அன்று காலை. பெல்கிய நாட்டின் லூவன் நகரில் ஒரு மின்னணு சாதன அங்காடியில் அந்த மனிதருக்காக (attender) காத்துக் கிடந்தேன். வந்தவர் என்னைத் தவிர்த்து விட்டு எனக்கருகே நின்ற, எனக்கடுத்து வந்த சீமாட்டியிடம் என்னவென வினவிவிட்டு கவனித்தார். சில மணித்துளிகள் காத்திருப்பில் கழிந்தது. திரும்பி வந்தவரிடம் மீண்டும் கேட்க முற்பட்டேன்.

“ஒரு நிமிடம்!” என அவர் மொழியில் தெரிவித்துவிட்டு, இன்னொரு கனவானை கவனிக்கச் சென்றார். அவரும் எனக்கடுத்து வந்தவரே! இன்னும் சில மணித்துளிகள் விழுந்து முடிந்திருந்தது. திரும்பி வந்தவர் மீண்டும் இன்னொரு கனவானை நோக்கிச் சென்றார்.

பொறுமை இழந்தவனாய் உரக்க உரைத்தேன், “மன்னிக்கவும்.” நான் குறுக்கே நுழைந்து தொல்லை தருகிறேன் என்பது போன்று என்மீது கோபப்பார்வை வீசியவரிடம் தொடர்ந்து கூறினேன், “மன்னிக்கவும். நான் வந்து வெகுநேரம் ஆயிற்று.”

“மன்னிக்கவும். கவனிக்கவில்லை!” என்றார்.

“பரவாயில்லை. தங்கள் கவனத்தை கவரும் அளவிற்கு என் முகம் ‘பளிச்சென’ இல்லாததற்கு தாங்கள் என்ன செய்வீர்கள் பாவம்!” என்று உடனே கூறினேன் சிறுபுன்னகையுடன் – அவர் மொழியில்.

யாரோ அறைந்ததுபோல் சில நொடிகள் உறைந்து போனார். பின் என்ன தோன்றியதோ தெரியவில்லை. என் கைகளைப் பற்றி, “மன்னிக்கவும்!” என்றார் – பலமுறை!

எனக்கு இன்னமும் புரியவில்லை. இந்த மன்னிப்பு ‘என்னைக் காத்திருக்க வைத்ததற்கா?’ அல்லது ‘அவர் மொழியில் பேசியதற்காகவா’ அல்லது ‘நான் பளிச்சென இல்லை என்பதற்கா?’, அல்லது ‘அவரது இருண்ட ஆழ்மனம் எனக்கு தெரிந்துவிட்டது என நினைத்துக் கொண்டதாலா?’ எனக்கு இன்னமும் புரியவில்லை.

வளர்ந்த நாடாயிருந்தாலென்ன? வளரும் நாடாயிருந்தாலென்ன? வளரா நாடாயிருந்தாலென்ன?

‘மனித மனங்கள் வளராத வரை!’.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *