மலேசிய இந்து சங்கத்தின் மூலம் கப்பலோட்டிய தமிழன் பெயரனுக்கு வாழ்நாள் சாதனயாளர் விருது
பவள சங்கரி
வாழ்நாள் வல்லமையாளர் விருது பெற்ற ஐயா திரு ப. முத்துக்குமார சாமி அவர்களுக்கு வல்லமையின் பாராட்டுகள்.
திரு. ப. முத்துக்குமார சுவாமி அவர்கள் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்திலும், தருமபுரம் பல்கலைக் கல்லூரியிலும் கல்வி பயின்றவர். அரசுப் பணியிலிருந்து 1993 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். ஆன்மீகம், சுய முன்னேற்றம், திறனாய்வு இலக்கியம், ஒப்பீட்டு இலக்கியம், இதழ் தொகுப்புகள், அறிஞர்களின் வாழ்வியல், சரிதை நூல்கள், உலக அறிஞர்களின் பொன்மொழித் தொகுப்புகள் என நூறு நூல்களை தமிழுக்குத் தந்தவர்.
1972 இல் ‘கவியரசர் கண்ணதாசன் கவிதைகள் ஒரு மதிப்பீடு’ என்ற திறனாய்வு நூலுக்கு மாநில அளவில் முதர்பரிசினைப் பெற்றவர். வேளாண் விஞ்ஞானி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களது வாழ்வியல் சரிதைகளையும், வேளாண் துறை ஆய்வுகளையும் விளக்கிப் படைத்த இவரது நூலுக்கு மேனாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு கே.ஆர்.நாராயணன் அவர்கள் விரிவான அணிந்துரை வழங்கி பாராட்டியுள்ளார். 2004 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான முதற் பரிசினையும் , திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் முதற் பரிசும், விருதும், மலேசியா நாட்டின் அபூர்வாஸ் நிறுவனத்தின் 2005 ஆம் ஆண்டின் நிறுவன நாள் விருதும், 2008 ஆம் ஆண்டு சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் சிறந்த நூலுக்கான விருதும், 2009 ஆம் ஆண்டு சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சான்றோர் விருதும், 2011 ஆம் ஆண்டு தில்லி தமிழ்ச் சங்கத்தின் விருதினையும் பெற்றவர்.
எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழுக்கும் , சைவத்திற்கும், நாட்டு விடுதலைக்கும் நாயகனாக முன்னின்று நாளெல்லாம் உழைத்து, பொருளெல்லாம் இழந்து, புகழ் சேர்த்த கப்பலோட்டிய தமிழன் என்று வையகமே பாராட்டும் வ.உ. சிதம்பரனாரின் வம்சாவளிப் பெயரன் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.