மழை
-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி – இலங்கை
வற்றிக் கிடக்கும் வறண்ட பூமியைத்
தொட்டுத் தழுவும்
உனது தூய கரங்களுக்குத்தான் எத்தனை குளிர்ச்சி!
இரவென்ன…பகலென்ன…
வானம் கருக் கொண்டால்
பூமி மகிழ்கிறது!
நீ
இல்லாத நாட்களில்
பொல்லாத புழுக்கம்!
இருக்கின்ற நாட்களில்
இப் புவியே வழுக்கும்!
நீ வருகை தருங் காலத்தில்
வெள்ளம் பாய்ந்தோடும்!
உனது
விபரீதப் போக்கினால்
கண்ணீர் வெள்ளமும் பாய்ந்தோடும்!
நதிக் கரைகளில் அலையடிக்கும்!
கடற்கரைகளில்
வெண்நுரைப் பூக்கள்
விரிகின்ற மாரிக் காலம்!
உன்னைச் சுமந்த மேகங்களின்
ஊர்கோலம்!
கண்ணுக்குக் குளிர்ச்சி தரும்
இந்த
மண்ணுக்கே மகிழ்ச்சி வரும்!!
மீனோட…
நாரைகள் தவமிருக்கும்!
ஏரோடாத கழனிகளில்
ஏரோட…எங்கும்
பைங் கூழ் விளைந்திருக்கும்!
வறுமைத் தளையறுக்கும்
வல்லமை உன்னுடையது!
நீ இல்லையேல்
எந்த மண்தான் பொன்னுடையது?
கொட்டும் இடிமின்னல் காற்று
”கூஹ் கூஹ்”வென்று
குரலை ஒலியெழுப்ப
முட்டும் மரக் கிளைகள்
மோதிச் சல சலக்க…
கார் கால மேகங்கள்
தாவிச் செல்லும்
பல்லாக்கிலே
நீ விற்றிருந்து
விஜயஞ் செய்கின்றாய்!
சகாராக்களைச்
சல்லாப புரியாக மாற்றும்
சக்தி உன்னுடையது!
நீ கொடைவள்ளல்!
அள்ளிக் கொடுக்கும் போதுதான்…
இடையூறு அதிகம்!