நான் அறிந்த சிலம்பு – 103
மலர் சபா
*புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை*
அறுகம் புல்லையும் குவளை மலர்களையும்
ஒருங்கே சேர்த்து
பொன்னிறமான செந்நெற்கதிர்களுடன் கோர்த்து
ஏரிலே சூட்டி
போற்றுவோர் வணங்கி நிற்க
நிலத்தையே பிளக்கும் வண்ணம்
உழவர் இசைத்த ஏர்மங்கலப்
பாடலின் ஒலி
ஒருபுறம் ஒலிக்கும்.
நெல்லை அறுத்து
ஓரிடத்தில் குவித்து
அதனைக் கடாவிட்டு மிதித்து
உதிர்ந்த நெல்லை
முறத்தில் எடுத்துத் தூற்றும்போது
இசைக்கின்ற முகவைப் பாட்டின் ஒலி
ஒருபுறம் ஒலிக்கும்.
தெளிந்த ஓசையுடைய
தடாரியைக் கையில் கொண்டு
கள்ளுண்டு செருக்கில் பொருநர்கள்
கரிய சாந்து பூசப்பட்ட
திர்ண்ட முழவிலே தோற்றுவித்த
இனிய ஆரவார ஒலி
ஒருபுறம் ஒலிக்கும்.
இவ்வாறு மருதநிலத்தில்
பல்வேறு ஓசைகளைக் கேட்டு
வருத்தம் கொள்ளாதவராய்
மகிழ்ச்சி கொண்டவராய்
இன்னும் மேலும் ஒலிகள் கேட்கின்ற
ஆர்வமுடையவராய் ஆற்றின் கரையில்
நடந்து சென்றனர் அம்மூவரும்.