பசுபதியே போற்றி போற்றி
1. பெண்பாதி உருவாகி பிறைசூடிக் கூத்தாடி
கண்ணாரக் கண்டாரை களிப்பூட்டிக் கரையேற்றி
விண்ணாய கினபாலு மிளிர்நகர்வாழ் பசுபதியே
மண்ணாகி நின்றாயென் மாணிக்கமே போற்றி போற்றி!
2. வேராகி தருவாகி வேதத்தின் குருவாகி
சீராக அடியார்க்கு சிவஞானம் அருள்வாய்நீ
நீராடும் கமலக்குள நிறைஞானப் பசுபதியே
நீராகி நின்றாயென் நிருமலனே போற்றி போற்றி!
3. தாயாகித் தத்துவத் தந்தையாகி அடியாரை
சேயாக்கி வல்வினைக்கு சிதையூட்டி சிவமாக்கி
ஓயாமல் கூத்தாடும் ஓங்காரப் பசுபதியே
தீயாடி நின்றாயென் சிவமணியே போற்றி போற்றி!
4. வேற்றாக ஒலிக்கின்ற வேதத்தின் ஒலியாகி
காற்றாடி மனமூடி மந்திர செபமாகி
கூற்றுவனை உதைத்தெம் குறைநீக்கும் பசுபதியே
காற்றாகி நின்றாயென் கனகமணி போற்றி போற்றி!
5. வளிநாடி விழிமூடி வழிநாடி மனவாசல்
ஒளிநாடி உள்ளத்தே ஒழுகிவரும் அமிர்தாகி
துளியாகி தூவுணர்வால் சிவமாகி பசுபதியே
வெளியாகி நின்றாயென் வேதியனே போற்றி போற்றி!