வள்ளுவருக்கு வணக்கம்
கவலைக் கடலைக் கடியும் கனலாய்க்
கவிதை சொன்னவன் பாரதி
காதும் காதும் வைத்தாற் போலக்
காவியம் செய்தவன் கம்பன்
திவலைக் குள்ளே கடலைக் காட்டிய
தெய்வப் புலவர் வள்ளுவர்
திரிகோணத்தின் நடுமுற்றத்தே
தேனகலாய்த் தமிழ் வளரும்!
ஒருவா னத்திற் கொருகதிர் போதும்
உலகில் உயிர்கள் வாழும்
ஒருவாழ் வுக்கோ ஒரு குறள் போதும்
உயிரே ஒளிமய மாகும்
திருவள்ளுவர் எனும் தீப மிலாமல்
திசையை விழியறியாது
வருவதை சென்றதை வந்ததை அவர்போல்
வகுத்தவரே கிடையாது!
அறமெனும் ஒருவழிப் பாதையில் நித்தம்
அவர்கரம் பற்றி நடப்போம்
அதன்முடி வில்நமை அழைக்கும் சத்திய
ஒளியில் அனைத்தும் கடப்போம்
இறப்பும் பிறப்பும் கவரிகள் வீச
இங்கொரு முடிவைப் படைப்போம்
இன்பம் துன்பம் என்று மயக்கும்
இடர்களைத் தெருவில் உடைப்போம்!
“ஒருவா னத்திற் கொருகதிர் போதும்
உலகில் உயிர்கள் வாழும்
ஒருவாழ் வுக்கோ ஒரு குறள் போதும்
உயிரே ஒளிமய மாகும்”
— சத்தியமான கூற்று.