அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (26)

0

26. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! பங்கர் ஹோட்டல் அருங்காட்சியகம், ஸ்டுட்கார்ட், ஜெர்மனி

சுபாஷிணி ட்ரெம்மல்

எனது கடந்த அருங்காட்சியகத் தொடர் பதிவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ஒரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்வது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

நீங்கள் என்னுடன் வரத் தயார்தானே?

ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் வருடத்திற்கு ஒரு முறை மார்ச் மாத மத்தியில் அருங்காட்சியக இரவு என்னும் நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய நாளில் மாலை ஐந்து மணி தொடங்கி மறு நாள் காலை மூன்று மணி வரை ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் நாம் சென்று பார்த்து வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அருங்காட்சியகப் பிரியர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் செல்ல வசதியாக அன்று பேருந்துகள் இலவசமாக செலுத்தப்படும். ஒருவர் 15 யூரோ கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதுமானது. கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறும் போது நமக்கு ஒரு விளக்கக் கையேடு கொடுக்கப்படும். அதில் ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களை வகைப்படுத்தி, குழுக்களில் அமைத்து, பேருந்துகள் ஒரு அருங்காட்சியக வாசலிலிருந்து மறு அருங்காட்சியகம் செல்லும் வகையில் ஏற்பாடு அமைந்திருக்கும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஒரு சனிக்கிழமை மாலை நான் இந்த அருங்காட்சியக பயணத்தில் பங்கு கொண்டு நான் வசிக்கும் நகரின் அருகாமையில் இருக்கும் அருங்காட்சியகங்களைப் பார்த்து வருகிறேன். மாலை ஐந்திலிருந்து பயணித்தாலும் ஒரு அருங்காட்சியக தினத்தில் ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து அருங்காட்சியகங்களை மட்டுமே காண முடியும். அப்படி ஒரு முறை பயணித்த போது ஸ்டுட்கார்ட் மத்தியில் அமைந்திருக்கும் நிலத்திற்குக் கீழே உள்ள ஒரு அருங்காட்சியகம் செல்லும் ஆச்சரியம் மிக்க ஒரு அனுபவத்தைப் பெற்றேன். விளக்கக் கையேட்டினை வாசித்து எங்கே இருக்கின்றது என இந்த அருங்காட்சியகத்தைத் தேடிக் கொண்டு ஸ்டுட்கார்ட் மார்க்கெட்ப்ளேஸ் (Marktplatz) சென்று சேர்ந்தோம். வெறும் தரை. ஆனால் வரிசையாக மக்கள் நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவராக மனிதர்கள் கீழே நோக்கிச் செல்வதைப் பார்த்த எனக்கு நிலத்தின் அடியில் இருக்கும் அருங்காட்சியகம் செல்கின்றோம் என்று அறிந்ததும் ஒரு தனி குதூகலம் ஏற்பட்டது. அதே வேளை உள்ளே சென்றவர்களும் வெளியே வந்து கொண்டிருந்தனர்.

நுழைவாயில் பகுதி 1940களில்
நுழைவாயில் பகுதி 1940களில்

எங்களின் வாய்ப்பு வர நாங்களும் மேல் தரைப் பகுதியிலிருந்து அன்று மட்டுமே பிரத்தியேகமாக திறக்கப்பட்ட பாறை கற்களுக்குக் கீழே அமைக்கப்பட்டிருந்த படிகளில் இறங்கி உள்ளே நடந்து சென்றோம்.

1940ம் ஆண்டு வாக்கில் இப்பகுதியில் இன்றும் மிகப் பிரபலமாக விளங்கிய Breuninger வர்த்தக நிறுவனத்திற்கு விற்பனையாளர்கள், வணிகர்கள் தங்குவதற்கு ஒரு தங்கும் விடுதி தேவைப்பட்டது. இந்த வர்த்தக நிறுவனம் இன்றும் அருகாமையிலேயே இயங்கி வருகின்றது. மிகப் பெரியதொரு அங்காடி விற்பனை நிலையம் இது.

இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய Breuninger வர்த்தக நிறுவனம் இப் பகுதியில் சற்றே தள்ளி தரைக்கடியில் உள்ள நிலத்தில் பாதுகாப்பை மையமாகக் கருதி ஒரு தங்கும் விடுதியை அமைக்க திட்டம் தீட்டி, வரைபடத்தையும் தயார் செய்து கட்டுமாண வேலைகளையும் தொடங்கியது. இந்த நிலத்துக்கு அடியில் அமைந்த தங்கும் விடுதியோடு இணைந்தார் போல வாகன நிறுத்துமிடம், பிறகு அதிலிருந்து மேல் நோக்கி வரும் வகையிலான ஒரு பாதை என்பதையும் இந்த கட்டுமானம் கொண்டிருந்தது.

இந்த நிலத்துக்கு அடியிலான கட்டுமானம் என்பது அக்கால கட்டத்தில் நிகழ்ந்த முதலாம் உலக யுத்தம், பின்னர் தொடங்கிய இரண்டாம் உலக யுத்தம் ஆகியனவற்றை முக்கியமாக மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே. இங்கு ஸ்டுட்கார்ட் மட்டுமல்லாது, ஜெர்மனியின் பல ஊர்களில் நிலத்துக்கடியில் தங்கும் வீடுகள், மறைவிடங்கள், தொழிற் சாலைகள், சந்திப்புக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள் என பல இருக்கின்றன. அந்த வகையில் இதுவும் ஒன்றே!

இப்படி நிலத்திற்கு அடியில் இயங்கிய வாழ்விடங்களின் உதாரணங்களாக இதுவரை ஸ்டுட்கார்ட் நகரில் ஒன்றும், என் இல்லத்திற்கு அருகாமையில் ஃபெல்பாஹ் நகரில் ஒரு நிலத்திற்கடியிலான இரவு கேளிக்கை விடுதியையும் நான் நேரில் சென்று பார்த்து வந்திருக்கின்றேன். இங்கு நமக்கு கிடைக்கும் அனுபவமே தனி தான்.

இந்த ஸ்டுட்கார்ட் பங்கர் ஹோட்டல் யுத்த காலத்தில் வணிகம் தடைபடாமல் இருப்பதற்கும் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகவே இருந்தது. எதிர்பார்த்தது போலவே 1944ம் ஆண்டு ஜூலை 25-26ம் தேதிகளில் ஸ்டுட்கார்ட் பகுதியில் வெடி குண்டுகள் தாக்கியதில் பல கட்டிடங்கள் சேதத்துக்குள்ளாயின. அந்த சமயத்தில் இந்த பங்கர் ஹோட்டலில் பலர் ஒளிந்துகொண்டு தங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொண்டனர்.

ஒரே சமயத்தில் இந்த நிலத்துக்கடியில் அமைக்கப்பட்ட இந்த தங்கும் விடுதியில் பலரும் இருப்பது என்பது எளிதான காரியமல்ல. மூச்சு விட போதிய ஆக்ஸிஜன் போதாமையினாலும் காற்று அழுத்தக் குறைவினாலும் சிரமங்களைத் தாங்கிக் கொண்டே தம் உயிரை இந்த மக்கள் தற்காத்துக் கொண்டனர் என்பதில் சந்தேகம் இல்லை.

ஸ்டுட்கார்ட் நகரின் மையப்பகுதி 1944ம் ஆண்டு  போரினால் ஏற்பட்ட சேதங்களுடன்
ஸ்டுட்கார்ட் நகரின் மையப்பகுதி 1944ம் ஆண்டு போரினால் ஏற்பட்ட சேதங்களுடன்

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் 1979ம் ஆண்டில் இந்த பங்கர் ஹோட்டல் பொது மக்களின் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக இணைக்கப்பட்டு ஸ்டுட்கார்ட் மாநகராட்சியின் பொறுப்பின் கீழ் வந்தது. அதே காலகட்டத்திலும் பின்னரும் ஜெர்மனியில் பல இடங்களில் இப்படி நிலத்துக்கடியில் இயங்கிய சில மறைவிடங்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் முயற்சிகள் நடைபெற்றன. அதன் அடிப்படையில் இந்த ஹோட்டல் மத்திய அமைச்சின் பொறுப்பில் சிலகாலங்கள் என இருந்தாலும் அதன் பின்னர் பராமரிப்பில் படிப்படியாக சில மாற்றங்கள் நிகழ, பின்னர் மீண்டும் ஸ்டுட்கார்ட் மாநகராட்சியின் கீழ் வந்தது.

அதன் பின்னர் அருங்காட்சியக இரவு நாட்களில் பொது மக்கள் பார்வையிட வருடத்தில் ஒரு நாள் மட்டும் இந்த நிலத்தின் அடியில் இருக்கும் ஹோட்டல் மாநகராட்சியின் அனுமதி வழங்கப்பட்டு திறக்கப்படுகின்றது.

அறைகள் வரிசையாக
அறைகள் வரிசையாக

உள்ளே நுழைந்தால் வரிசை வரிசையான அறைகள் இருப்பதை முதலில் காணலாம். ஒவ்வொரு அறையிலும் பல அடுக்குகளினாலான கட்டில்கள் போடப்பட்டிருக்கின்றன. ஒரு மூலையில் கேளிக்கை பகுதி என அமைத்து அங்கே ரேடியோ, அலங்காரப் பொருட்கள் என வைத்திருக்கின்ரனர். தொடர்ந்து நீளமான பாதையில் நடந்து சென்றால் ஓரிடத்தில் தனி சமையலறை பகுதி இருக்கின்றது.

அறைகளில் இன்னமும் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் கட்டில்கள்
அறைகளில் இன்னமும் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் கட்டில்கள்

ஹோட்டலின் நிலை பிரத்தியேகமாக புதுப்பிக்கப்படாமல் எந்த மாறுபாடுகளும் இன்றி அப்படியே 1940களில் இருந்த வகையிலேயே இன்றளவும் பாதுகாக்கப்படுகின்றது.

போரினால் ஏற்பட்ட சேதம் நிகழ்வதற்கு முன் இந்த ஹோட்டலின் காட்சி
போரினால் ஏற்பட்ட சேதம் நிகழ்வதற்கு முன் இந்த ஹோட்டலின் காட்சி

இந்த பங்கர் ஹோட்டல் தற்சமயம் மக்கள் புழக்கத்தில் இல்லாமையால் இது அருங்காட்சியகமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஸ்டுட்கார்ட் நகர அருங்காட்சியகப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றது. இங்கு நேரில் வந்து இந்த அருங்காட்சியகத்தைக் காண விரும்புபவர்கள் ஜெர்மனிக்கு மார்ச் மாதம் 13 – 30ம் தேதிக்குள் உங்கள் வருகை இருப்பதாக திட்டமிட வேண்டும். இந்த குறிப்பிட்ட வேளையில் அமைகின்ற ஒரு சனிக்கிழமையே ஒவ்வொரு ஆண்டும் ஸ்டுட்கார்ட் நகரின் அருங்காட்சியக நிகழ்வு நடைபெறும்.

சரி.. நிலத்திற்கடியில் இந்தப் புழுக்கத்தில் எவ்வளவு நேரம் நாம் நிற்பது?

வாருங்கள்.. உங்களை மற்றொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.

தொடரும்..

சுபா

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *