18. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்

0

18. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (3), பாரிஸ், ப்ரான்ஸ்

சுபாஷிணி ட்ரெம்மல்

இப்போது நாம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் எகிப்திய பண்டைய நாகரீகச் சின்னங்கள் அரும்பொருட்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கின்றோம்.

1798-1801 ஆண்டு காலவாக்கில் நெப்போலியன் போனபார்ட்டின் எகிப்திய வருகை அவனுக்கு அந்த தேசத்தின் பண்டைய கலைப் பொக்கிஷங்களின் மேல் அளவற்ற ஆர்வத்தையும் மயக்கத்தையும் உண்டாக்கியிருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் அவன் பயணம் முடிந்து திரும்புகையில் கொண்டு வந்தவையாக இங்கு கணிசமான எகிப்திய தொல்லியல் சான்றுகளோ ஏனைய ஆவணங்களோ இல்லை. மாறாக இங்கிருப்பவை பெரும்பாலும் அதற்கும் முன்பே மன்னன் 18ம் லூயிஸ் காலத்தில் சேர்த்தவையும் மேலும் தனியார் சேகரிப்பாக இருந்து பின்னர் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து சேர்ந்தவையும் என்றே குறிப்பிடலாம்.

மன்னன் லூயிஸின் காலத்தில் சேகரிக்கப்பட்ட எகிப்திய அரும்பொருட்கள் ஏராளம். இன்றிருக்கும் நக்தோர்ஹெப் சிலையும் சேக்மட் சிலையும் அப்போது கொண்டு வரப்பட்டவையே. 1824லிருந்து 1827 வரை பற்பல சேகரிப்புக்களிலிருந்து என ஏறக்குறைய 9000 அரும்பொருட்கள் இங்கே கொண்டு வரப்பட்டதாம். இவை அனைத்தையும் பாதுகாக்கவும் ஆராய்ச்சி செய்யவும் ஒரு தனித்துறையை லூவ்ரே அருங்காட்சியகத்தில் அப்போதைய மன்னன் அமைத்திருக்கின்றார்.

இக்காலகட்டத்தில் லூவ்ரே அருங்காட்சியகத்தின் ஆதரவில் தொல்லியல் ஆய்வறிஞர் மரியேட் எகிப்துக்குப் பயணமானார் அங்கே அவர் கண்டெடுத்தவையே செராப்பியம் சக்காரா இவையிரண்டு கலைசிற்பத் தொகுதிகளும். இங்கே அவர் தொடர்ந்து களப்பணிகளை நடத்திக் கொண்டிருந்தார். 1852 முதல் 1853 வரை நடத்திய களப்பணிகளில் 5964 அரும்பொருட்கள் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டன. அவையனைத்தையுமே ஒன்று விடாமல் பாரிஸுக்கு அனுப்பி வைத்தார் மரியெட். களப்பணி முடிந்து பாரிஸ் திரும்பியதும் இவரே லூவ்ரே அருங்காட்சியகத்தில் எகிப்திய பண்டைய அரும்பொருட்கள் பகுதியின் அமைப்பாளராக பணியிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அகழ்வாய்வின் போது உயிரைப் பணையம் வைத்து களப்பணிகளில் ஈடுபட்டவர் மரியட். அப்படித் தேடி கண்டெடுத்த விலைமதிப்பற்ற அப்பொருட்களின் அருமை பெருமை அறிந்து அவை சரியாகப் பாதுகாக்கப்பட வேண்டும், இதனால் ப்ரான்ஸ் நாட்டிற்கும் பெருமை ஏற்படும் என்ற எண்ணம் அவருக்கு மனம் நிறைய இருந்திருக்க வேண்டும்.

இக்காலகட்டத்தில் ஆங்கிலேய, ஜெர்மானிய, ப்ரென்ச் தொல்லியல் அறிஞர் குழுக்கள் சில எகிப்தில் வரிசையாக பல அகழ்வாய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தன. உதாரணமாக அபு ரோசா அகழ்வாய்வு, ஆசூய்ட் அகழ்வாய்வு, பாவிட் அகழ்வாய்வு, மெடாமுட் அகழ்வாய்வு என சிலவற்றை குறிப்பிடலாம். இதன் அடிப்படையில் தொடர்ந்து சில அரும்பொருட்கள் லூவ்ரெவிலும் வந்து சேர்ந்தன.

லூவ்ரெவின் எகிப்திய அரும்பொருட்கள் பகுதியில் இருக்கும் சில அற்புதப் படைப்புகளைக் காண்போம்.

1

மூன்று கடவுள்கள் இருக்கும் வகையில் ஒரே க்ரனைட் கல்லில் செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் இது. தரையில் வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு அரசன் (ராம்ஸஸ் II அல்லது மெர்னெபத் ஆக இருக்கலாம்) இடது புறத்திலிருக்க, கழுகுத் தலை கொண்ட இறைவடிவமான ஹோருஸ் வலது புறமிருக்க நடுவிலே கடவுள் ஓஸிரிஸ் நிற்கும் வகையில் அமைந்த சிற்பம் இது. ஏறக்குறைய கிமு 1279-1203 வாக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சிற்பம் இது. 1.34 மீட்டர் உயரமும் 0.78 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு வடிவம். 1818ம் ஆண்டில் இது லூவ்ரே அருங்காட்சியகத்திற்காக வாங்கப்பட்டது.

 2

மன்னர் 3ம் ராம்ஸஸின் உடலை வைத்திருந்த கல்லறை கற்பெட்டி. இந்தக் கற்பெட்டியைச் சுற்றிலும் ஹிரோக்லிப்ஸ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அருங்காட்சியகத்தின் குறிப்பின்படி இது Book of Amduat நூலின் 7ம், 8ம் அத்தியாயங்களைக் கொண்டிருக்கின்றது என்பது தெரிய வருகின்றது. இக்கற்பெட்டியின் உள்ளே Book of Gates நூலின் முதல் அத்தியாயம் ஹிரோக்லிப்ஸ் எழுத்துருவில் கீறப்பட்டிருக்கின்றது. இதன் காலம் கிமு 1184-1153. இது கண்டெடுக்கப்பட்ட இடம் அரச பள்ளத்தாக்கு (Valley of King, Tomb of Ramses III). 1826ம் ஆண்டில் இது லூவ்ரே அருங்காட்சியகத்திற்காக வாங்கப்பட்டது.

அக்தெதொப் மஸ்தாபா - சக்காரா சேகரிப்பு.
அக்தெதொப் மஸ்தாபா – சக்காரா சேகரிப்பு.

இதில் ஒரு ஊழியன் ஆட்டினைப் பிடித்து இழுத்துச் செல்வது போல வடிக்கப்படுள்ளது. இது ஒரு பெரிய பாறையின் மேல் தீட்டப்பட்ட தொடர் சித்திரத்தின் ஒரு பகுதி மட்டுமே. இச்சித்திரங்களோடு ஹிரோக்லிப்ஸ் எழுத்துக்களும் ஆங்காங்கே இருப்பதைக் காணலாம். இச்சித்திரத்தின் கதையினை விளக்கும் முகமாக அவை கீறப்பட்டிருக்க வேண்டும்.

இவை மட்டுமின்றி, 3ம் ராம்ஸஸ் கட்டிய கோயில்களின் சில சுவர் பகுதிகள், மன்னன் எக்னத்தோன் கட்டிய கோயில்களின் சில சுவர் பகுதிகள், அரசர்கள் பள்ளத்தாக்கில் நிகழ்த்திய தொல்லியல் ஆய்வுகளின் போது கிடைத்த மம்மிகள், அவற்றோடு சேர்த்து வைக்கப்பட்டிருந்த பொன்னும் மணிகளும், வைர வைடூரியங்களினாலான ஆபரணங்கள், வாகனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்களாகிய நாற்காலி, ஜாடிகள், மேசை என பல பொருட்கள் இங்கே அடுத்தடுத்து என நமது கண்களுக்கு விருந்தாகிப் போகும்.

மன்னர்கள் அல்லது ராஜ குடும்பத்தைச் சேர்ந்தோர் இறந்து போனால் அவர்களின் உடலை பதப்படுத்தி மம்மியாக்கி அதனை ஒரு பேழைக்குள் வைத்து அப்பேழைக்குள் அந்த மனிதரின் பொருட்களையும் சேர்த்து வைத்து புதைப்பது அக்கால எகிப்திய வழக்கம். இப்படி மம்மியாக செய்யப்படுபவர்களின் அந்தஸ்திற்கேற்ப பேழைகளின் தன்மைகள் அமையும். உதாரணமாக துரதிஷ்டவசமாக மிக இளம் வயதிலேயே இறந்து போன தூத்தான்சாமூனின் மம்மியும் அம்மம்மியோடு கூடவே கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய பொருட்களும் இப்பகுதி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தங்கத்தினாலான பேழைக்குள் மன்னனின் மம்மி உடல் இருந்தது. மூன்று பேழைகள், தேர்கள், படுக்கைகள், என வரிசை வரிசையாக பல பொருட்களை அம்மன்னன் இறந்தும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்த்தே வைத்துப் புதைத்து விட்டார்கள்.

இது நடந்தது சில ஆண்டுகளுக்கு முன். இது போல பல மன்னர்களின் இறந்த உடலின் மம்மியோடு கண்டெடுக்கபப்ட்ட விலைமதிக்க முடியாத ஆபரணங்களும், அரும்பொருட்களும் மண்ணுக்குள் புதையுண்டு போகாமல் ஐரோப்பா மட்டுமின்றி அமெரிக்காவின் பல அருங்காட்சியகங்களிலும் வீற்றிருந்து பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

தொடரும்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *