திருமால் திருப்புகழ் (85)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்….
——————————————
’’கண்ணன் அந்தாதி’’(வெண்பா)….
———————————————————-
வாய்ப்பூதான் வாடிடுமோ, வாழ்வி(ல்)ஆழ் வாராகும்
வாய்ப்பெனெக்குத் தந்திட வாசுதேவா, -நோய்ப்பாயில்,
கூற்றன்கைப் பாவையாய், தோற்றுக் கிடப்பேனோ,
ஏற்றம் தரவா ,எனக்கு….(31)
எனக்கே எனெக்கென்(று) எவருளார் என்று,
தனக்கே தனக்குள் தவித்தால், -உனக்குள்,
உவமை இலாத, ஒருத்தனைக் காண்பாய்
அவனே, அரியென்(று) அறிந்து….(32)
அறிந்தேன், அறியாமை அந்தஅரி மாயை,
அறிந்தேன் அவனேதான் ஆன்மன், -அறிந்தேன்
கருந்தேகக் கண்ணனவன், கண்,காணல், காட்சி
ஒருங்கிணைந்து தோன்று(ம்)அரி ஓம்….(33)
ஓமனக் குட்டனே, கோமண கோவிந்தா,
கோமணம் கட்டிய கோபாலா, -நாமணக்கும்,
ஆரா அமுதனே, அய்யா குருவாயூர்
சீராளா, சீனிவா ஸா….(34)
வாஸனாதி கர்மங்கள், பூசிமகிழ் பூர்வநெஞ்சே,
தேசம்நூற் றெட்டுடைய தேவனை, -யோசனையில்,
வைத்து வழிபட்டுக் கைத்தலத்தால் கும்பிடப்
பொய்த்திடு(ம்)ஐம் பூதப், புதிர்….(35)
——————————————————————————————————-
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/2006_03_01_archive.html