நான் அறிந்த சிலம்பு – 122
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 11: காடுகாண் காதை
கவுந்தி அடிகளின் கட்டுரை
மிக்க பெருமைவாய்ந்த
மாமறையோன் கூறிய வழியின் இயல்புகள்
கேட்டறிந்த கவுந்தியடிகள் தாமும்
அர்த்தம் நிறைந்த கட்டுரை ஒன்றை உரைக்கலானார்.
”நல்லொழுக்கம் விரும்புகின்ற
நான் மறையாளனே!
நீ குறிப்பிட்ட குகையினுள் புகுகின்ற தன்மை
நாங்கள் பெற்றிருக்கவில்லை.
ஏனெனில்,
நீண்ட கோடி ஆயுளையுடைய
இந்திரன் இயற்றிய நூலினை
எம்முடைய அருகதேவன் அருளிய
ஆகமத்தில் நீ காணவில்லையா?
அதன் மூலமே மெய்ப்பாட்டினை உணரும் அறிவு
எங்களுக்கு உள்ளதால்,
நீ குறிப்பிட்ட புண்ணிய சரவணத்தில்
நாங்கள் நீராடவும் வேண்டியதில்லை.
முற்பிறப்பில் செய்த எல்லாவற்றையும்
இப்பிறப்பில் நீ காணவில்லையா?
ஆதலால் யாம் பவகாரிணியில் படிதல் வேண்டாம்.
உண்மை நெறியில் தவறாது,
பிற உயிர்களைக் காத்து நிற்பவர்க்கு
எய்துவதற்கு அரிய பொருள் என்று
எதுவும் உளதோ?
அதனால் நாங்கள் இட்டசித்தியை
அடைய வேண்டியதில்லை.
நீ விரும்பும் தெய்வமாகிய
திருமாலைக் கண்டு அவர்தம்
திருவடிகள் தொழுதிட நீ சென்றிடுவாயாக.
நாங்களும் எங்கள்
நீண்ட நெடிய வழியில் செல்வோம்”
இங்ஙனம்அந்த மறையோனுக்குப் பொருந்தும்
மொழிகளை உரைத்தார் கவுந்தியடிகள்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 150 – 162
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html
படத்திற்கு நன்றி: http://www.dhool.com/sotd2/743.html