திருமால் திருப்புகழ் (79)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
—————————————————————
’’கண்ணன் அந்தாதி’’
———————————
காப்பு
————-
காப்புக் கரம்கொண்டு காதைப் பிடித்துமால்
தோப்புக் கரணமிடத் தீர்ப்பளித்தோய் – யாப்பெனெக்(கு)
அந்தாதி வெண்பாவில் அம்மான் புகழ்பாட
தந்தாதி தெய்வமே தா….
———————————————————————————————————————-
நூல்
———–
சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு)
அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப்
பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில்
இறந்தில்லை யாவ(து) எதற்கு….(1)
எதற்கென்ற கேள்வி முதற்கொண்டு மாயை
உதிக்கின்ற ஞானமே எல்லாம் -மதித்துத்
துதிக்கின்ற நானும் விதிக்கின்ற நீயும்
நதிக்கரை நாணல்நீர் நட்பு….(2)
நட்புனக்கு லீலை நயவஞ் சகம்மாயை
கட்புலனுக்(கு) எட்டாக் கடிதொளியே -முட்புதரில்
நிற்கவைத்து ரோஜாவை நீமுகர்ந்து பார்கின்றாய்
அற்பசுகம் ஆண்டவர்க்கு மா….(3)
ஆண்டவா நீலவண்ணம் பூண்டவா நீள்விசும்பில்
நீண்டவா பாரதப் பாண்டவராய் -வேண்டவா!
தூண்டவா பக்தியால் !, தீண்டவா பாரதியாய் !,
கீண்டவா தீங்கைக் கிழித்து….(4)
கிழிந்து பிணியில் கிடக்கும் உடம்பைப்
பிழிந்து சுகம்மேலும் பார்க்கும் -இழிந்த
மனமேன் கொடுத்தாய் எனையேன் படைத்தாய்
உனைஏன் கேட்கநான் உண்டு….(5)
————————————————————————————————————
கிரேசி ஐயாவுக்கு,
வணக்கம். தங்களது இந்த ஆக்கம் நாளைய தலைமுறைக்கு மிகச்சிறந்த ஆக்கமாக விளங்கப் போகிறது.
//உனைஏன் கேட்கநான் உண்டு….(5)//
என்னும் வரிகளில் “உனைஏன் கேட்கநான்” என்னுமிடத்து தளை தட்டுகிறது.
மேலும், “நீமுகர்ந்து பார்கின்றாய்” என்னுமிடத்து பார்க்கின்றாய் என வந்திருக்க வேண்டுமோ என ஐயுறுகிறேன்… தெளியபடுத்தவும்.
தங்கள் எழுத்தின் இரசிகனாய்,
பிரசாத் வேணுகோபால்