நிலவைக் கண்டால் நீலா
சு. கோதண்டராமன்
“சுப்பையா, கொண்டைக் கடலை மாலை கட்டி வைச்சிருக்கேன். ஆபீசுக்குப் போகும்போது சிவன் கோவில்லே தட்சிணாமூர்த்திக்குப் போட்டுட்டு வேண்டிக்கிட்டுப் போப்பா” என்றார் தாய்.
“சரிம்மா” என்றான்.
“மறந்துடாமல் எடுத்துக்கிட்டுப் போ” என்று வலியுறுத்தினார்.
அவனா மறப்பான்? இது அவன் தலையாய வேலை ஆயிற்றே!
எத்தனையோ தெய்வங்களுக்கு எத்தனையோ விதமான மாலைகள் போட்டாகி விட்டது. சிவனுக்கு வில்வ மாலை 25 வாரம். அம்பாளுக்கு ரோஜாப்பூ மாலை 21 வாரம். செவ்வாய்க்கு அரளி மாலை 7 வாரம். துர்க்கைக்கு எலுமி்ச்சை மாலை 36 வாரம். அனுமாருக்கு வெத்திலை மாலை 18 வாரம். ஒரு தடவை சோளிங்கர் போய் நரசிம்ம சுவாமிக்கு ஏலக்காய் மாலை கூடச் சாற்றி வந்தான். அந்த வரிசையில் இப்பொழுது தட்சிணாமூர்த்திக்கு வியாழன் தோறும் கடலை மாலை போட்டுக் கொண்டிருக்கிறான். கடுகு மாலை, மிளகு மாலை, சீரக மாலை தான் பாக்கி. இனி யாராவது புதிய சோதிடர் வந்து அதைப் போடச் சொன்னால் அதற்கும் தயாராகத் தான் இருக்கிறான். இத்தோடு 15 வாரங்கள் ஆகிவிட்டது. இன்னும் 3 வாரங்கள் பாக்கி. அதற்குள் நல்ல சேதி எதாவது வருகிறதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.
எதற்காக? இதெல்லாம் எதற்காக?
எல்லாம் அவன் திருமணத்திற்காகத் தான். வயது 36 ஆகிவிட்டது. இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வயது முறையே 40, 38 ஆகிறது. 16 வருஷம் முன்பு பெரிய அண்ணனுக்கு பெண் தேட ஆரம்பித்த பெற்றோர்கள், சின்ன அண்ணனையும், பிறகு இவனையும் அதில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரம் கொடுக்காத பத்திரிகை இல்லை, பதியாத திருமணத் தகவல் நிலையம் இல்லை. நண்பர்கள், உறவினர்கள் எல்லாரிடமும் சொல்லி வைத்திருக்கிறது. யாருக்கும் திருமணம் ஆகிற வழியைக் காணோம். அண்ணன்கள் இரண்டு பேரும் அலுத்துப் போய், அந்த எண்ணத்தையே கை விட்டு விட்டார்கள். இவனுக்கு மட்டும் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.
இருந்தாலும் இந்த சாமி எல்லாம் சுத்த மோசம், ஒரு சாமிக்காவது கொஞ்சம் நன்றி உணர்ச்சி இருக்கணுமே என்று கோபம் வந்தது சுப்பையாவுக்கு. அவன் ஒரு அரசாங்க ஊழியன். மிகவும் நேர்மையானவன். கை நீட்டி லஞ்சம் வாங்கிவி்ட்டால் அந்த வேலையை முடிக்காமல் அன்று வீட்டுக்குப் போக மாட்டான். தன் அளவு நேர்மை இல்லாவிட்டாலும், ஓரிரு மாதம் தாமதமாகவாவது சாமி தன் வேலையை முடித்துக் கொடுத்தால் பரவாயில்லை என்று நினைக்கிறான். இதை வெளியில் சொல்லிக் கொள்ளவும் முடியவில்லை. அவன் பேசுவது எந்த சாமி காதிலாவது விழுந்து, அது அவனுக்குக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அருளைத் தடுத்து நிறுத்திக் கொண்டால் என்ன செய்வது என்று பயமாக வேறு இருக்கிறது.
லஞ்சம் வாங்கலாமா, தப்பில்லையா? இந்தக் கேள்வியை வேறு யாரும் கேட்பதற்கு முன் அவனே கேட்டுக் கொள்வான். என்ன செய்வது? சோதிடர்களுக்கும் அவர்கள் சொல்லும் பரிகாரங்களுக்குமே ஒவ்வொரு மாதமும் ஐயாயிரம், பத்தாயிரம் என்று ஆகிறது. இதற்காகத் தான் கை நீட்டித் தொலைக்க வேண்டியிருக்கிறது. எந்த சாமியாவது கருணை காட்டிக் கல்யாணம் செய்து வைத்து விட்டால் அப்புறம் இந்த அதிகப்படி செலவுகளும் இராது, பாவம் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படாது என்று அவனே சமாதானப்படுத்திக் கொள்வான்.
பெரிய பண்டிட் முதல் மரத்தடி சோதிடர் வரை எல்லாரையும் பார்த்தாகி விட்டது. கிளி ஜோஸ்யம், கீரி ஜோஸ்யம், பல்லி ஜோஸ்யம், பாம்பு ஜோஸ்யம் என ஒன்றும் பாக்கி இல்லை.
ஒரு முறை 5000 ரூபாய் கட்டணம் கட்டி ஐந்து நட்சத்திர ஓட்டலில் முகாம் இட்டிருந்த ஒரு ஆந்திர ஜோஸ்யரிடம் ஜாதகம் பார்த்தான். அவர் இந்த மாதம் குரு பெயர்ந்த உடன் கண்டிப்பாகத் திருமணம் நிச்சயம் ஆகும் என்றார். குருவும் பெயர்ந்தார். அடுத்த ராசிக்குப் போவதற்கும் ஆயத்தம் ஆகிவிட்டார். எந்த சேதியையும் காணோம்.
அடுத்த தடவை ஒரு மரத்தடி சோதிடர் கண்ணில் தென்பட்டார். நெற்றி நிறைய சந்தனமும், குங்குமமும், கழுத்து நிறைய ருத்ராட்சமும் அவரைப் பார்த்தாலே தெய்வீகமாக இருக்கவே அவரிடம் ஜாதகத்தைக் காண்பித்தான். பழைய சோதிடர் சொன்னது பலிக்கவில்லை என்பதையும் சொன்னான். அவர் நன்றாக ஆராய்ந்து பார்த்துவிட்டு, “எந்த மடையன் சொன்னது குரு பலம் வந்தால் உங்களுக்குக் கல்யாணம் ஆகுமென்று? உங்கள் ஜாதகத்தில் குரு நீசனாகி விட்டான். அவன் எந்த ராசியில் இருந்தாலும் உங்களுக்கு ஒன்று தான். உங்களுக்கு ஏழாம் இடத்திலே புதன் உச்சமாக இருக்கிறான். அதனாலே, புத தசை ஆரம்பிக்கும் போது தான் உங்களுக்குத் திருமண வாய்ப்பு” என்றார்.
“அது எப்போ ஆரம்பிக்கும்?”
“இன்னும் மூணு வருஷம் இருக்கு.”
“மூணு வருஷமா? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க.”
“இதிலே எல்லாம் பேரம் பண்ண முடியாதுங்க. கிரகங்களுக்குப் பூர்வ பலன் என்று ஒன்று உண்டு. அதாவது முறையான அதிகாரம் வருவதற்கு முன்னதாகவே பலன் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு நீங்கள் புதன் கிழமை தோறும் மஞ்சள் வேட்டியைக் கட்டிக்கொண்டு நவக் கிரகத்தை 9 முறை அங்கப் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.”
அப்படியே செய்தான். மூன்று வருஷமும் முடிந்துவிட்டது. பூர்வ பலனும் வரவில்லை, அபர பலனும் வரவில்லை.
ஒரு முறை பத்திரிகைகளில் மணமகன் தேவை பகுதியை மேய்ந்து கொண்டிருந்தபோது “திருமணத் தடையா? பிரபல நேமாலஜிஸ்ட் நெற்குன்றம் நீலமேகத்தைச் சந்தியுங்கள். எத்தனையோ பேர் பலன் பெற்றுள்ளனர்” என்று ஒரு விளம்பரத்தைப் பார்த்தான். அவரிடம் போனான். நேமாலஜிஸ்ட், நியூமராலஜிஸ்ட், ஜெம்மாலஜில்ட், பொட்டாலஜிஸ்ட் என்று பல பட்டங்கள் அவருடைய பெயருக்குப் பின் இருந்தன.
“உங்க பேரு?”
“சுப்பையா”
“என்ன ஸ்பெல்லிங் போடறீங்க? ”
“எஸ் யூ பி பி ஏ ஐ ஒய் ஏ.”
“கூட்டுத் தொகை 2 வருது. உங்க பிறந்த தேதி? ”
“3-1-1977”
“கூட்டுத் தொகை 1 வருது. உங்களுக்கு நினைச்ச காரியம் எதுவுமே நடக்காதே. வாழ்க்கையே ரொம்பக் கஷ்டமா இருக்குமே.”
“ஆமாங்க. 12 வருஷமா முயற்சி பண்ணியும் திருமணம் நடக்கல்லிங்க.”
“எப்படி நடக்கும்? எப்படி நடக்குங்குறேன்? ”
“ஏன்? ”
“பிறந்த தேதிப்படி நம்பர் 1. பேரு பார்த்தா 2 வருது. ஒண்ணாம் நம்பர் கொடுக்க நினைக்கிறதை ரெண்டாம் நம்பர் தடுத்துடுது. பிறந்த தேதியை மாத்த முடியாது. பேரை மாத்தினாத் தான் எதுவும் நல்லது நடக்கும்.”
“அப்படியா? ”
“உங்க பேரிலே ரெண்டு பி வருதுல்ல, ஆங்கில ரெண்டாவது எழுத்து பி. அதுக்குப் பதிலா ப்பி, அதாவது 16வது எழுத்து, அதைப் போட்டுங்க. உங்களுக்கு அதிருஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.”
“அப்படியா? ”
“எஸ் யூ ப்பி ப்பி ஏ ஐ ஒய் ஏ. இதிலே மூணு விசேஷம் இருக்கு. கூட்டுத் தொகை ஒண்ணு வருது. அதனாலே இதுக்கும் தேதிக்கும் இருந்த பகை போயிடுது. ப்பி ப்பி ன்னு வரது நாதஸ்வர ஓசை இல்லியா? மங்கள வாத்யம். கல்யாணம் நிச்சயம். இப்ப பேரிலே வர ப்பையா என்பது சிறு வயதுப் பையனைக் குறிக்கும். அதனாலே நீங்க வயசானது தெரியாம என்னிக்கும் சின்னப் பையனாவே இளமையா இருப்பீங்க.”
“அப்படியா? ”
“இந்தப் பேரை தினம் 307 தடவை எழுதிப் பாருங்க அந்த மாதிரி 307 நாள் செய்யணும். அதோட, இந்த நீலக் கல் மோதிரம் தரேன். இது விலை 10,000 ரூபாய் தான். இது உங்க நம்பருக்கு அதிருஷ்டக் கல். அப்புறம் பாருங்க. உங்களைக் கையிலே பிடிக்க முடியாது.”
மோதிரத்தை வாங்கிக் கொண்டு வந்தான்.
307 நாளும் ஆயிற்று. கையெழுத்து வேள்வியும் முடிந்தது. ஒண்ணாம் நம்பரின் அதிருஷ்டம் இன்னமும் அவன் ஒண்டிக் கட்டையாகத் தான் இருக்கிறான்.
“ஏண்டா தம்பி, இந்த நாடி சோதிடம்னு சொல்றாங்களே, அப்படியே பலிக்குதாமே, அதை வேணா ஒரு தடவை பார்த்து விடலாமே” என்றார் அவன் தாய்.
விசாரித்துக் கொண்டு வைதீஸ்வரன்கோவிலுக்குப் போனான். அங்கே நகர் வலம் வந்த போது இருபது முப்பது இடத்தில் நாடி ஜோதிடம் என்று போர்டுகள் தொங்கின. அதிலே யார் மிகச் சரியாகச் சொல்வார் என்று தெரியவில்லை. சரி, கோவிலுக்குப் போய் சாமியையே கேட்டு விடுவோம் என்று போனான். அங்கே பிரகாரத்தில் நான்கு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பேச்சுக் கொடுத்ததில் வழி புலப்பட்டது.
“பிருகு நாடி ஜோதிடம் என்று போர்டு போட்டிருப்பது தான் ஒரிஜினல், மற்றதெல்லாம் போலி” என்றார்கள்.
பிருகு முனிவர் பல லட்சம் வருஷங்களுக்கு முன்னே உலகத்தி்ல் எல்லா நாடுகளிலும் எல்லாக் காலத்திலும் பிறக்கப் போகும் மனிதர்களுடைய ஜாதகத்தை எல்லாம் தனித் தனி ஓலைகளில் எழுதி முத்து என்பவரிடம் கொடுத்தாராம். அவர் நாடி முத்து என்று பெயர் பெற்றார். அவருடைய பரம்பரையினர் எல்லோருமே நாடி முத்து, நாடி ரத்தினம் என்ற பெயரைத் தான் மாற்றி மாற்றி வைத்துக் கொள்வார்களாம்.
“தற்போது இருப்பவர் பெயர் நாடி முத்து. அவரிடம் இருப்பது தான் பிருகு முனிவர் கையால் எழுதின ஓலைகள். மற்றவர்கள் எல்லாரும் செராக்ஸை வைத்துக் கொண்டு பிழைக்கிறார்கள்” என்றார்கள்.
நாடி முத்துவை நாடிப் போனான். முன் அறையில் ஒரு வரவேற்பாளர் இருந்தார். “நாடி ஜோஸ்யம் பார்க்க வந்திருக்கிறேன்” என்றான்.
“உடனே பார்க்க முடியாது. 190 பேர் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 191வது நபராக உங்களைப் பதிவு செய்து கொள்வோம்.”
பணம் கட்டிவிட்டுக் கேட்டான், “நான் எப்போ வரணும்?”
“ஒரு நாளைக்கு 12 பேருக்கு மேலே பார்க்கக் கூடாதுன்னு பிருகு முனிவர் சொல்லி இருக்கார். அதனாலே உங்களுக்கு நாளை முதல் 16வது நாள் மாலை 4 மணிக்குத் தான் அப்பாயிண்ட்மெண்ட்” என்றார்.
அடுத்த 16வது நாள் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டுவிட்டு நாடிமுத்துவிடம் போனான்.
போய் உட்கார்ந்ததும் நாடிமுத்து அவன் முகத்தை உற்றுக் கவனித்தார். “நீங்க இந்த நேரத்துக்கு வருவீங்கன்னு பிருகு முனிவர் சொல்லி இருக்கார். அதனாலே நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். உங்கள் ஜாதகத்தை எடுத்துத் தருகிறேன், பாருங்கள்” என்றார்.
உள்ளே போய் ஒரு ஓலையை எடுத்து வந்து படிக்கத் தொடங்கினார். ‘பார் பார் முருகனைப் பாரதிவேகமா மயில் மேலே வரார் பார்’ என்றார்.
“உங்க பேரு முருகனுடைய பேர்களில் ஒன்று தானே?” என்றார்.
அவன் தந்தை சுப்பிரமணிய பாரதியிடம் பற்றுக் கொண்டவர். அதனால் அவனுக்கு பாரதியின் செல்லப் பெயராகிய சுப்பையா என்ற பெயரை வைத்திருந்தார். இந்த ஜோதிடருக்கு அது தெரிந்திருக்கிறதே, பாரதி பெயரைக் கூடச் சொல்லி விட்டாரே என்று அதிசயித்தான். அது மட்டுமல்ல, அவனுடைய தந்தை தாய் பெயரையும் மறைமுகமாகக் குறிப்பிட்டார். பிறந்து மூன்று மாமாங்க காலம் ஆகியும் அவன் கன்னி கழியாமல் இருப்பது பற்றியும் குறிப்பிட்டார். தை மாதம் தாலி கட்டும் வேளை வந்து விட்டது என்றும் கூறினார். மிகுந்த மகிழ்ச்சியோடும் நம்பிக்கையுடனும் வீட்டுக்கு வந்தான்.
தை வந்து போயிற்று. தாலியைத் தொடும் பாக்கியம் கிட்டவில்லை. பிருகு முனிவரிடம் போய் ஏமாற்றி விட்டீர்களே எனச் சண்டை போட வேண்டும் என்று போனான். விவாகக் காண்டம் பார்க்க வேண்டும் என்று மறுபடியும் ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வெயிட்டிங் லிஸ்டில் வைத்து பத்து நாள் கழித்து வரச் சொன்னார்கள்.
போனான். நாடி முத்து மீண்டும் அவனுடைய ஓலையை எடுத்து வந்தார். அதை நன்றாக ஊன்றிக் கவனித்து விட்டு, “உங்களுக்கு சர்ப்ப தோஷம் இருக்கிறது, அதைச் சரி செய்யும் வரையில் திருமணம் ஆகாது என்று பிருகு முனிவர் சொல்கிறார்” என்றார்.
“அதை எப்படிச் சரி செய்வது?”
“சர்ப்ப யாகம் செய்ய வேண்டும். பத்தாயிரம் ரூபாய் ஆகும்.”
“சர்ப்ப யாகமா? புராணத்தில் பரீட்சித்து ராஜா தான் எல்லாப் பாம்புகளையும் யாக குண்டத்தில் விழ வைத்து சர்ப்ப யாகம் செய்ததாகச் சொல்வார்கள். அந்த மாதிரிப் பாம்புகளை எல்லாம் பிடித்து ஹோமம் செய்ய வேண்டுமா? இது சாத்தியமா?”
“கவலைப்படாதீங்க. செய்ய முடியாத பரிகாரம் எல்லாம் பிருகு முனிவர் சொல்ல மாட்டார். மாவால் பாம்பு மாதிரி செய்து ஹோமம் செய்வார்கள். அந்த மந்திரம் தான் முக்கியம்.”
பத்தாயிரம் கொடுத்தான். மூன்று மணி நேரம் அவனைப் புகையில் திணற விட்டார்கள். ஹோமம் முடிந்த பின், நாடி முத்து அவனைக் கூப்பிட்டு, “ஹோமம் செய்தது மட்டும் போதாது. நீங்கள் ஒரு முறை காளஹஸ்திக்குப் போய் ஒரு இரவு அங்கே கோவிலில் படுத்து வாருங்கள்” என்றார்.
அதையும் செய்தான். தூங்கும்போது எவரோ அவன் பர்ஸை அடித்துக் கொண்டு போய்விட்டார்கள். நல்ல வேளை. ஏடிஎம் கார்டு தனியாக வேறு இடத்தில் வைத்திருந்ததால் வீடு வந்து சேர முடிந்தது.
எண்கண் என்ற முருகன் தலத்தில் சாமியார் ஒருவர் குறி சொல்வதாகக் கேள்விப்பட்டு அங்கே போனான். சாமியார் ஆஞ்சநேயர் படத்தின் முன் அவனை உட்கார வைத்தார். படத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்தார். அதில் ஒரு மைப் பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அதையே உற்றுப் பார்த்தார்.
“உங்க பேரு சுப்பையாவா?”
“ஆமாங்க.”
“உங்க ஊரு கும்பகோணமா?”
“ஆமாங்க.”
“உங்க தெருக் கடைசியிலே ஒரு குளம் இருக்கா?”
“ஆமாங்க.”
“உங்க வீட்டுக்கு முன்னாலே ஒரு வேப்ப மரம் இருக்கா?”
“ஆமாங்க.”
“வீட்டின் கொல்லையில் ஒரு நெல்லி மரம் ரொம்ப நாளாக் காய்க்காமல் இருக்கா?”
“ஆமாங்க.”
நேரில் பார்த்தது போல புட்டுப் புட்டு வைக்கிறாரே என்று வியப்பில் அப்படியே உறைந்து விட்டான்.
“உங்களுக்குக் கல்யாணம் ஆகல்லைன்னு ரொம்ப நாளா வருத்தமா இருக்கீங்க.”
“ஆமாங்க.”
“உங்க அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகல்லை.”
“ஆமாங்க.”
“வீட்டிலே தோஷம் இருக்கு அதனாலே தான் இப்படி எல்லாம் நடக்குது. எலுமிச்சம் பழம் மந்திரிச்சுத் தரேன். அதை ஒரு கயிற்றில் கட்டி வீட்டு வாசலில் தொங்க விடுங்க. ஓரு மாசத்திலே நெல்லியும் காய்க்கும், உங்களுக்கும் திருமணம் ஆகும். கிழக்குத் திசையிலிருந்து ஒரு பெண் வரதா ஆஞ்சநேயர் சொல்றார். உங்களுக்கு வரப் போற மனைவி பேரு நீலான்னும் சொல்றார்.”
ஒரு வருஷம் ஆகிவி்ட்டது. எலுமிச்சம்பழம் காய்ந்து சுருங்கி வாசலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நெல்லியும் காய்க்கவில்லை, நீலாவும் வரவில்லை.
அண்ணன்மார்களின் கதி தான் தனக்கும் என்ற முடிவுக்கு வந்து விட்டான். ஆனால் அவன் தாய் அவனுக்கு நம்பிக்கை ஊட்டினார், “உனக்குன்னு ஒருத்தி இனிமேலா பிறக்கப் போகிறாள்? எங்கேயோ இருக்கிறாள், வரத் தான் போகிறாள்” என்று.
அவனும் கிழக்கிலிருந்து வரும் ரயில்கள் பஸ்களில் எல்லாம் நீலா வந்து இறங்குகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். ஏதேனும் நிழல் அசைந்தால் அது நீலாவாக இருக்கக் கூடுமோ என்று பரபரக்கிறான். நிலவைக் கண்டால் என் நீலாவின் முகம் இப்படித் தான் இருக்குமோ என்று மயங்கி நிற்கிறான்.
நீங்கள் யாராவது நீலாவைப் பார்த்தால் விரைவில் இந்த மஜ்னுவை வந்து சந்திக்கச் சொல்லி அனுப்புங்கள்.