திருமால் திருப்புகழ் (69)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————–
’’கண்ணனை நெஞ்சே கருது’’
—————————————————–
நானாக நம்முள்ளே, ஆணாகப் பெண்ணாகத்,
தானாகத் தோன்றிடும் தத்துவத்தை, – மீனாக,
எண்ணற்ற வண்ணமாய், மண்காக்க வந்தவனை,
கண்ணனை நெஞ்சே கருது….
ஆனந்த சாகரம், ஆத்ம தரிசனம்,
நானந்த பொய்கையில் நீந்திட – வானம்தன்,
வண்ணனை, அன்று வரையேந்தி நின்றவனை
கண்ணனை நெஞ்சே கருது….
அலுப்பினில் ஆழ்ந்து, சலிப்பினில் சோர்ந்து,
இலுப்பை மலரை இனிப்பென்(று), -உலுக்குகிறாய்.
மண்ணினை சர்க்கரையாய் மாற்றவல்ல மாதவனை
கண்ணனை நெஞ்சே கருது….
எதையோ நினைந்து அதையே முனைந்து
பதையாய்ப் பதைத்தது போதும் – கதையாக
மன்னனுக்கு முன்னம் முனிசுகர் போதித்த
கண்ணனை நெஞ்சே கருது….
குவித்த திரவியம், கொண்டதோர் சுற்றம்,
தவித்த நிலையில்போம் தூரம் – பவித்திர
எண்ணமுற்ற மெய்யடியார் ஏகாந்த சேர்க்கைக்கு
கண்ணனை நெஞ்சே கருது!!
————————————————————————————————————–
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/2013_11_01_archive.html