அண்ணாகண்ணன்

படிமம்:Nammalvaar.jpg

வேகமாக அறுவடை செய்யப்
பலரும் துடித்தபோது,
துடிப்புடன் விதைத்தாய்.

தங்க வாத்தை அறுக்கப்
பலரும் முயன்றபோது
நல்ல வார்த்தை பகர்ந்தாய்.

அஞ்சிப் பலர்
பின்தங்கியபோது,
நெஞ்சை நிமிர்த்தி
முன்வந்தாய்.

அலட்சியமாய்ப் பலர்
மறந்தவற்றை
இலட்சியமாய் ஏந்தி
உழைத்தாய்.

பசுமை காக்கப்
போராட்டக் களம் புகுந்தாய்.
எம் உளம் முழுதும்
பசுமையாய் நிறைந்தாய்.

நீயும் எங்கள் தாய்.

நீ இறந்தாய் என்கிறது செய்தி.
ஆனால், இருக்கின்றாய் என்றே சொல்லும்
ஒவ்வொரு துளி நீரும்
மலரும் ஒவ்வொரு துளிரும்
ஊற்றும் தென்றல் காற்றும்
இன்றும் என்றென்றும்.

=============================
படத்துக்கு நன்றி: தமிழ் விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நம்மாழ்வார்

  1. நம்மாழ்வார் இயற்கையுடன் கலந்து நம்மை எல்லாம் என்றென்றும் இனி ஆழ்வார்! வேளாண்மை வையகத்தில் உள்ளவரை வாழ்வார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *