கிரேசி மோகன்

சு.ரவியால் தடுத்தாட் கொள்ளப்பட்ட கல்லூரி நாட்களில் எழுதப்பட்டது….அப்போதெல்லாம் ,அர்த்த மதியத்தில்(அர்த்த ஜாமத்திற்கு ஆப்போஸிட்) வாயிலா நாயனார் சன்னிதியில், ரவி என்னை வாயுள்ள ஆழ்வாராக மாற்ற முயற்ச்சிப்பான்….இணைப்பு திரு.கேசவ் டாக்டர் ஸ்ரீதருக்காக வரைந்த கற்பகாம்பாள்….நமக்கெல்லாம் ‘’கைகொடுப்பாள் கற்பகாம்பாள்’’…ஆனால் கேசவ்கோ ‘’கைபிடிப்பாள் கற்பகாம்பாள்’’ வரைய வசதியாய்….இந்த ஓவியம் வந்தவுடன் என் அறைதான் கர்பக்கிருகம்….இந்த ஓவியம்தான் மூலவர் என்றாகிவிட்டது

———————————————————————————————————————–
அம்பாள் பஞ்சகம்
(க்ரேஸி மோகன்)
—————————————————————————————————————————

மதியது கொண்டவனின் – மரகத

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

மங்கைக்கடியவன் முன்
விதியது வீழ்ந்திடுமே ! – வெவ்விய
வினையது சாய்ந்திடுமே !
கதிர் முன் பனி போலே – கவலைகள்
கரைந்து போகுது பார் !
எதிர் வரும் துன்பெமெலாம் -என்னிடம்
என்னிடம் ஏவல் செய்யுது பார்! (1)

கருமயிலே, பரமன் -கபாலி
கணவருடன் அழகாய்த்
திருமயிலாப் புரியில் -திகழும்
தேவி பராசக்தீ !
ஒரு பொழுதும் மறவேன் -உமையே
ஓமெனும் மந்திரமாய்
உறைபவளே வருவாய் -உலகில்
உழலுமெனக் கருள்வாய் (2)
அம்மா என்றுனையே -அடியேன்
ஆசை மனம் கொண்டு
இம்மா புவியினிலே -இயம்ப
இமயக் கரு முகிலே
சும்மா நிற்பதுவும் -சரியோ
சொல்வாய் சிவ சக்தீ !
பெம்மான் சொக்கருடன் -பிடியே
பிள்ளை என் முன் வருவாய் ! (3)

பச்சை நிறத்தவளே -பதியின்
பாகம் கொண்டவளே
அச்சை ஒடித்திடுமோர் -அழகன்
ஆனை முகன் தாயே !
மெச்சத் தகும் ஊராம் -மயிலை
மாது மஹா காளி !
பிச்சை அளித்திடுவாய் -பரமே
பக்குவ மனமதனை ! (4)

வள்ளிக் குறுதுணையாய் -வேலன்
வளர்ந்த தொரு மலையாம்
வெள்ளிப் பனி மலையில் -வாழும்
வேந்தற் குரியவளே !
உள்ளக் கோவிலதில் -உனை நான்
உறங்க வைத்திடுவேன்
தெள்ளத் தமிழ முதால் -தாயுனைத்
தாலாட் டிடுவேனே ! (5)

*******************************************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *