உன்னருளாலே உன்னடி பணிந்து… (இறைக்கவிதைகள்)
இசைக்கவி ரமணன்
இந்தக் கவிதைகளில் இலக்கியம் விழையாதீர்கள்! இலக்கணமும் தேடாதீர்கள்! எனது தேடலில் நேர்ந்த மனவிம்மல்கள், மின்னல் வீச்சுக்கள், எதிர்பாராத அமைதிக் கணங்கள் இவையே இந்தக் கவிதைகளில் வெளிப்பட்டிருக்கும். ஒத்த மனமுள்ளோர் உடன்கண்டு கொள்ளலாம்.
நான் இறைவன் முன்னால் இருகரம் கூப்பி, எப்போதும் நன்றியுடன் நின்றுகொண்டிருக்கிறேன். அதற்கு ஒரே காரணம்தான் உண்டு. தன்னை நினைக்க வைத்தானே, அந்த தயைதாங்க முடியாமல் தழுதழுத்து நிற்கிறேன்! அவ்வளவுதான்!
எனவே, சான்றோர் வாக்கையே சற்றே மாற்றி உன்னருளாலே உன்னடி பணிந்து என்று தலைப்பிட்டிருக்கிறேன்.
காப்பு
முந்தி வினாயகனை மூலத்தின் நாதனை
வந்தித்தேன்! வாழ்வாம் வரம்பெற்றேன்! உந்தி
அருவியெனப் பொங்கும் அருந்தமிழைச் சின்னக்
குருவி அருந்துவதே கூத்து!
என்னிறைக்கு
உன்னரு ளாலே உன்னடி பணிந்து
பொன்னடி நிழலில் பூவென நிற்கிறேன்
புன்னகை என்னும் தென்றலில் சிலிர்க்கிறேன்
என்றும் நீ என்னவன் என்றும் நான் உன்னவன்
என்ற நினைப்பிலே எல்லாம் இழக்கிறேன்
நன்று காதலென் நம்பியே! இனிநான்
சென்றெதும் காணேன் சேவடி போதுமே!
அனுமனுக்குப் பஞ்சகம்
1
அனைத்தும் அதிர்ந்தாடவும்
அதிர அதிர உதிரும் அழகுமலர் போல்மனதில்
அகலாத மணமாகவும்
வாகான சாமரம் ரகுராம நாமமதில்
வந்துலவும் பூந்தென்றலே!
வந்துவிளை யாடும்வினை பந்துவிளை யாடும்
வசந்தக்க ரம்மின்ன லே!
சோகத் திலங்கையினைச் சுட்டுப் பொசுக்கிவரும்
சூடா மணிக்கொளியிவன்!
சுந்தரன்! நிரந்தரன்! சுழன்றிடு மனத்தினில்
சுகம்தர வரும்சுடரிவன்!
ஏகாந்த மாய்நெஞ்சில் எங்கோ துளிர்க்கின்ற
எல்லையில்லா அமுதமே!
என்றெனது ஜென்மமெனும் குன்றுமனதில் நின்
றெழுந்தாடும் உன்பாதமே?
2
உருகிவரும் கரியமனம் கருவிழியின் ஒருவழியில்
ஒருதுளியில் ஊசலாடும்!
உதிருமுனம் உனதுமுகம் உளமெங்கும் மிகவந்து
ஒருவார்த்தை பேசும்! பாடும்!
பெருகுமுகில் திரைவிலகப் பிறைநிலவு நுதல்பெருகப்
பீறிட்டெழும் சூறையே!
பின்னங்க ளாய்ச்சிதறும் பிள்ளை மனத்தோரம்
பிறழா ஒளிப்புள்ளியே!
அருளுனது! அன்புனது! அச்சங்க ளேயெனது!
அறியவைத் தாய்தேவனே!
ஆடுகட லோடுவிளை யாடுமதி காலையென
அருகில்வந்தாய் நாதனே!
பெருகுமொரு நீலப் பிரகாசம் பதங்கொண்டு
பிரளயம் நடிக்கவேண்டும்! ஒரு
பெயரற்ற மருவாகப் பித்தன் திரிந்தாலும்
திருவடி நினைக்கவேண்டும்!
3
பகலிரவு பகையுறவு பழையகன வென்றுநிதம்
படியுருளும் நினைவுமாயம்! அதில்
பலகோடி காலப் பனிமலர்கள் பாதப்
பரல்வீசும் ஞ்சநேயம்!
சுகம்ராம நாமம்! ரோமாஞ்சனம்! தேகம்
ரகுராம னின்யெளவனம்!
சொல்லி முடியாதவொரு சோதியருஞ்சோதிநீ!
தோள்களோ ரமணமெளனம்!
அகமென்றும் புறமென்றும் அறியாத ராகப்
பிரவாகம்! அகண்ட நாமம்!
அழகுதொழு தேபழகும் மழலையுரு வம்தோளில்
காய நீலம் குலவும்!
புகைசுருளும் நெஞ்சில் பொருந்தாம லேகுமுறும்
பொல்லாத தீக்குழம்பே!
போதுமினி! மீதமெது? போதவிழும் நேரமிது!
பாதைமனம் பாதமயமே!
நீளநீ ளப்பெருகும் நிமலமே! நிர்மலம்
நீந்திவிளை யாடுங்கடலே! ஒரு
நிமிநேர மின்னலில் நித்தமெனைக் கொண்றயிருள்
நிழலையு மொழித்த அருளே!
மாளமா ளப்பெருகும் மாயக்க ரங்களில்
மழலைத விக்கலாமா?
மன்னனுன் சன்னிதியில் மண்டைசித றும்போதும்
மெளனித்தி ருக்கலாமா?
வாளே இருக்கையாய் வாகா யமர்ந்தாலும்
வாயுந்தன் பெயர்சொல்லுமே!
வானத்து மீனெலாம் வந்துபொடி யும்போதும்
வசந்தப்ப தம்பாடுமே!
கேளாத தேபோலக் கீழ்வானமே இன்னும்
கிளம்பாதிருக்கலாமா?
கீற்றான உன்பாதம் ஏற்கத் துடிக்குமனக்
கடலை மறக்கலாமா? (4)
கஞ்சமலர் போலவரும் பஞ்சமுகம் நெஞ்சிலெழக்
கலிதொலைந் தேபோகுமே!
காலவெளி என்ற இரு கண்ணிமை நிலைக்கவொரு
காந்திமீ றிப்பெருகுமே!
செஞ்சுடர்க ளத்தனையும் நின்றுபெரு கித்திலக
மென்றுநித் தம்சுடருமே!
சேவடி நினைத்தகணம் காவடி எனக்ககனம்
திசைவிண் டதிர்ந்தாடுமே!
அஞ்சனையின் நெஞ்சமோர் அழகுவடி வங்கொண்டு
அண்டமெல் லாம்பெருகுமே!
ஐயனே! என்றுவிழி மெய்யாய்ப் பனிக்கும்கணம்
அள்ளவரும் வாயுமுகமே!
தஞ்சம் தஞ்சம் என்று தாளம்போடும் நெஞ்சம்
தரையாய்க் கிடக்கவேண்டும்
சிரஞ்சீவி யாயுந்தன் சிங்காரப் பாதங்கள்
சுகமாய் நடக்கவேண்டும்! (5)