நான் அறிந்த சிலம்பு – 110 (03..03.14)
மலர் சபா
புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
கவுந்தியடிகளும் இங்ஙனம் மறுமொழி பகன்றார்:
“இவர்கள் எம்முடைய மக்கள்;
நீங்கள் கூறியது போல்
மன்மதனோ ரதியோ அல்லர்.
நீண்ட வழி நடந்து வந்து
மிகவும் களைப்புற்று இருக்கின்றனர்.
தொந்தரவு செய்யாமல்
இவர்களை விட்டு விலகிச் செல்லுங்கள்.”
காமுகர்கள் பழிப்புரை
அதற்கு பதில்கூறுமுகமாய்,
“ஒரு தாய் வயிற்றில் பிறந்த இருவர்
கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்வது என்பது
நீர் கற்ற எந்த நூலிலும் உள்ளதோ?”
என்று கேலி பேசினர் அந்தக் காமுகர்கள்.
கவுந்தியடிகள் சாபம்
இத்தீய மொழிகளைக் கேட்ட கண்ணகி
தன் செவிகள் மூடிக் கொண்டு
தன் கணவன் முன்னே நடுநடுங்கி நின்றாள்.
“பூமாலை போன்ற என் கண்ணகியை
இவர்கள் கேலி பேசுகிறார்களே…
இவர்கள் முள் நிறைந்த காட்டில்
முதுநரிகளாகத் திரிந்து அலைவார்களாக”
எனச் சாபமிட்டார் கவுந்தியடிகள்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 225 – 232
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html