சு. ரவி

2

1ஆதிசங்கரரின் மறுஅவதாரம், அன்னை காமாக்ஷியே குரு உருவில் புரிந்த அனுக்ரஹம், நமது காஞ்சி மாநகரின் பாக்கியம் என்று பலகோடி மாந்தர் மதித்துப் பணியும் ஸ்ரீமஹாஸ்வாமிகளுடைய பாதகமலங்களுக்கு நமஸ்காரங்கள்.

“ஜகத்குரு” என்ற அடைமொழிக்கு, ” இந்த ஜகமே எனக்கு குரு” என்று விளக்கமளித்த எளிமை.

பீடமேறிய தனது ஆரம்பநாட்களில் ஒருபயணத்தின் போது, ஆற்றங்கரையில், பொய்பேசிய தன் 6 வயதுத் தம்பியைத் திருத்தும் முகமாக, சத்தியத்தின் உயர்வு பற்றி எந்த வேதமும், உபநிஷ்த்துக்களும், புராணங்களும் சொல்லியதை விட அற்புதமாகவும், எளிமையாகவும் விளக்கிய 8 வயது குடியானவச் சிறுமியைத் தனது குருமார்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டதாக ஒப்புக்கொண்ட நேர்மை;

ஆன்மபரிசுத்தி எனும் அக்னியில் புடம்போட்டு ஞானக் கனலாகவும், கருணைப் புனலாகவும் விளங்கிய மேன்மை;

இந்த மஹான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற நினைப்பே நம்மைப் புனிதமாக்கிவிடும்.

பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தமது திருவடி தோயத் தோய நடந்து விஜயம் செய்து இந்துமதத்தின்3 உயிர்மூச்சை, உள்ளுறை ஒளியை அணையாது காத்துக் கொடுத்த மஹான், தமது விஜயங்களின் போது “மேனா” வின் பின் நடந்து செல்லும் காட்சி

ஐந்து சுடர்களுக்கு நடுவே ஒருகால் ஊன்றித் தவம் செய்யும் அன்னை காமாக்ஷியும், காமகோடி பீடத்தை அலங்கரிக்கும் காஞ்சிமாமுனிவரும் வேறு வேறல்ல என உணர்த்தும் தவக்கோலம். தற்செயலாக ஒரு அடியவருக்குக் கிடைத்த தரிசனம் இது.

கருணையே வடிவான அன்னையும், கண்டித்து வழிநடத்தும் தந்தையும், தானே முன்னுதாரணமாய் நடந்து காட்டி உபதேசிக்கும் குருவும் ஒரு வடிவாய் வந்துதித்த பேரருளாளரின் ஆழ்ந்த தியானக் கோலம். ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வாழ்க்கையில் நடந்த பலசம்பவங்கள் ஒரு குரு எப்படி இருப்பார் என்பதை நமக்கு உணர்த்த வல்லவை.

நான் கேட்டறிந்த ஒரு நிகழ்ச்சி.

திண்டிவனத்துக்கு அருகே ஒரு சிறு கிராமம். அங்கு ஸ்வாமிகள் செல்லும் போது பிற்பகல் ஆகிவிட்டிருந்தது. சிலநாட்களாகப் பெய்து வந்த கடும் மழை காரணமாக, வீடு, வாசல், பொருட் சேதமடைந்து துயருற்ற ஏழைக் குடியானவ ஜனங்கள் ஸ்வாமிகளைத் தரிசிக்கக் கூட்டமாக வந்திருந்தனர்.ஸ்வாமிகள் அம் மக்களுக்கு மடத்தின் சார்பாக உதவும் நோக்குடன் உடனிருந்த மடத்து நிர்வாகியிடம் அவர்களுக்கு வேட்டி, துண்டு, சேலைகள் வழங்க ஏற்பாடு செய்யக் கூறினார்.

4

5

6முகாம் வந்த இடத்தின் மடத்தின் கைவசம் ஸ்டாக் இல்லாததால் திண்டிவனம் சென்றுதான் வாங்கி வரவேண்டும். பெய்து கொண்டிருந்த மழைகாரணமாகப் போதுமான துணிமணிகள் வாங்கிவரத் தாமதமாகிவிட்டது. பின்னர் அவற்றைக் குடியானவர்களுக்கு ஸ்வாமிகள் தமது திருக்கரங்களால் வழங்கி முடிக்கும்போது மாலைப்பொழுது சாய்ந்து இரவு ஆகிவிட்டது. மனநிறைவோடு எழுந்த ஸ்வாமிகளிடம் நிர்வாகி,

” ஆனால் பெரியவாளுக்கு சந்திரமௌளீஸ்வரர் பூஜைக்குத்தான் நேரமாயிடுத்து” என்றார்.

அவரை ஏறிட்டு நோக்கிய ஸ்வாமிகளோ “சந்திரமௌளீஸ்வரர் பூஜை முடிஞ்சாச்சு” எனச் சொல்லிவிட்டு உள்ளேசென்றார்.

நம்மைக் கரையேற்றுவதற்காகத் தாம் தவவாழ்வு வாழ்ந்த மஹான் கரைஏறிவரும் காட்சியும், உண்மையான சந்திரமௌளீஸ்வரர் பூஜை எது என உணர்த்தியவர் பூஜை செய்யும் கோலமும், யோகிராஜராக, ருத்ராக்ஷ கிரீடத்துடன் நிற்கின்ற தரிசனமும்..

கோட்டோவியங்களாக…

ஒரு கருத்தை விளக்கி உபதேசிப்பதில் ஸ்ரீமஹாஸ்வாமிகள் தனித்து ப்ரகாசித்தார்.நான் படித்த இரண்டு உதாரணங்கள்:7

1. அம்பாளுடைய லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு ‘அபர்ணா’ என்றொரு நாமம்.
வழக்கமாக இந்த நாமத்திற்கு ‘ கடும்தவம் செய்கையில் இலைகளைக் கூடச் சாப்பிடாமல் தவமிருப்பவள்’ என்றுபொருள் கொள்வர்.
ஸ்ரீ மஹாஸ்வாமிகளோ, ” தவம் செய்கையில் இலைகளற்ற கொடிபோல் காட்சி தருபவள்” என்று அற்புத விளக்கம் அளித்தார்.

2. ஸ்ரீ ராமானுஜர் வரலாற்றில், சைவம் தழுவிய சோழமன்னனின் கட்டளைக்காக, ஸ்ரீ. ராமானுஜருக்குப் பதிலாக மன்னனைச் சந்தித்த அவரது சீடர் ஸ்ரீ கூரத்தாழ்வார் பற்றிய நிகழ்ச்சி. மன்னன் “சிவாத் பரதரம் நாஸ்தி ( சிவத்திற்கு மேல் ஏதுமில்லை)” என்றெழுதிய ஓலையில் பரம வைணவரான அவரைக் கையெழுத்திடுமாறு பணிக்க, அவர் அவ்வோலையில் ” அஸ்தி த்ரோணம் அதஃபரம்” என்றெழுதி கையொப்பம் இட்டார். “சிவம்” என்பது சிவனைக் குறிப்பதல்லாமல் ‘ஆழாக்கு போல ஒரு முகக்கும் அளவையும் குறிக்கும். ஸ்ரீ கூரத்தார் அதை சிலேடையாக்கி அதை விட ‘த்ரோணம்’ என்ற முகக்கும் கருவி பெரியது எனப் பொருள்படும் வாக்கியத்தை எழுதினார் என்பர்.

9

8ஸ்ரீமஹாஸ்வாமிகள் ” சோழமன்னன் எந்த நோக்கத்தோடு சிவனுக்கு மேல் ஒன்றுமில்லை என கூரத்தாழ்வானை ஒப்புக் கொள்ளக் கட்டாயப்படுத்தினானோ- ஆனால் மஹா ஞானியும், பண்டிதனும், பாகவதனும் ஆன கூரத்தாழவான் வேடிக்கைக்காகக்கூட சிவ தூஷணை தவனிக்கப்பதில் அளித்திருக்க மாட்டார். எனவே இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும் எனத்தோன்றியது.
சிவலிங்கத்தை அலங்கரிக்கும் போது, அதன் உச்சியில் விலவ இலைகளிச் சூடுவர். ஆம், “த்ரோணம்” என்றால் வில்வம் என்றும் பொருள்படும்.

” சிவனுக்கு மேலே ஒன்றுமில்லை” என்பதற்குப் பரம பாகவதனான கூரத்தாழ்வார் ” அதற்கு மேலே வில்வம் இருக்கிறது” என்று பொருள்படத்தான் மாற்றுரைதிருப்பார்” என்று விளக்கி உள்ளார்.

மஹான்கள் பார்வையே தனி.

அவர்கள் பூஜை செய்யும் போது அந்த அந்த மந்திரங்களின் அதிதேவதைகள் நேர்வந்து அவற்றை ஏற்கும்.

” பவ சங்கர தேசிக மேசரணம்! “

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *