இசைக்கவி ரமணன்

1303925-bigthumbnail
நான் கொடுக்கவுமில்லை
நீ எடுக்கவுமில்லை
எந்தன் இதயத்தில்
உந்தன் இடம்

தானும் தானுமாய் இருந்தது
நானும் நீயுமாய்ப் பிரிந்தது
தேனும் பாலுமாய்க் கலந்தது
வானும் வானுமாய் இணைந்ததோ?

கிழக்கு ஜன்னல் வானமும்
மேற்கு ஜன்னல் வானமும்
மொட்டை மாடி வானத்தில்
கைகுலுக்கி முத்தமிட்டுக்
காணாமற்போய்த் தானானதோ?

இல்லை. அப்படி இல்லை இன்னும்.

இறுகத் தழுவிக்கொள்ளும் போதெல்லாம்
இடம் மாறுகின்றன இதயங்கள்
இதனால்தான்
இழந்ததாகவும் நுழைந்ததாகவும் அடைந்ததாகவும்
ஏதேதோ உணர்வுகளும் விழைவுகளும்
எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன

ஒன்று, தன்னை
உணரத்தான்
ஒன்றுபோல் இரண்டாய்
இரண்டுபோல் ஒன்றாய்த்
தானே மயங்கும் மாயத்தில்
தயக்கமின்றித் தலைப்பட்டது

சத்தியத்திற்குப் பாதைகள் கிடையாது, அந்த
சந்நிதிக்குக் கதவுகள் கிடையாது, இது
தத்துவமில்லை தரிசனம் என்பதைக்
காதலைப்போல் வேறெதுவும் காட்டித் தராது

என்னுயிரின் தேனூற்றே!
எதிரே வா!
இருமை இலாத அருமையை
இருமையே உணர்த்தும் பெருமையை
இவர்களுக்குக் காட்டுவோம் வா!
இறுகத் தழுவியபடி
இதழ்கள் அழுந்திப் பொருந்தியபடி
இதயமொன்று இதயமொன்றில்
இடைவிடாமல் தன்னைக் கரைத்தபடி……

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *