என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி?
–கவிஞர் காவிரிமைந்தன்
கூட்டம் கூட்டமாய்க் கொள்ளையிட வரவில்லை
கொட்டி அளந்து குளிர்விக்க வருகிற மழைத்துளி!
எந்த இடத்தில் விழுவோம் என்று திட்டமில்லாமல்
எங்கும் எதிலும் இணைவோம் என்று சொல்கிற மழைத்துளி!
வானம்வழங்கிய கொடை நாங்கள் தாகம் தீர்க்கவந்தோமென்று
மண்ணில்விழுந்த மறுநொடியே தன்னிறம்மாறும் மழைத்துளி!
உயிர்கள் வாழ ஆதாரம் அதை உணர்ந்தவர் நாங்கள்
உடனடிச் சேவைப்பிரிவுபோல ஓடிவருகிற மழைத்துளி!
தன்னலமேதும் எங்களுக்கின்றி இருப்பதெல்லாம் கொடுப்பதனால்
கர்ணனை மிஞ்சிய கர்வம் கொள்ளும் மழைத்துளி!
கடலில் விழுந்தபோதிலும் மீண்டும் ஜனனம் எடுத்தேனும்
மனிதஉயிர்கள் பயனுறவே மண்ணில்விழுந்திடும் மழைத்துளி!
பிறவியின் பயன் என்னவென்று பிறந்தவர் யாரும் சொல்லவில்லை!
மழையாய், துளியாய் பிறந்ததுவும் மகத்துவம் கண்டது மழைத்துளி!
வானம்பொய்த்துப் போய்விட்டால் வையகம் வாழ்ந்திட வழியில்லை!
நுண்ணுயிர்வரையில் வாழ்வதற்கே வருக! வருக! மழைத்துளி!!
உயர்ந்த தத்துவத்தை ” மழைத்துளி ” கொண்டு மனங்களில் பதிய வைத்துள்ளீர்கள்.
‘ செம்புனல் பெயர் நீர் போல அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே ‘ என்னும்
சங்கத்தமிழை தங்களின் கவிதைவரிகள் நினைவு படுத்துகின்றன.
நல்ல கவிதை. சிறந்த கற்பனை.
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஜெயராமசர்மா.
“கூட்டம் கூட்டமாய் கொள்ளையிட வரவில்லை
கொட்டி அளந்து குளிர்விக்க வருகிற மழைத்துளி!
எந்த இடத்தில் விழுவோம் என்று திட்டமில்லாமல்
எங்கும் எதிலும் இணைவோம் என்று சொல்கிற மழைத்துளி!
பிறவியின் பயன் என்னவென்று பிறந்தவர் யாரும் சொல்லவில்லை!
மழையாய் துளியாய் பிறந்ததுவும் மகத்துவம் கண்டது மழைத்துளி!!”