திருமால் திருப்புகழ் (131)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————-
’’கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————-
ரங்கா, அலர்மேல்வாழ் மங்கா, அரவணைக்கும்,
அங்கா, அசுரர்க்(கு) அரியுருவில், -சிங்கா,
பிரித்தாலும் மங்கா, பரிபூர்ண பங்கா,
உரித்தாவாய் என்னை உவந்து….(302)
சகஸ்ரமவன் நாமம், சகலமவன் ரூபம்,
ரகஸ்யமவன் மாயை, ரசிப்போர், -அகஸ்மாத்தாய்,
வானம் வசப்பட, நானவன் தானென்ற,
ஞானத்தில் நிற்பார் நிலைத்து….(303)
தீனர்க்(கு) அருளூற்றாய், ஈனர்க்(கு) இருள்கூற்றாய்,
மீனமாய் ஏனசிம்ம வாமன, -மூணான,
ராம, கிருஷ்ண, கலிபுருஷ னாய்வந்த,
நாம சகஸ்ரனை நாடு….(304)
எங்குநாம் சென்றாலும், அங்கவன் முன்னம்போய்,
தங்கு தடைகள் தவிர்த்திடுவான், -செங்கண்மால்,
தாளிரெண்டைப் பற்றித், துதிப்போர்தம் தீவினை,
தாளிரெண் டாகும் தெறித்து….(305)
இங்கிருப்ப தெல்லாம், இறப்பும் பிறப்புமாம்,
எங்கெங்கும் என்றும் எதிலுமுள்ள, -செங்கண்மால்,
இல்லா இடத்திலும், இல்லா(து) இருந்திடுவான்,
பொல்லாப் பயலவனைப் பேணு….(306)
உண்டா கடவுளென்றால், உண்டவன் கண்ணனென்பேன்,
கண்டதுண்டா என்றால், கருத்தவனை, -விண்டுரைத்த,
ஆழ்வார்கள் பாட்டில், அதிலொன்றுக்(கு) ஈடாக,
பாழ்வாய் புகல்கையில் பார்….(307)
—————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/2013_12_01_archive.html