“பள்ளு இலக்கியம் – முக்கூடற் பள்ளு” – திரு சொ.வினைதீர்த்தான் உரை

0

12.07.2014 சனிக்கிழமையன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க இலக்கியக் கூட்டத்தில் “பள்ளு இலக்கியம்-முக்கூடற்பள்ளு” குறித்துத் திரு சொ.வினைதீர்த்தான் சிறப்புரையாற்றினார். காரைக்குடியில் ஒவ்வொரு திங்களும் இரண்டாவது சனிக்கிழமையன்று மாலை சங்கத்தின் சார்ப்பாக இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2004 தொடங்கி நடக்கிற நிகழ்வில் இது எழுபத்து நான்காவது கூட்டமாகும். காப்பியங்கள், பதினெண் கீழ்கணக்கு நூல்கள், இலக்கண நூல் வரிசை அனைத்தும் பேசப்பட்டுத் தற்போது சிற்றிலக்கியங்கள் வரிசை தொடங்கப்பட்டுள்ளது. சுப்பிரமணியபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாக வகுப்பறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முக்கூடற்பள்ளு இலக்கியத்தில் ‘கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள்’ “ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி”, ‘காயக் கண்டது சூரிய காந்தி,’ என்று தொடங்கும் மூன்று பாடல்களே தெரிந்த நிலையில் இணையத்திலிருந்து பள்ளு இலக்கியம் பற்றிய பதிவுகளைப் பார்த்தும் தமிழ் இணையப் பல்கலைக் கழகத் தளத்திலிருந்த உரையைப் படித்தும், முனைவர் நாகநாதன் உதவிய புலியூர்க் கேசிகன் உரையுடன் உள்ள செண்பகா பதிப்பக நூலை உள்வாங்கியும் தன் உரையை அமைத்துக்கொண்டதாகக் கூறித் திரு வினைதீர்த்தான் தன் உரையைத் தொடங்கினார்.

அவர் உரையில் மேலும் கூறிய செய்திகள் வருமாறு:
பள்ளத்தில் பயிர் செய்த மருத நில மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் இலக்கியம் பள்ளு இலக்கியமாகும். ஈழத்தில் எழுந்த 6 பள்ளு நூல்கள் உட்பட 35 பள்ளு நூல்களின் பெயர்கள் அறியப்பட்டுள்ளன. பள்ளு இலக்கியத்தில் தலை சிறந்த நூல் ‘முக்கூடற் பள்ளு’ ஆகும். இதில் கூறப்படுகிற காவை வடமலைப் பிள்ளை காலத்தை வைத்துப் பார்க்கும்போது இந்நூல் 1780ல் பாடப்பட்ட நூல் என்று தெரியவருகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பொருநை நதி, சிற்றாறு என்னும் சித்ராநதி, காட்டாறு ஆகிய மூன்று நதிகள் கூடுகிற இன்று சீவலப்பேரி என்று அழைக்கப்படுகிற முக்கூடல் ஊரில் கோவில்கொண்டுள்ள அழகருடைய பண்ணையில் வேலை பார்ப்பவன் வடிவழகக்குடும்பன். திருமாலைத் தொழாத பேரை இரண்டுகால் மாடெனவே கொழுவில் பூட்டி விரட்டி உழுவேன் என்று சொல்லும் தீவீரமான வைணவன். அவனுக்கு மாமன் மகள் மூத்த பள்ளி. அவன் கண்டு ஆசைப்பட்டு இரண்டாவதாகக் கட்டிக்கொண்டவள் மருதூர்ப் பள்ளியாகிய இளைய பள்ளி. சிவநெறி சார்ந்தவள்.

இவர்களுடைய வாழ்வில் பயிரிடும் ஒருபோகத்திற்கான பயிர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் பதிவு இந்நூல். பலவகையான உழவுக் கருவிகள், பகல் உண்ட உணவு எந்த அரிசி என்று தெரியாத இக்காலத்தில் வியப்புடன் நாம் அறிய வேண்டிய அன்றிருந்த நெல்வகைகள், மாடுகள், அவற்றின் சுழிவகைகள், மீன் வகைகள் என நூலில் ஏராளமான செய்திகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார்.

மேலும் கீழ்க்கண்ட சமுதாய, உளவியல் சிந்தனைகளை நூலிலுள்ள பாடல்கள் வழி ஆய்வுரையாகத் தொடர்ந்தார்.

1.பள்ளர்களைத் தூரப் போ என்று விலக்கும் சமுதாய நிலை
2. ஆனாலும் தக்க வேளாண்மை மூலம் மைக்கடல் முத்துக் கீடாய் மிக்கநெல் உண்டாக்கும் தான் தூரப் போகச் சொல்லும் மக்களின் பக்கமே என்றும் அழகர் என்று முக்கூடலுக்கு வந்தாரோ அன்றே அடியாராக வந்த பரம்பரை தன்னுடையது என்றும் பெருமிதம் கொள்ளும் குடும்பப் பள்ளன்.
3.பண்ணைக்காரனை வேடிக்கை மனிதனாக வர்ணிப்பதின் மூலம் மக்கள் மனதில் பண்ணையின் கங்காணியான பண்ணைக்காரனின் தாழ் நிலை.
4.ஆண்டை, நாயானார் என்று பண்ணைகாரனை அழைக்க வேண்டிய அடிமைத் தொழிலாளி.
5.வேலை செய்யத் தவறிய பள்ளனுக்குக் காலில் கட்டையைக் கட்டித் தொழுவத்தில் அடைக்குமளவுக்குத் தண்டனை அளிக்கப் பண்ணைக்காரனுக்கு அதிகாரம் கொடுத்திருந்த அன்றிருந்த அரசியல் நிலை.
6.விளைந்த நெல் விளைவித்தவனுக்கு உரிய அளவில் கிடைக்காமல் மடத்துக்கும், சுவாமி கட்டளைகளுக்கும், பிறவற்றிற்கும் சென்ற நிலை.
7.இரண்டு மனைவிகளின் சக்களத்தி மனச்சிக்கல்கள், அதனால் குடும்பத்தில் விளையும் துன்பம், அங்கு ஆணின் நிலை.
8.அந்த மனைவியரிடையே எழும் பூசல் அவரவரின் கடவுளர் வரை சென்று கடவுளரையும் தூற்றல்.
9.தூற்றலிலும் கடவுளைப் போற்றும் உளவியல்.
10.மக்களின் கடவுளர்கள். அவர்களுக்கு விரைய வெட்டும் செங்கிடாயும் குடத்திலிடும் கள்ளும்.
11.ஆணும் பெண்ணும் சேர்ந்து அலுப்பில்லாமல் செய்யும் உழவு வேலைகள். இனக்கவர்ச்சியால் எழும் சிக்கல்கள்.
12.கம்பனுக்கு ஈடாகக் கவிநயத்துடன் முக்கூடல் பள்ளு ஆசிரியன் காண விரும்பிய கற்பனை நாடு,

சந்தமும், பண்ணும் அமைந்த நாடகப் பாடல்களின் சொல்நயமும் பொருள் நயமும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

நண்பர்களைக் கீழ்க்கண்ட தளத்தில் நூலைப் படிக்க வேண்டி நன்றி தெரிவித்து உரை நிறைவுசெய்யப்பட்டது –  http://www.tamilvu.org/library/libindex.htm

1

2

3

4

5

6

படங்கள்:
1.சங்கத்தின் செயலர் திரு ஜனநேசனுடன் திரு வினைதீர்த்தான்
2.திரு சொ.வினைதீர்த்தான்
3.துணைவியார் திருமிகு அன்னபூரணியுடன்
4.சங்கத் தலைவர் திரு மாதவன் திரு வினைதீர்த்தானுக்கு நினைவுப்பரிசு வழங்குதல்
5.கற்றறிந்த ஆன்றோர் அவையினர்
6.கருதுரைக்கும் பேரா. ஆறு.மெய்யாண்டவரும் காப்பியக் கவிஞர் மீனவனாரும் உள்ள ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *