் தெரிஞ்சவர் ஒத்தர் முதியோர் இல்லம் நடத்தறார். அவர் கிட்டே கேக்கறேன், பேயிங் கெஸ்டா ஒரு அஞ்சு நாளைக்கு இருக்கலாமான்னு.”

      “சரி. உடனே கேளு.”

      *     *     *     *     *     *     *

      “என்னவோ தெரிஞ்சவர்னு சொன்னியேன்னு பாத்தேன். செமத்தியா வேலை வாங்கறார்டா. இங்கே பணம் குடுத்தவா, குடுக்காதவா, பர்மனெண்டா இருக்கறவா, டெம்பரரியா இருக்கறவா எல்லாரும் சமம். நமக்கு நாமேங்கிறார். பெஞ்சைத் துடை, எலையை எடுத்துப் போடு, தண்ணியை எடுத்து வைன்னு வெரட்டிண்டே இருக்கார்டா.”

      “வேலை கூடச் செஞ்சுடலாம் போல இருக்கு. மத்தக் கிழங்கள்லாம் பேசற பேச்சு புடிக்கல்லே. உங்க பையன் வெளிநாட்டிலே இருக்கானாங்கிறது ஒண்ணு. புள்ளே மாட்டுப் பொண்ணு வீட்டை விட்டு வெரட்டிட்டாளான்னு கேக்கறது இன்னொண்ணு. இவாளுக்குப் பதில் சொல்ல முடியல்லே.”

      “சும்மாத் தான் நாலு நாளைக்கு வந்திருக்கோம்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா. குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேட்டுண்டே இருக்கா. பகல்லேயும் தூங்க முடியல்லே. ராத்திரிலேயும் கொசுக்கடி தூங்க முடியல்லே. நாளைக்குக் காலம்பற ஊரைப் பார்க்க போய்ச் சேர்நதுடுவோமா?”

      “அது தான் சரி. கஷ்டமோ, நஷ்டமோ நம்ம வீடு தான் நமக்கு சொர்க்கம்.”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *