நான் அறிந்த சிலம்பு – 119
மலர் சபா
மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை
அங்ஙனம் திருமாலைத் தொழுது வலம் வரும் போது
அங்கே நிலத்தையே பிளக்கும்படி விழுகின்ற
சிலம்பாற்றின் அகன்ற கரையில்
வாசமலர்கள் பூத்த கோங்க மரத்தின்கீழ்
கார்மேகக் கூந்தலையும்
தொடி அணிந்த தோளையும் உடைய
பெண்ணொருத்தி தோன்றி,
“நான் இம்மலையடிவாரத்தில் வசிப்பவள்;
எனது பெயர் வரோத்தமை.
இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இம்மையும் எது?
இம்மை மறுமை இவை இரண்டும் இன்றி
ஓர் உயிர் செம்மையாக எப்போதும் நிற்பது எங்ஙனம்?
இதற்குத் தக்க விடையளிப்பவர்
ஏவிய பணிகள் நன்கு புரிவேன்.
விடை அளித்தீர்களேயானால்
பாக்கியம் பெற்ற உங்களுக்கு
இக்குகையின் கதவை இப்போதே திறந்துவிடுவேன்”
என்று கூறுவாள்.
கதவுகள் திறந்து அவள் காட்டும்
அந்நல்வழி சென்றால்
பல கதவுகளையுடைய வாயில்களும்
இடைக்கழியும் உண்டு.
ஆங்கே, இரட்டைக் கதவுகள் கொண்ட
வழியொன்று காணப்படும்.
அந்த வாயிலில் வரையப்பட்ட
சித்திரப்பாவை எதிரே தோன்றி,
“இறுதியான இன்பம் எங்கிருக்கிறது என்று
நீவிர் விடையுரைத்தால்
வேண்டிய பொருள் தருவேன்” என்றுரைப்பாள்.
“விடை கூறாது போயினும்
உமக்கு இடர் செய்யேன்;
நீங்கள் செல்ல வேண்டிய வழியில்
செல்ல அனுமதிப்பேன்” என்பாள்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 108 – 125
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html
படத்துக்கு நன்றி:
http://tamil.thehindu.com/society/spirituality