நான் அறிந்த சிலம்பு – 112 (17.03.14)
மலர் சபா
புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
உறையூர் சென்று சேர்தல்
சாப விமோசனம் தந்தபின்
தவத்தில் சிறந்த கவுந்தியடிகளும்
கோவலனும் கண்ணகியும்
அச்சோலையை விட்டுப் புறப்பட்டனர்.
முன்பு ஒரு முறை
முறம் போன்ற காதையுடைய யானை ஒன்றைப்
போரிட்டு வென்ற கோழியின் பெயரைத் தாங்கி,
கோழியூர் எனவும் அழைக்கப்பட்ட
உறையூருக்குள் சென்றனர்.
கட்டுரை
முடியுடை வேந்தர் மூவருள்
வீரவளை அணிந்த பெரிய கைகளையுடைய
சோழமரபில் பிறந்தவர்கள்,
அறம், மறம், ஆற்றல் மற்றும்
அவர் பழம் பெரும் புகாரின் பண்பு,
இந்திரவிழாச் சிறப்பு, விண்ணவர் வரவு,
குடிமக்களின் மாண்பு, உணவுப்பொருள் பெருக்கம்,
தெய்வத்தை ஒத்த காவிரி நீரின் சிறப்பு,
பொய்க்காத வானம், புனல் பொழியும் சிறப்பு,
ஆடலரங்கின் அமைப்பு,
தூக்கு, வரி, பதினோரு வகை ஆடல்கள்,
திணைநிலை வரி, இணைநிலை வரி..இவற்றின் தன்மை
இவை எல்லாம் பொருந்த அமைந்த யாழின் இயல்பு,
அவற்றுள் சிறந்த பதினான்கு வகை
இசைக்கோவையாகிய யாழின் சிறப்பு,
இடைநிலைப் பாலைப்பண்ணின் சிறப்பு,
அதன் வழித் தோன்றிய இசையின் ஆக்கம்,
புகாரின் பொலிவு, ஒளியுடைப்பாணி
மேலும் இங்கு சொல்லப்படாத
இன்னும் பல சிறப்புகளுடன்
ஒருமித்துப் பொருந்தி விளங்கும்
புகார்க் காண்டம் முற்றிற்று.
வெண்பா
கடலை வேலியெனக் கொண்டமைந்ததும்
இப்பூமிமகள் தன் நெஞ்சில் அணிந்த
முத்துமாலை போன்றதுமான
புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினம்…
காலை நேரம் உதித்து ஒளிபரப்பும் சூரியன் போலவும்
மாலை நேரம் உதித்து வளரும் இயல்புடைய திங்கள் போலவும்
வாழ்வாங்கு வாழ்வதாக!
புகார்க் காண்டம் முற்றிற்று.
அடுத்து வருவது மதுரைக் காண்டம்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 245 – 271