திருமால் திருப்புகழ் (94)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————-
’’கண்ணன் அந்தாதி’’
————————————
ஓட்டைப் பிரித்ததன், உள்ளே புகுந்தவனைத்,
தேட்டை இடுவோர்க்கும் தேறாதான், -மாட்டைப்,
பிடிக்காது மாயன், பதத்தைப் பிடிக்கப்,
படிப்படியாய்க் குண்டலினிப் பாம்பு….(76)
பாம்பணைவோன், நம்மில் பழுதகற்றும் ஞானக்காய்,
காம்பவனே, உண்ணக் கனிபவனாம், -தீம்புலனை,
வீழ்த்தி அடியார்தம், வாழ்வையனு பூதியினில்,
ஆழ்த்தும் அவனன்(பு) அளிப்பு….(77)
அளிப்பாய் இலைபூ களிப்பாய், அவன்தாள்,
குளிப்பாய் கருணை மழையில், -புலிப்பால்,
கொணர்ந்த சபரிக் குழந்தையைப் பெற்றோன்,
மனம்தனில், மாதவன் மாது….(78)
மாதவன், கேசவன், மாலவன், மோகினி,
மா(து)அவன், ஐயப்பன் மாதாவாம், -ஆதலால்,
அன்னையென்(று) எண்ணி, அணுகினால் காத்தருள்வான்,
தன்னையே கன்னையன் தந்து….(79)
தந்தம் ஒடித்தனன், தாய்மாமன் யானைக்கு,
வந்தமா மல்லரை வீழ்த்தினன், -அந்த,
முகுந்தனோ(டு) ஒன்ற, உகந்தவழி ஒன்றே,
அகந்தை அழித்தல் அது….(80)
————————————————————————————————–
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/2013_08_01_archive.html