குண்டு வெடிப்பும் நம் மெத்தனமும்
பவள சங்கரி
தலையங்கம்
சென்னை இரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்ட பிறகு மிக விரைவாக நமது ஆய்வினைத் துவக்கியுள்ளோம். பெங்களூரூ இரயில் நிலையத்தில் குறிப்பிட்ட அந்தப் பயணி ஏறியிருக்கலாம் என்று முதல் தகவல் அறிக்கை மூலம் அறிய முடிகிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே உளவுத் துறையின் மூலமாக நமக்குக் கிடைத்த தகவலின்படி, தென்னிந்தியாவில் இது போன்ற தீவிரவாதம் நிகழ்வுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்துள்ளனர். அதை அலட்சியப்படுத்தாமல் இருந்திருந்தால் இன்றைய இந்த இழப்பைச் சந்திக்காமல் இருந்திருக்கலாம். மற்றுமொரு தகவல் அறிக்கையின்படி தினசரி ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் மக்கள் பயனிக்கக்கூடிய இது போன்ற மிகப்பெரும் இரயில் நிலையங்களில், பயணிகளைச் சோதிப்பது எங்கனம் சாத்தியம் என்கின்றது. சென்னை இரயில் நிலையத்தில் ஒளிவருடிகள் (ஸ்கேனர்கள்) மற்றும் கண்காணிப்புக் கருவிகள் இருந்தபோதிலும் அவைகள் பயன்படுத்தப்படுவதில்லை. சாலைப் போக்குவரத்தில் ஒரு வழிப்பாதை அமைப்பது போல இந்த கண்காணிப்பான் வழியாகத்தான் பயணிகள் அனைவரும் செல்ல வேண்டுமென்பதை கட்டாயமாக்க வேண்டியது அவசியம். இரயில் நிலையத்தின் உள்ளே வருபவர் மட்டுமன்றி வெளியேறுபவர்களும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்தான். பெரும் திரளாக மக்கள் வெளியேறக்கூடிய சூழலில் அவர்களையும் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. இரயில் நிலையங்கள் சிறியதோ அல்லது பெரியதோ அவைகள் ஒரு முனைப்படுத்த வேண்டியது அவசியம். மக்கள் பெருமளவில் கூடுகின்ற இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், நீதி மன்றங்கள், மருத்துவமனைகள், போன்ற இடங்களிலும் இத்தகையக் கட்டுப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கண் கெட்ட பிறகு சூரிய வழிபாடு பயன் தராது! பொது இடங்களிலும், உள் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி, அமைதிப்பூங்காவான நம் தமிழ் நாட்டையும், இந்தியாவையும் காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். . தனி நபராக இருப்பினும், மத்திய, மாநில கூட்டமைப்புகள் தனித்தனி அமைப்புகளாக இருப்பினும் நாட்டின் பொது நலன் கருதி அவைகளின் உதவிகளையும் கோரிப் பெற்று தீர்வு காண்பதில் தயக்கம் காட்ட வேண்டியதில்லை. . ஜெய்ஹிந்த்!
பட்டுக்கோட்டையார் மன்னிக்க வேண்டும். அவர் பாடலை மாற்றிவிட்டேன். “திட்டம் போட்டு வெடிக்கிற கூட்டம் வெடித்துக் கொண்டே இருக்குது அதை
சட்டம் போட்டுத் தடுக்கற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது”. ஆனால் ஒன்று, வெடித்தவுடன் ஏற்படுகின்ற சுறுசுறுப்பு, அதற்கு முன்பு இல்லாததே அந்த அலட்சியமே இவற்றுக்குக் காரணம்.