ஓட மதவிலே…
ஓட மதவிலே
ஒத்தயில காத்திருக்கும் கொக்கே கொக்கே- நானும்
அத்தமவன் வருவானுண்ணு
ஒத்தக்காலுல நிக்கேன் நிக்கேன்..
வாடக்காத்துல
ஓடக்கரயில
ஆடக் காத்திருக்கும் மயிலே மயிலே
பாடாப்படுத்துறானே பாவிமவன்,
தேடவெச்சிட்டானே- அப்பன்
கூடப்பொறந்தவா பெத்தபுள்ள..
அரிசிபோட்டா
அருகவரும் மைனா மைனா
உருகிப்போயி நிக்கிறனே,
தெருவிலபோன மச்சானத்தான்
தேடிப்பாத்து வரச்சொல்லு- நான்
வாடுறதப் போய்ச்சொல்லு..
சொல்லச்சொல்லத்
திருப்பிச்சொல்லும் கிளியே கிளியே
பாலும்பழமும் ஒனக்குத்தந்தேன்- எம்
மேலக்கொஞ்சம் எரக்கம்காட்டு,
வேலதேடிப் போனமச்சான்
வெபரந்தெரிஞ்சி எனக்குச்சொல்லு- என்
வேதனயக் கொறச்சித்தள்ளு..
துள்ளிஓடும் கண்ணுக்குட்டி
மொள்ளவாயேன் கிட்டகொஞ்சம்,
எள்ளளவும் பயமில்லாமத்
துள்ளுறியே- நானும்
எம்மச்சான் பேரச்சொல்லி
ஏங்குறனே..
சோறுபோட்டா
சேந்துவரும் காக்கா காக்கா
சேதிஒண்ணு தெரிஞ்சிக்கிட்டேன்,
காலயில ஒங்கொரலக்
கேட்டுப்புட்டேன்-
கட்டாயம் வந்துடுவான்
எம்மச்சான்,
கறியுஞ்சோறும் ஒனக்குத்தான்
கட்டாயம் நாந்தருவேன் காக்கா காக்கா…!
படத்துக்கு நன்றி
http://fengshui.about.com/od/fengshuicures/qt/feng-shui-birds.htm
ஆஹா! அருமை. சங்க இலக்கியப் பாடல்களில் தலைவி இயற்கையின் பரிமாணங்களான பல்வகை உயிரினங்கள், மரம், செடி, கொடி, மலை, ஆறு என அனைத்துடனும் பேசுவது போலவும், பேசித் தலைவனின் வரவுக்காகக் காத்திருப்பதை அவற்றுடன் பகிர்ந்து கொள்வது போலவும் எழுதப்பட்ட பாடல்களைப் போல, பலவகைப் பறவைகளுடன் தலைவி பேசுவதுபோல் இந்தப் பாடல் அமைந்துள்ளது மிகவும் அருமை. வாழ்த்துக்கள் திரு.செண்பக ஜெகதீசன்.